May 2026

 

கிறிஸ்துவுக்குள் அருமையான தம்பி, தங்கச்சி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். இன்றைய நாட்களில் நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிய  கனவுகளோடு இருக்கிறீர்களா? தேவனால் உயர்த்தப்படவேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறீர்களா? தேவன் உங்களை எந்த இடத்தில், எப்படியாக உயர்த்த விரும்புகிறாரோ, அந்த இடத்திற்கு உயர்த்தப்பட  உங்களை ஆயத்தப்படுத்தும் முக்கியமான உண்மையை வேத வசனத்தின் மூலம் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

இளமைப் பருவம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமாக,  உருவாக்கப்படும் காலமாகும். இப்பருவத்தில், நீங்கள் உங்களுக்காக ஒரு அடையாளத்தைத் தேடிக்கொள்ள விரும்பலாம்; யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல், உங்களின் விருப்பப்படி வாழ வேண்டும் என்று நினைக்கலாம்;ஆனால், வேத வசனம் நமக்குக் கற்றுக்கொடுப்பது என்ன? எது நமக்கு தகுதியானது? எது நமக்கு நல்லது? என்பதையே. 

வேதாகமத்தின் அடிப்படை உண்மை : புலம்பல் 3 : 27 -ல் 'மனுஷன் தன் இளம் பிராயத்தில்  நுகத்தைச் சுமப்பது அவனுக்கு நல்லது" என்று வாசிக்கின்றோம். இந்த வசனம் முதலாவது கடினமாகத் தோன்றலாம்.  ஆனால், அதில் ஒரு ஆழமான உண்மை இருக்கிறது. தேவன் உங்களை எடுத்துச் செல்லும் பயணம் ஒருவேளை கடினமாகத் தோன்றலாம். அந்தக் கடினமானப் பாதையின் வழியாக உங்களை எடுத்துச் சென்று பழக்குவித்து, பலப்படுத்தி, தகுதிப்படுத்தி  கைகளில் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்து, அநேகருக்கு ஆசீர்வாதமாக உங்களை தேவன்  மாற்றுவார். 

வாலிபனே, உன் வாழ்க்கையில் நீ சுமக்கின்ற  நுகங்கள், உன் வாழ்க்கையை உருவாக்கும். எடுத்துக்காட்டாக, பெற்றோர் அநேக நேரம் இதைச் செய்யாதே, நேரத்துக்கு வா, நன்றாகப் படி, ஞாயிற்றுக்கிழமை ஒழுங்காக ஆராதனைக்குப் போ, வேதம் வாசித்து ஜெபம் செய் என்று சொல்பவைகள் எல்லாம், உன் எதிர்காலத்தை உருவாக்குகின்ற நுகங்களே!  

நுகத்தை ஏற்றுக்கொள்ளும்  மூன்று வழிகள் : 

1. பணிவு அல்லது அடங்கி இருத்தல் : 1 பேதுரு 5 : 5, 6 வசனங்களில் இளைஞர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று பேதுரு கூறுகிறார். மனத் தாழ்மையோடு, தங்களுக்கு மேலானவர்களுக்குக் கீழ்ப்படிந்து, தேவனுடைய பலத்த கைக்குள் அடங்கியிருக்கவேண்டும். இளைஞர்களாகிய உங்களின் எண்ணங்கள் அநேக நேரம், 'எனக்கு எல்லாம் தெரியும், என்னால் எல்லாம் செய்ய முடியும், யாருக்கும் நான் அடங்கி இருக்க விருப்பமில்லை" என்பதுதான். 

எஸ்தர் மனத் தாழ்மையோடு, பணிவோடு, தன்னை வளர்த்த மற்றும் தேவன் தெரிந்து கொண்ட ஜனங்களை நேசித்த மொர்தேகாய்க்கு அடங்கி இருந்தாள். தான் பட்டத்து ராணியாக வருவதற்கு தன்னை ஆயத்தம் பண்ணும்படி, தனக்கு மேலாக நியமிக்கப்பட்ட ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமே அல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை. தேவன் இவர்களை எனக்கு மேலாக நியமித்திருக்கிறார் என்ற எண்ணத்தினால் பொறுமையோடு, எந்த முறுமுறுப்பும் இல்லாமல் அடங்கியிருந்ததை நாம் பார்க்கிறோம் (எஸ்தர் 2:15,20). அதன் விளைவு என்ன? எஸ்தர் ராஜாத்தியாக உயர்த்தப்பட்டாள். அவள் மூலம், சொந்த ஜனங்களுக்கு மகிழ்ச்சியும், களிப்பும் உண்டாயிற்று; பகைஞனுடைய சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டன.

அருமையான தம்பி, தங்கச்சி, தேவன் உங்கள் மூலம் பெரிய திட்டங்களை நிறைவேற்றப் போகிறார். அதற்காக உங்களை பழக்குவிக்கிறார் என்பதை அறிந்து, தேவனுடைய பலத்த கைக்குள் பொறுமையாக அடங்கி இருங்கள். உங்களுக்கு மேலாய் வைக்கப்பட்டவர்களுக்கு கீழ்படியுங்கள். தேவன் ஏற்ற காலத்தில் உங்களை அநேகருக்கு ஆசிர்வாதமாக உயர்த்துவார்!

2. பொறுப்புணர்வு : மோசேயின் பணிவிடைக்காரனாகிய யோசுவா என்னும் வாலிபன், மோசேயின் காலத்திற்குப் பின்பு ஒரு பெரிய தலைவனாக உயர்த்தப்பட்டதைப் பார்க்கிறோம். மோசே தன் கைகளை யோசுவாவின் மேல் வைத்தபோது, அவன் ஞானத்தின் ஆவினால் நிறையப்பட்டான் (உபா. 34:9). மோசே செய்யவேண்டிய, தேசத்தைப் பங்கிட்டுக் கொடுக்கின்ற வேலையை யோசுவா செய்யும்படி, ஒரு பெரிய பொறுப்பை தேவன் அவன் கையில் கொடுத்தார் (யோசுவா 1 : 6). 

