பெலிஸ்தியர்கள் சவுலுக்கு விரோதமாக படையெடுத்துவந்தபோது, தேசத்தின் ஜனங்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லாதிருந்தது. ராஜாவாகிய சவுலும், ராஜாவின் மகன் யோனத்தானும் மட்டுமே தங்கள் கைகளில் பட்டயங்களை வைத்திருந்தனர். எனவே, பெலனை அதிகரிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், ஜனங்களைச் சாப்பிடாதிருக்கும்படியாக ஆணையிட்டிருந்தான் ராஜாவாகிய சவுல். ஆனால், தகப்பன் சொன்னதை அறியாதவனாக ஆயுததாரியை உடன் கூட்டிக்கொண்டு பெலிஸ்தியரின் தாணையத்திற்குள் சென்று, பெலிஸ்தியரை முறியடித்து வெற்றியும் பெற்ற சவுலின் குமாரனாகிய யோனத்தான், திரும்பி வரும் வழியில் ஒரு தேன்கூட்டைக் கண்டு அதிலிருந்து தேனை எடுத்து சாப்பிட்டவனாக, 'எல்லாரும் சாப்பிட்டிருந்தால் கொள்ளை எத்தனை அதிகமாயிருந்திருக்கும்" என்று நினைத்தான். ஆனால், தகப்பனாகிய சவுலுக்கு இது தெரியவந்தபோது, சவுல் மிகுந்த கோபம் கொண்டான். அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான்வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் (1சாமு 14:44) என்று சொல்லுகின்றான்.
பிரியமான வாலிபரே! உங்களுடைய தீர்மானங்களும், திட்டங்களும் குடும்பத்தாருக்குத் தெரியவரும்போது, 'எங்களிடம் கேட்காமல் ஏன் இப்படி தீர்மானித்தாய்?' என்று குடும்பத்தினர் உங்களிடம் கேள்வி கேட்கும் நிலை உருவாகலாம். கல்லூரிக்குப் படிக்கவா அல்லது ஜெபிக்கவா எதற்குப் போகிறாய்? என்று உங்களுடைய தீர்மானங்கள் ஒருவேளை அசட்டை செய்யப்படக்கூடும்.
தாவீதின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்டச் சூழ்நிலை உண்டானது. யுத்தகளத்தில் இருந்த மனுஷரோடே தாவீது பேசிக்கொண்டிருக்கிறதை தாவீதின் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின் மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும் உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான் (1சாமு 17:28) அல்லவா. பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர் இவர்கள் மாத்திரமல்ல, சபை விசுவாசிகள், போதகர்கள் மூலமாகவும் நம்முடைய தீர்மானங்களுக்கு எதிர்ப்புகள் உண்டாகலாம்; என்றபோதிலும் நீங்கள் பய்பபடாமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லுவீர்களென்றால், வாசல்களைத் திறக்கவும், உங்களுக்காக காரியங்களை ஜெயமாக மாற்றவும் தேவன் போதுமானவர்.
இஸ்ரவேலருக்கு எதிராக பெலிஸ்தியர்கள் ஆயுதங்களோடு வந்திருந்தார்கள்; ஆனால், இஸ்ரவேலரிடத்திலோ ஆயுதங்கள் இல்லாதிருந்தது. பெலிஸ்தியரின் சேனையில் கோலியாத் போர்க்கவசங்களோடு நின்றுகொண்டிருந்தான்;; ஆனால், தாவிதோ கூழாங்கல்லோடு சென்றான். கோலியாத்தினிடத்தில் எல்லாம் இருந்தது, தாவீதினிடத்திலோ ஒன்றுமில்லை. என்றபோதிலும், 'அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே" (1சாமு. 17:36) என்று சொன்னவனாக தேவனால் வெற்றியை வசப்படுத்தினான் தாவீது.
அவ்வாறே, 'விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்துக்குப் போவோம் வா. ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை" என்று தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கிச் சொன்னவனாக (1சாமு. 14:6) தேவனால் வெற்றியை வசப்படுத்தினான் யோனத்தான்.
பிரியமான வாலிபரே! யோனத்தானும், தாவீதும் வித்தியாசமானவர்களாயிருந்ததினால் அல்லவோ தன் ஜனத்திற்கு வெற்றியைக் கொண்டுவந்தார்கள். ஆம், தேவன் உடனிருந்தால், பக்கத்திலிருக்கும் ஆயிரமும் வலதுபுறத்திலிருக்கும் பதினாயிரமும் உங்களைச் சேதப்படுத்தாது; கண்களால் மட்டுமே அவைகளைப் பார்ப்பீர்கள். உறங்காமலும் தூங்காமலும் உங்களைக் காப்பவர் உங்களுடன் உண்டு. எனவே, எதிராக வரும் சவால்களைக் கண்டு நீங்கள் கலங்கவேண்டிய அவசியமில்லை. பராக்கிரமங்களைச் செய்கிற தேவனின் தோளில் நீங்கள் இருக்கிறீர்கள்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது. உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்க அழைக்கப்பட்டவர்களல்ல நீங்கள். படைத்தவருக்கு எதிர் திசையில் இன்றைய உலகம் சென்றுகொண்டிருக்க, தேவப் பிள்ளைகளாகிய நீங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்துங்கள். 'வித்தியாசமுள்ளவர்களாக வாழுங்கள், வித்தியாசமாக வாழுவோரை உருவாக்குங்கள்."
(சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் எழுதிய வித்தியாசமுள்ளவனாயிரு புத்தகத்திலிருந்து)