இந்த யோசுவாவின் துவக்கம், மோசேயின் பணிவிடைக்காரனாகிய வாலிபனாக, மோசே கொடுத்த கட்டளைகளைப் பொறுப்புணர்வோடு செய்கிறவனாக ஆரம்பித்தது. யோசுவாவைப் பார்த்து அமலேக்கியரோடு  யுத்தம் பண்ணு என்று மோசே சொன்னபோது, உடனடியாக கேள்வி கேட்காமல், சந்தேகிக்காமல் தனக்குக் கொடுத்த பொறுப்பை உடனே நிறைவேற்றினான் (யாத. 17:9.10). வேவு பார்க்க சென்றபோதும் மற்றும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் யோசுவா பொறுப்புணர்வோடு நடந்து கொண்டதை வேதத்தில் பார்க்கிறோம். தேவன் யோசுவாவை உயர்த்தினார்.

தாவீதும் கூட தன் வீட்டிலும், வேலையிலும், தன் கையில் கொடுக்கப்பட்ட ஆடுகளைக்குறித்த விஷயத்திலும் பொறுப்புணர்வோடு நடந்து  கொண்டார். இதனால் தாவீது  தேவனால் அபிஷேகம் பெற்று, உயர்த்தப்பட்டார். நீங்களும் இந்த இளவயதில், பொறுப்புணர்வோடு இருந்தால், தேவன் உங்களை நம்பி, பெரிய பொறுப்புகளை உங்கள் கையில் கொடுப்பார்.

3. ஒழுக்கமுள்ள வாழ்க்கை : உன்னுடைய உயர்வுக்கு ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை மிகவும் அவசியமானது. ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு ஒழுக்கத்தை கடைப்பிடிக்காவிட்டால், தோல்வியான வாழ்க்கை வாழ நேரிடும். தானியலும் அவன் நண்பர்களும் அடிமைகளாக பாபிலோனுக்கு வந்தபோது, ராஜ போஜனத்தினால் தாங்கள் தீட்டுப்படக்கூடாது, தேவன் விரும்புகிற ஒழுக்கம், நாங்கள் சாப்பிடும் ஆகாரத்தில் கூட இருக்கவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தோடு வாழ்ந்தார்கள். 

தானியலுக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது, அதுதான் இடைவிடாத ஜெப வாழ்க்கை. தானியலுக்கு விரோதமாக யார் எதிராக வந்தாலும், சட்டங்கள் அவனுக்கு விரோதமாய் இயற்றப்பட்டாலும், சூழ்நிலை கடினமாக இருந்தாலும் தேவனைத் தேடுகிற ஒழுக்கமுள்ள வாழ்க்கையை இழக்கமாட்டேன் என்ற தீர்மானத்தோடு வாழ்ந்தான். அதனால் தான் தானியேலின் காரியம் எல்லா ராஜாக்களின் காலத்திலும், ஜெயமாகவே இருந்தது (தானியேல் 6:18). உயர்ந்த அதிகாரத்தில் வைக்கப்பட்டிருந்தாலும் கூட, சாதாரண அன்றாட காரியங்களிலும் ஒழுக்கம் நிறைந்தவனாகக் காணப்பட்டான். நீங்களும் அந்த ஒழுக்கம் என்ற நுகத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். ஆவிக்குரிய ஒழுக்கத்தை பழக்கமாக்குங்கள்; தேவன் உயர்ந்த ஸ்தானத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்.

இயேசுவின் நுகம் : இரண்டு மாடுகள் அல்லது காளைகள் நுகங்கள் பூட்டப்பட்டு நிலங்களில் உழவுக்காக பயன்படுத்தப்படுவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். நன்றாய் பழக்கப்பட்ட மாட்டை, பழக்கப்படாத மாட்டுடன் நுகத்தில் இணைத்து, பழக்குவிப்பார்கள். இரண்டும் சேர்ந்து நுகத்தினால் இணைக்கப்படும்போது வேலை இலகுவாகி விடுகிறது. அவர்கள் ஒன்றாகச் செயல்படும்போது, ​​தனித்தனியாகச் செய்வதை விட அதிகமாகச் செய்ய முடியும். ஓர் இணைப்பு என்பது ஒரு துணைக் கருவியாகும். மத்தேயு 11 : 27- 29 இல் இயேசு கிறிஸ்து, அவருடைய நுகத்தை நாம் ஏற்றுக் கொள்ளும்போது அது மெதுவானதாக மற்றும் அவரது சுமை இலகுவானதாக இருக்கும் என்று கூறி நம்மை அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவோடு நாம் நுகத்தில் இணைக்கப்படும்போது நாம் தனியாக இல்லை, அவர் நம்மோடு கூட இருக்கிறார். எனவே, 'எனக்கு நியமிக்கப்பட்ட நுகத்தை, சுமையை நான் சுமப்பேன்; தேவனுடைய உதவியோடு, தேவனிடத்தில் கற்றுக்கொண்டு சுமப்பேன்" என்று இன்று ஒரு தீர்மானம் செய்வோம்! அருமையான தம்பி, தங்கச்சி, 'மனுஷனுக்கு நல்லது" என்று சொன்ன நுகத்தை இளவயதில் சுமக்கும் போது, தேவன் உங்களை ஏற்ற காலத்தில் அவருடைய திட்டத்தின் படி உயர்த்துவார். ஆமென்!

April 2026

 

அன்பான வாலிப நண்பர்களே! உங்கள் மேல் நினைவாய் இருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 

'நானோ சிறுமையும் எளிமையுமானவன்! கர்த்தரோ என்மேல் நினைவாய் இருக்கிறார்!!" என்றார் கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவராய்க் காணப்பட்ட தாவீது. ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டிருந்தாலும், அவர் வேளை வரும் வரை எல்லோராலும் மறக்கப்பட்டவர். ஆம், இன்றைய வாலிபர்களின் நிலையும் அப்படித்தானே…! உங்களில் சிலர் அல்லது பலர் தழடிடநளளஇ டயல ழககஇ பேப்பர் போட்டுவிட்டேன்… என இன்னும் நிறைய சவால்கள் நிறைந்த பாதைகளின் வழியாய் போய்க்கொண்டிருப்பீர்கள். ஆனால், கர்த்தர் உங்களை நினைத்தால் அது போதுமே!

வேதத்தில் 'சகரியா" என்ற பெயரில் கிட்டத்தட்ட 30 பேர் உண்டு. அந்த பெயரின் அர்த்தம் 'யெஹோவா நினைவுகூறுகிறார்"(Yahweh Remembers) என்பது. இஸ்ரவேல் மற்றும் யூதர்களின் சரித்திரங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, யூதர்கள் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போகும் முன்பும், அப்புறம் ஆலயத்தைக் கட்ட சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பின்பும், இதே பெயரில் வரும் இரண்டு வாலிபரை நாம் வேதத்திலே சந்திப்போமா?

யோய்தா என்ற மிகச் சிறந்த ஆசாரியனால் 7 ஆண்டுகள் பொத்தி பாதுகாத்து வைக்கப்பட்டு, 7 வயதிலேயே யூதாவின் எருசலேமிலே தாவீதின் சிங்காசனத்தில் ராஜாவானார் யோவாஸ். தகப்பனில்லாத அவருக்கு ஆசாரியனாகிய யோய்தா தான் எல்லாமே. யோய்தா உயிரோடிருந்த நாளெல்லாம் அவர் சொற்கேட்டு நடந்ததால், பெரிய சீர்திருத்தங்களையும், தேவாலயத்தைச் சுத்திகரிப்பதையும் சிறந்த முறையில் செய்தார். ஆனால், யோய்தாவின் காலம் முடிந்தபோதோ, பிரபுக்கள் மற்றும் மக்கள் சொல்வதைக் கேட்டு, கர்த்தரை விட்டுவிட்டு, அந்நிய தெய்வங்களை உள்ளே கொண்டுவந்து விட்டார்கள் (2நாளாகமம் 24:15-22). அங்கே தான் வெகுண்டு எழுகிறான் யோய்தாவின் குமாரனான வாலிபனாகிய சகரியா! யோவாஸ் ராஜாவுடன் சிறுவயதிலிருந்தே ஒன்றாக உண்டு உறவாடி விளையாடியவன், ஆனால் இன்று எதிர்த்து நிற்கிறான். ஒரு தீர்க்கதரிசியாக உருவெடுத்து நிற்கிறான்… தேவனுடைய ஆவியினால் நிறைந்து, 'நீங்கள் கற்பனைகளை மீறுகிறது என்ன? கர்த்தர் உங்களைக் கைவிடுவார்" என்கிறான். ஜீவனையும் பணயம் வைத்து துணிச்சலாக. விளைவு, இரத்தசாட்சிகளின் பட்டியலில் இடம் பிடிக்கிறான். ஆலயப்பிரகாரத்திலே ராஜாவின் கட்டளைப்படி கல்லெறிந்து கொல்லப்படுகிறான். இவரைப் பற்றி வேறு காரியங்கள் எதுவும் தெரியாவிடினும், தேவனால் ஆசாரிய ஊழியத்திற்கென்று தெரிந்தெடுக்கப்பட்ட ஆரோனின் பேரன் பினெகாஸ் போன்று வைராக்கியம் பிடித்த ஆசாரியப் பரம்பரை! என்பது தெளிவு. ஏபிரெயர் 12:4 ன் படி 'பாவத்திற்கு விரோதமாய் போராடுகிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே!" வாலிப தம்பி தங்கையே! உங்களுடைய சொந்த வாழ்க்கையிலும் படிக்கிற இடங்களிலும் அல்லது வேலையிடங்களிலும் கூட இதுபோன்ற எதிர்த்து தனித்;து நிற்கும் அனுபவம் உண்டா? அப்படியானால் கர்த்தர் உங்களை விசேஷமாய் நினைக்கிறார்.

சிறிய தீர்க்கதரிசிகளின் வரிசையில் கடைசிக்கு முந்தின புத்தகமாக வரும் சகரியா தீர்க்கதரிசி தான் இரண்டாம் நபர். வாலிபனான சகரியா ஒரு வல்லமையான தீர்க்கதரிசி" எப்படி..? பெரிய தீர்க்கதரிசி ஏசாயா தரிசித்த (ஏசாயா 6:5) சேனைகளின் கர்த்தராகிய இராஜாவை, கேரூபீன்கள், சேராபீன்களாகிய பரலோக தூதர் சேனைகளோடு பெரிய ஆர்மியை, சிறிய ஆனால் துடிப்பான வாலிபன் தரிசித்துவிட்டார் அல்லவா! ஆம்! உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா? தனியாக உட்கார்ந்து வேதத்தின் வெளிச்சத்திலே தேவனை தரிசிக்க முடிகிறதா? 'சேனைகளின் கர்த்தர்" என்னும் நாமம் (சகரியா புத்தகத்தில் 50க்கும் அதிகமான முறை) திரும்பத் திரும்ப வசனத்திற்கு வசனம் வருகிறதோடு 'சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" என்று மாபெரும் மிலிட்டரியின் கேப்டனுடைய கட்டளையாக வெளிப்படுகிறது! 

இவரின் முதல் தீர்க்கதரிசன வார்த்தையே, 'என்னிடத்தில் திரும்புங்கள்" அல்லது 'மனம்திரும்புங்கள்" என்று புதிய ஏற்பாட்டிலே யோவான் ஸ்நானகனும் நம் இரட்சகர் இயேசுவும் சொல்லி அழைத்த வார்த்தைகள் தான் வாலிபன் சகரியாவின் வாயிலிருந்தும் வெளிப்படுகின்றன. இன்றும் இப்படிப்பட்ட செய்திகள் மிகவும் அவசியமல்லவா? 

பாபிலோனிலே பிறந்து வளர்ந்து, அக்கினிக்கிரையான தேவாலயம் திரும்பக் கட்டப்பட செருபாபேல் மற்றும் பிரதான ஆசாரியனாகிய யோசுவா தலைமையில் இஸ்ரவேல் நாடு திரும்பிய இவரை, சேனைகளின் கர்த்தரின் வைராக்கியம் பற்றியெரியச் செய்தது. உலகமே எதிர்த்தாலும் நான் உங்களோடு இருக்கிறேன் என்று கர்த்தர் தமது ஜனத்திற்காக காட்டும் வைராக்கியம் எத்தனை மகா உக்கிரமாகத் தெரிகிறது (சகரியா 1:14; 8:1-3). வாலிப தம்பி தங்கையே! இன்றைய சபைகளைக் குறித்த பக்திவைராக்கியம் இயேசு சொன்னதைப் போல நம்மைப் பட்சிக்கிறதா? (யோவான் 2:17). தேவாலயம் கட்ட வந்தவர்கள் தம் சொந்த வீடுகளையும் சொந்த அலுவல்களையும் பார்த்து உல்லாசமாய் வாழ்ந்தபோது, திரும்ப எடுத்துக் கட்டுவதற்கு ஜனங்களை உற்சாகப்படுத்தி 'திடன்கொள்ளச் செய்தார்" இவர். (எஸ்ரா 5:1,2) தனியாக அல்ல, நல்ல மூத்த அனுபவமிக்க ஆகாய் தீர்க்கதரிசியோடு நின்றார். 

அற்பமாய் செருபாபேலால் அஸ்திபாரம் போட்டு ஆரம்பிக்கப்பட்ட வேலை ஸ்தம்பித்தபோது, 'நீர் தான் இதை செய்துமுடிக்கப்போகிறீர். உமக்கு முன்பாக பெரிய பர்வதமாயிருந்தாலும் எம்மாத்திரம்! ஆவியானவர் பெலன் தந்து கிருபை தந்து சேனைகளின் கர்த்தர் கூட இருந்து செய்து முடிப்பார். நீர் எடுக்கும் முயற்சிகளை கர்த்தர் சந்தோஷமாய் பார்க்கிறார்." (சகரியா 4:6-10) என்று தலைவர்களையும் உற்சாகப்படுத்தும் சகரியாக்கள் இன்று தேவை! 'come on! வாலிப நண்பா! உன்னில் நற்கிரியையை ஆரம்பித்தவர் அதை முடிவு வரை இயேசுவின் வருகையின் நாள் வரை முடிய நடத்துவார்." (பிலி 1:5) என்ற நம்பிக்கையை நீங்கள் உங்கள் நண்பர்களுக்குச் சொல்லி கையைப் பிடித்துத் தூக்கிவிடுவது உங்களின் பொறுப்புதானே!

நம் ஆண்டவர் இயேசு இரட்சிக்கிறவராக முதல் வருகையில் இப்பூமியில் கழுதையின்மேல் பவணி வருவது (சகரி 9:9), அவர் 30 வெள்ளிக்கு காட்டிக் கொடுக்கப்படுவது (சகரி 11:12), அவரின் மரணம் - குத்தப்படுவது (சகரி 12:10; 13:1,7 மத் 26:31 யோவான் 19:37) இன்னும் பல மிகத் துல்லியமாக இவர் மூலம் முன்னறிவித்தவை அப்படியே நிறைவேறிவிட்டது. இப்போதிருக்கிற எருசலேமின் போர்ப் பதற்றங்கள் பற்றியும், கொடுமையாய் அழிக்கக்கூடிய அணு ஆயதங்களின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் (சகரி 12:2,3; 14:2,12), இயேசுவின் இரண்டாம் வருகையில் பரிசுத்தவான்களோடு கூட ஒலிவமலையில் வந்து இறங்குவது (சகரி 14:4,5) மற்றும் ஆயிரம் வருட அரசாட்சி (சகரி 14:9,16-21) பற்றியும் வெளிப்படுத்தப்பட்டவைகள் துல்லியமாக நிறைவேறக் காத்திருக்கின்றன. இயேசுவின் வருகையைப் பற்றி பேசுவோர் இப்போது மிகக்குறைவு. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதை நம்ப மறுக்கின்றனர். நீங்கள் ஒரு சகரியாவாக இருந்தால் சொல்லவேண்டியது உங்கள் கடமை! வருகையின் நாள் சமீபமே…ஓவ்வொரு நாளும் பரிசுத்தமாய் வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்… பரிசுத்தமாயிருக்கிறவன் இன்னும் ... நீதி செய்கிறவன் இன்னும் செய்யட்டும்... ஆனால், பரிசுத்தமில்லாதவன் (கானானியன்) அங்கே இருப்பதில்லை... ஆம்! 'சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்பவைகள் தான் சகரியாவின் இறுதி வார்த்தைகள்!

மேஜர் தீர்க்கதரிசிகளாக வரும் ஏசாயா, எசேக்கியேல், தானியேல் போன்றவர்களோடு நின்று, இவரும் பரலோக தரிசனங்களை தூதர்களோடு பேசி கண்டதோடு, நாடுகளின் மேல் வரும் நியாயத்தீர்ப்புகளையும் அறிவிக்கிறார். 

இறுதியாக நம் ஆண்டவர் இயேசு மத்தேயு 23:35 ல் 'ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொலை செய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம் வரைக்கும்" என்று பழைய ஏற்பாட்டு இரத்தசாட்சிகளைப் பற்றி குறிப்பிடுவதைப் பார்க்கும்போது இந்த சகரியாவும் முதலில் கொல்லப்பட்ட அவரைப் போன்றே இரத்தசாட்சியானது எத்தனை பெரிய ஆச்சரியமான ஒற்றுமையைக் காட்டுகிறது. எந்த ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று செருபாபேலையும் மக்களையும் எழும்பிக் கட்டிமுடிக்க கைகளைத் திடப்படுத்தினாரோ அதே ஆலயத்தில் அவர் இரத்தசாட்சியாகிறார். ஒருவேளை அவர் கொல்லப்பட்ட காலம் இரண்டு ஏற்;பாடுகளுக்கும் இடைப்பட்ட கர்த்தர் பேசாதிருந்த 400 வருட இருண்ட காலத்தில் நடந்திருக்கலாம்; அதனால் வேதத்தில் எழுதப்படாமல் இருக்கலாம். ஆனால், நம் ஆண்டவரோ அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார் பாருங்கள்! நீங்கள் ஒரு உண்மையான சகரியாவானால் உங்களுக்குக்கூட இதே நிலை வரலாம்! பரவாயில்லை உங்களை கர்த்தர் கரத்தில் வரைந்தவராய் என்றென்றுமாய் நினைத்திருக்கிறாரே!! நடபடி புஸ்தகம் வாசிக்கப்பட்டு மொர்தெகாய் நினைவு கூறப்பட்டபோது ஒரே இரவிலே காரியங்கள் தலைகீழானதே! நீங்கள் கர்த்தருக்காக செய்யும் ஒவ்வொன்றும் ஞாபக புஸ்தகத்தில் எழுதப்படுவதை அறிவீர்களோ? கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார். (சங்115:12)

March 2026

 


    கிறிஸ்துவுக்குள் பிரியமான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். இந்த உலகத்தில் நாம் வாழும்வரை, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை நோக்கி வரும் ஒவ்வொரு சவால்களையும் நாம் சந்தித்தே ஆகவேண்டும். வாய்ப்புகள் ஒருவேளை நம்மைத் தேடிவராமலிருக்கலாம்; ஆனால், சோதனைகளும் மற்றும் சவால்களும் நம்மைத் தேடி வந்துகொண்டேயிருக்கும் (oppurtunities will not come to you, but temptation will knock at your door). 

என்றபோதிலும், ஒரு மனிதனுக்கு எழும் முதல் சவால், அவனது குடும்பத்திலேயே. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே (மத் 10:36) என்று இயேசுவும் சொல்லியிருக்கின்றாரே. எனவே, வாலிபரே, குடும்பத்தில் எழும் சவால்களைச் சந்திக்க முதலில் நீங்கள் ஆயத்தமாயிருக்கவேண்டும். ஒருவேளை நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், குடும்பத்தாரோ இன்னமும் இரட்சிக்கப்படாத நிலையில் காணப்படலாம். நீங்கள் கிறிஸ்துவுக்கென்று உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கலாம்;; ஆனால், குடும்பமோ உங்களிடமிருந்து அநேக காரியங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கலாம். ஊழியக்காரராக, மிஷனரியாக மாறவேண்டும் அல்லது செல்லவேண்டும் என்று நீங்கள் மனதில் நினைத்துக்கொண்டிருக்கலாம்; ஆனால், தாயோ, தந்தையோ, உடன் பிறந்தவர்களோ, குடும்பமோ, 'நீ நன்றாகப் படித்து, நல்லதோர் வேலைக்குப் போகவேண்டும், உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்' என்று ஆலோசனை சொல்லலாம். தங்களுடைய நினைவுகளும், எண்ணங்களும் மற்றும் தேவைகளும் சந்திக்கப்படவேண்டும் என்ற வாஞ்சையோடு வாழ்ந்துகொண்டிருக்கும் வாலிபர்கள் இந்நாட்களில் ஏராளம். பிரியமான வாலிபரே! பெற்றோர்கள் உங்களைக் குறித்து ஒரு கனவு வைத்திருக்கலாம். ஆவிக்குரிய பெற்றோர்கள் ஆவிக்குரிய கனவோடும், உலகத்திற்குரிய பெற்றோர்கள் உலகத்திற்குரிய கனவோடும் உங்களது எதிர்காலத்தினைப் பார்க்கலாம். என்னைக் காட்டிலும் என் பிள்ளை அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்று உங்களது பெற்றோர் எண்ணலாம்;; இதுதான் இன்றைய உலகம்.

பெலிஸ்தியர்கள் சவுலுக்கு விரோதமாக படையெடுத்துவந்தபோது, தேசத்தின் ஜனங்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லாதிருந்தது. ராஜாவாகிய சவுலும், ராஜாவின் மகன் யோனத்தானும் மட்டுமே தங்கள் கைகளில் பட்டயங்களை வைத்திருந்தனர். எனவே, பெலனை அதிகரிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், ஜனங்களைச் சாப்பிடாதிருக்கும்படியாக ஆணையிட்டிருந்தான் ராஜாவாகிய சவுல். ஆனால், தகப்பன் சொன்னதை அறியாதவனாக ஆயுததாரியை உடன் கூட்டிக்கொண்டு பெலிஸ்தியரின் தாணையத்திற்குள் சென்று, பெலிஸ்தியரை முறியடித்து வெற்றியும் பெற்ற சவுலின் குமாரனாகிய யோனத்தான், திரும்பி வரும் வழியில் ஒரு தேன்கூட்டைக் கண்டு அதிலிருந்து தேனை எடுத்து சாப்பிட்டவனாக, 'எல்லாரும் சாப்பிட்டிருந்தால் கொள்ளை எத்தனை அதிகமாயிருந்திருக்கும்" என்று நினைத்தான். ஆனால், தகப்பனாகிய சவுலுக்கு இது தெரியவந்தபோது, சவுல் மிகுந்த கோபம் கொண்டான். அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான்வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் (1சாமு 14:44) என்று சொல்லுகின்றான்.

பிரியமான வாலிபரே! உங்களுடைய தீர்மானங்களும், திட்டங்களும் குடும்பத்தாருக்குத் தெரியவரும்போது, 'எங்களிடம் கேட்காமல் ஏன் இப்படி தீர்மானித்தாய்?' என்று குடும்பத்தினர் உங்களிடம் கேள்வி கேட்கும் நிலை உருவாகலாம். கல்லூரிக்குப் படிக்கவா அல்லது ஜெபிக்கவா எதற்குப் போகிறாய்? என்று உங்களுடைய தீர்மானங்கள் ஒருவேளை அசட்டை செய்யப்படக்கூடும். 

தாவீதின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்டச் சூழ்நிலை உண்டானது. யுத்தகளத்தில் இருந்த மனுஷரோடே தாவீது பேசிக்கொண்டிருக்கிறதை தாவீதின் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின் மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும் உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான் (1சாமு 17:28) அல்லவா.  பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர் இவர்கள் மாத்திரமல்ல, சபை விசுவாசிகள், போதகர்கள் மூலமாகவும் நம்முடைய தீர்மானங்களுக்கு எதிர்ப்புகள் உண்டாகலாம்; என்றபோதிலும் நீங்கள் பய்பபடாமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லுவீர்களென்றால், வாசல்களைத் திறக்கவும், உங்களுக்காக காரியங்களை ஜெயமாக மாற்றவும் தேவன் போதுமானவர். 

இஸ்ரவேலருக்கு எதிராக பெலிஸ்தியர்கள் ஆயுதங்களோடு வந்திருந்தார்கள்; ஆனால், இஸ்ரவேலரிடத்திலோ ஆயுதங்கள் இல்லாதிருந்தது. பெலிஸ்தியரின் சேனையில் கோலியாத் போர்க்கவசங்களோடு நின்றுகொண்டிருந்தான்;; ஆனால், தாவிதோ கூழாங்கல்லோடு சென்றான். கோலியாத்தினிடத்தில் எல்லாம் இருந்தது, தாவீதினிடத்திலோ ஒன்றுமில்லை. என்றபோதிலும், 'அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே" (1சாமு. 17:36) என்று சொன்னவனாக தேவனால் வெற்றியை வசப்படுத்தினான் தாவீது. 

அவ்வாறே, 'விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்துக்குப் போவோம் வா. ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை" என்று தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கிச் சொன்னவனாக (1சாமு. 14:6) தேவனால் வெற்றியை வசப்படுத்தினான் யோனத்தான். 

பிரியமான வாலிபரே! யோனத்தானும், தாவீதும் வித்தியாசமானவர்களாயிருந்ததினால் அல்லவோ தன் ஜனத்திற்கு வெற்றியைக் கொண்டுவந்தார்கள். ஆம், தேவன் உடனிருந்தால், பக்கத்திலிருக்கும் ஆயிரமும் வலதுபுறத்திலிருக்கும் பதினாயிரமும் உங்களைச் சேதப்படுத்தாது; கண்களால் மட்டுமே அவைகளைப் பார்ப்பீர்கள். உறங்காமலும் தூங்காமலும் உங்களைக் காப்பவர் உங்களுடன் உண்டு. எனவே, எதிராக வரும் சவால்களைக் கண்டு நீங்கள் கலங்கவேண்டிய அவசியமில்லை. பராக்கிரமங்களைச் செய்கிற தேவனின் தோளில் நீங்கள் இருக்கிறீர்கள்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது. உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்க அழைக்கப்பட்டவர்களல்ல நீங்கள். படைத்தவருக்கு எதிர் திசையில் இன்றைய உலகம் சென்றுகொண்டிருக்க, தேவப் பிள்ளைகளாகிய நீங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்துங்கள். 'வித்தியாசமுள்ளவர்களாக வாழுங்கள், வித்தியாசமாக வாழுவோரை உருவாக்குங்கள்."

                                         (சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் எழுதிய   வித்தியாசமுள்ளவனாயிரு புத்தகத்திலிருந்து)

Feb 2026

கிறிஸ்துவுக்குள் அன்பான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். நிலையில்லாத இப்பூமியில் ஆண்டவருக்காக நிற்கும் சாட்சிகளாக அழைக்கப்பட்டவர்கள் நீங்கள்; என்றபோதிலும், வாலிபத்தின் ஓட்டத்தில் ஒருவேளை நான் விழுந்துவிடுவேனோ? என்ற பயத்துடனேயே ஓடிக்கொண்டிருக்கும் வாலிபர்கள் இந்நாட்களில் உண்டு. எங்கே விழுவேன்? எப்படி விழுவேன்? யாரால் விழுவேன்? எதனால் விழுவேன்? ஏன் விழுவேன்? எதற்காக விழுவேன்? போன்ற கேள்விகளை ஒருவேளை சுயமாக நீங்கள் கேட்டுப்பார்த்தால், உத்தரவு கொடுக்க உங்கள் உள்ளத்திற்கும் உதடுகளுக்கும் பெலனிருக்காது. நினையாத நேரத்தில் விழுந்துபோன வாலிபர் பலர்; நினைத்திருந்தும் கவனக்குறைவினால் விழுந்துபோன வாலிபர் பலர்; தடுக்குவதும் மற்றும் தள்ளுவதும் பெலமுள்ளதாயும் தங்களுக்குள்ளோ பெலமில்லாமலிருப்பதினாலும் வீழ்ந்துபோன வாலிபர் பலர்; உதவுவார் மற்றும் தூக்கிவிடுவார் எவருமின்றி ஒண்டியாய் வழிகளில் வீழ்ந்து கிடக்கும் வாலிபர் பலர்; அவ்வாறே, எதிரியின் பாதையில் தொடர்ந்து பயணித்து, தொலைதூரம் சென்றபின்பு வீடு திரும்ப திசையறியாமல் திணறும் வாலிபரும் உண்டு.

                பிரியமான வாலிபரே! பாவத்தினால், பாவம் செய்யும் வாலிபரது வாழ்க்கையில் தன் பெலமே ஓங்கி நிற்கவேண்டும் என்றும், தன் குரலே ஓங்கி ஒலிக்கவேண்டும் என்றும் நினைப்பவன் சத்துரு. எனவே, விழுகையைக் குறித்த பயத்திற்கு இடங்கொடுக்காமல், உங்கள் ஆத்துமாவின் பெலத்தை அதிகரித்து, வாலிபத்தை கிறிஸ்துவுடன் வலிமையுள்ளதாக்கிக்கொள்ளுங்கள்.  

                எப்படியாகிலும் கிறிஸ்துவை விட்டு உங்களைப் பிரித்து, தன்னோடு சேர்த்துவிடவேண்டுமென்று, வெவ்வேறு விதங்களில் உங்களைச் சூழ சத்துரு யுத்தம் செய்துகொண்டிருந்தாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் 'அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" (ரோமர் 8:36,37) என்ற பவுலின் வாழ்க்கை உங்கள் வாழ்க்கையிலும் காணப்படுமாயின் 'நீங்கள் அன்புகூருகின்ற கிறிஸ்துவினாலேயே உங்கள் வாழ்க்கையிலும் ஜெயம் உண்டாகும்" என்பது நிச்சயம். 'உயிரைப் பறித்தாலும் உறுதியாயிருப்போம்" என்று தானியேலைப் போல நீங்கள் நின்றால், பிதாவுடனான உறவினின்று உங்களைப் பிரிக்க பெலனற்றவனாகிவிடுவான் சத்துரு. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் (ரோமர் 8:38,39) என்ற 'அழுத்தமான அர்ப்பணிப்பு" உங்களுக்கு இருந்தால், அச்சம் அவசியமில்லை.

       பிரியமான வாலிபரே, 'தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும், அன்பும், தெளிந்தபுத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்" (2தீமோ. 1:7). அப்படியிருக்க, பயத்தை சத்துரு உங்கள் வாழ்க்கையில் புகுத்தும் சந்துபொந்துகளை அடையாளம் கண்டு அவைகளை அடைத்துவிடுங்கள்; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் (எபே. 4:27). 

     ஆனாலும், நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய மற்றும் ஒரு காரியம் உண்டு; அது, தன் பக்கத்திலிருக்கும் வீழ்ந்தவர்களை, உங்களை வீழ்த்துவதற்காகச் சத்துரு பதிவிருக்கச் செய்வது. ஆம், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் யானைகளை (கும்கி) காட்டிலிருக்கும் பிற யானைகளோடு பழகச்செய்து மனிதர்கள் பிடிப்பதைப் போல, தனது கட்டுப்பாட்டில், தனது வலையில், தனது எல்லைக்குள் மற்றும் தனது சொற்படி கேட்கும் வாலிபர்களைக் கொண்டு, பிற வாலிபர்களை தனது வலைக்குள் இழுக்கும் சத்துருவின் தந்திரத்தை வாலிபராகிய நீங்கள் அறிந்துகொண்டு உங்களைத் தப்புவித்துக்கொள்வது அவசியம். தன்னோடு பேசுகிற மற்றும் பழகுகிறவர்கள் யாரென்ற அறிவில்லாத வாலிபர்களின் வாழ்க்கையிலிருந்து ஆண்டவரை அகற்றிவிட இத்தகைய வாலிபர்களை சத்துரு பயன்படுத்துகின்றான். வீழ்ந்தோரின் சோர்புள்ள வார்த்தைகள், தோல்விக்கான காரணங்களைச் சொல்லும் விதங்கள், அவர்களுக்குள் இருக்கும் பயங்கள், அவிசுவாசம் மற்றும் உலகத்திற்கடுத்த காரியங்கள் உறவில் தொடங்கி உங்கள் உயிரில் கலந்துவிடக்கூடும்; விதையாகி வளர்ந்து, விரோதியின் சத்திரத்திலும் உங்களைச் சேர்த்துவிடக்கூடும்; எச்சரிக்கை!! காயம்பட்டுக் கிடக்கும் நேரத்தில், கண்ணீர் விடுவது யாரென்று தெரியாததினால்,அவர்களுடன் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு தடையமேயில்லாமற்போய்விட்ட வாலிபர்கள் உண்டு. 

ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்ல முதலையின் முதுகில் பயணித்த குரங்கின் நிலையைப் போல வாலிபனே உனது வாழ்கை காணப்படுமாயின்
, இன்றே உன்னைத் தப்புவித்துக்கொள்! இன்றே உன்னைத் தப்புவித்துக்கொள்!!

       

 செத்த ஈக்களை மற்ற ஈக்களோடு கலந்து, மொத்த ஈக்களும் தன்னையே மொய்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுபவன் சத்துரு.  'செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமள தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்" (பிர. 10:1) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே! எனவே, கிறிஸ்துவுக்குத் தூரமானவர்கள் தரும் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளைக் குறித்துக் கவனமாயிருங்கள்; அவைகள் கிறிஸ்துவை விட்டு பிசாசின் எல்லைக்குள்ளாக உங்களை இழுத்துச்சென்றுவிடக்கூடும். அவர்களது உடுத்தும் உலகத்தர ஆடைகள், உலகோரைக் கவரும் சிகை அலங்காரங்கள், உலாத்தும் இடங்கள், அணியும் ஆபரணங்கள் உன்னையும் கவர்ந்து உனக்குக் கண்ணியாகக்கூடும். நேர்வழியாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, இடைவழியில் வரும் இவர்களால் இடறிவிழுந்துவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். இத்தகை மனிதர்களின் வலைகளில் நீங்கள் சிக்கியிருப்பீர்களென்றால், 'வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்" (நீதி. 6:5). அவர்களையும் ஆதாயப்படுத்த முயற்சிக்கிறேன் என்றால், உங்கள் ஆத்துமாவின் பெலத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்; இல்லையேல், அவர்களால் அடித்துச்செல்லபட்டுவிடுவீர்கள். உங்கள் காலடிகள் கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் உறுதியாயிருக்கட்டும்.  உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் அங்கங்களை அழிக்கும் சத்துருவின் அஸ்திரங்களை அடையாளம் கண்டு, உங்களை உயிரோடு காத்துக்கொள்வது உங்கள் கடமையே.

                தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான் (1யோவான் 5:18). இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். (1கொரி. 10:12)


Jan 2025

 



இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரவும், அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷயையும்  கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான். (தானி 1:3,4)

தானியேலும்  அவன் உடனிருந்த வாலிபர்களும் சாதாரணமானவர்கள் அல்ல, அழகானவர்கள், அறிவிலே சிறந்தவர்கள், எதனையும் எளிதாகக் கற்றுக்கொள்ளும் திறமை படைத்தவர்கள். அவர்களுக்கு பாபிலோன் தேசத்திலே, நேபுகாத்நேச்சாரின் அரண்மனையிலே உயர்தர ஆகாரமும், கல்வியும் கொடுக்கப்பட்டது. ராஜாவின் கட்டளையின்படி விசேஷித்தவர்களாக அரண்மனையிலே அந்த வாலிபர்கள் நடத்தப்பட்டார்கள், போஷிக்கபட்டார்கள். தானியேலோ அந்த வாலிபர்களுக்குள் வித்தியாசமுள்ளவனாயிருந்தான். மூன்று வருடங்கள் கொடுக்கப்படும் பயிற்சியைப் பெற்று அரண்மனையிலே பதவியை அடையும் எண்ணம் தானியேலை ஈர்க்கவில்லை. தகப்பனும், தாயும், ஊராரும், உறவினரும் மற்றும் நண்பர்களும் பார்க்கக்கூடாத தேசத்தில் இருந்தாலும், கர்த்தருக்காக வித்தியாசமுள்ளவனாக தானியேல் வாழ விரும்பினான். 

தனிமையில் இருக்கும்போது பல வாலிபர்கள் விழுந்துவிடுகின்றனர். தனித்திருக்கும் நேரத்தில் ரகசிய பாவங்களுக்கு உடன்பட்டுவிடுகின்றனர். உள்ளத்திலே பல நாட்களாக மறைந்து கிடக்கின்ற ரகசிய பாவங்கள் அனைத்தும் அரங்கேறுவது தனிமையிலேயே. அறிந்தவர்களும், தெரிந்தவர்களும் அறியக்கூடாத தூரமான இடத்தில் வாழும்போது, வாழ்க்கையில் சிறந்ததோர் இடத்தைப் பெறும்போது, பாவத்திற்குள் தள்ளி சரீரத்தையும் மனதையும் கெடுத்து, அத்துடன் ஆவியையும் அசுசிப்படுத்துவதற்கு ரகசிய பாவத்திற்கு வலிமை உண்டு. நல்ல குடும்பத்திலும், சபையிலும் இருந்தாலும், தேவ பயமற்ற வாலிபர்கள் ரகசிய பாவத்திற்குள் கிடக்கின்றனர். 

வாலிபனான உனக்கு தானியேலின் வாழ்க்கை ஓர் மாதிரி. தானியேல் விரும்பினதைப் புசிக்கலாம், ராஜாவின் உணவையும், ராஜா குடிக்கும் ரசத்தையும் பருகலாம்; அனைத்தும் அவன் கண்களுக்கு முன்னே, கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது. தானியேல் என்ன செய்தாலும் அவனைக் குற்றப்படுத்த அங்கு யாரும் இல்லை. தானியேல் தனது இஷ்டப்படி வாழ்ந்தால் உடனிருந்த நண்பர்கள் அவனைக் குற்றப்படுத்தும் நிலை உருவாகலாம், ஆனால் மன்னனின் அரண்மனையிலோ தானியேலையும் அவனது போஜனத்தையும் குறித்து குற்றப்படுத்த யாருமில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தேவனுக்குப் பிரியமானவனாகவே வாழ்ந்தான் தானியேல். 

திருடனாய், பொய்யனாய், ஆகாதவனாய், வீம்பு பேசுகிறவனாக தேவனுக்கு விரோதமான காரியங்களுக்குத் தங்களை விற்றுப்போட்டிருந்த பல வாலிபர்களை தேவன் சந்தித்திருக்கின்றார். கூட்டங்களிலோ, முகாம்களிலோ கலந்துகொள்ளும்போது பல வாலிபர்கள் தேவனுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கின்றனர். காலையில் எழுந்து ஜெபிப்பதையும்,  வேதத்தை நிதம் ஆராய்ந்து அறிவதையும் வழக்கமாக்கிக் கொண்ட  வாழ்க்கை வாழும் ஒரு வாலிபன், சோதனையான இடத்தில் வைக்கப்பட்டால் அல்லது அவனது செய்கைகளையோ, வார்த்தைகளையோ, மனதின் காரியங்களையோ எவரும் குற்றப்படுத்தாத இடத்தில் வைக்கப்பட்டால் அவனது நிலை என்ன? 

தானியேலைச் சுற்றியிருந்த வாலிபர்கள் அனைவரும் இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தானியேலுடன் வளர்ந்தவர்களும், வேத வாக்கியங்களை நன்கு அறிந்தவர்களுமாயிருந்தார்கள். யூத குலத்தைச் சேர்ந்த தாய் தனது பிள்ளைக்கு வாரத்திற்கு சுமார் 14 மணி நேரம் இறையியல் சொல்லிக்கொடுப்பது வழக்கம். யூத வாலிபர்களுக்கு வாரத்தில் சுமார் 18 மணி நேரம் ஜெப ஆலயத் தலைவன் ஜெப ஆலயத்திலே இறையியல் சொல்லிக்கொடுப்பது வழக்கம். இப்படி வளர்க்கப்பட்ட யூத வாலிபர்கள் விக்கிரங்களைப் பற்றியும், மதுபானத்தைக் குறித்தும், மற்றவர்களால் உண்டாகும் தீட்டுகளைக் குறித்தும் நன்கு அறிந்தவர்கள், சிறு வயதிலிருந்தே அவைகளைக் குறித்து போதிக்கப்பட்டவர்கள். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட தன் உடன் இருக்கும் யூத வாலிபர்கள், பாபிலோன் தேசத்தில் நேபுகாத்நேச்சாரின் அரண்மனையில் வெறுக்கப்படவேண்டிய அனைத்தையும் சாப்பிடுகிறதை தானியேல் கண்டான். ராஜாவினால் கொடுக்கப்படும் பயிற்சி என்ற எண்ணத்தில் அனைத்தையும் அந்த வாலிபர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.  ஒரு நாளில் தேசத்தில் அதிகாரியாக உயர்த்தபடவிருக்கிறோம் என அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். அருவருப்புகளைச் செய்தவர்கள் இஸ்ரவேல் தேசத்திலே அழிக்கப்பட்டுவிட்டார்கள், தேவனுக்குப் பயந்து வாழ்ந்தபடியினாலேயே தேவன் நம்மை பாபிலோன் தேசத்தில் உயர்த்தி, எல்லாவற்றையும் அனுபவிக்கும் நிலையில் வைத்திருக்கிறார் என அந்த வாலிபர்கள் நினைத்தனர். தேவனுக்குப் பயந்து வாழ்ந்த நம்மேல் கர்த்தர் இரக்கம் பாராட்டினதினாலேயே, கைதியாகப் பிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்தாலும், ராஜ மரியாதையுடன் நடத்தப்படுகிறோம் என எண்ணினார்கள். 

ஆண்டவருக்குப் பிரயோஜனமாய் நடந்ததினால் என்ன பிரயோஜனம்? என்ற கேள்வி தானியேலின் முன் வந்தாலும், தானும் மற்ற வாலிபர்களைப் போல அடிக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டு பாபிலோனிய சேவகர்களால் ஒன்றரை மாதம் நடத்திக்கொண்டுவரப்பட்டவன் என்ற நினைவு அவனுக்குள் இருந்தாலும்; பாபிலோன் தேசத்திலும் தன் உடனிருக்கும் வாலிபர்களைக் காட்டிலும் வித்தியாசமுள்ளவனாக வாழ தானியேல் தன்னை ஒப்புக்கொடுத்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தேவனுக்குப் பிரியமாய் வித்தியாசமாக வாழும் வாலிபர்களை தானியேல் தேடியபோது, உடனிருந்த வாலிபர்களுக்குள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று வாலிபரை அவன் கண்டுகொண்டான். 'இனம் இனத்தோடு, வெள்ளாடு தன்னோடு" என்ற தமிழ் பழமொழியின்படி ஒரே எண்ணமுடைய அந்த வாலிபர்கள் ஒன்றாக இணைந்துகொண்டனர். 

ஆவிக்குரிய வாலிபன், ஆவிக்குரிய வாலிபனை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். குடிக்கிற வாலிபன், குடிக்கிறவனை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு அவனுடன் இணைந்துகொள்ளுவான். பாவம் பாவத்தைப் பிடித்து இழுப்பதுபோல, பரிசுத்தம் பரிசுத்தத்தைப் பிடித்து இழுத்துக்கொள்ளும். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று வாலிபர்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டான் தானியேல். அங்கிருந்த வாலிபர்களில் பிற வாலிபர்கள் பாபிலோன் ராஜாவின் போஜனத்தைச் சாப்பிட தங்களை விட்டுக்கொடுத்தனர். 

தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.(தானி 1:8)

அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ர் என்பவனைத் தானியேல் நோக்கி: பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்கப் பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான். (தானி 1:11-13)

தானியேல் தனி வாலிபனாகவே முதலில் தீர்மானம் செய்தான்; ஆனால், இப்பொழுதோ நான்கு வாலிபர்கள் உள்ள குழு உருவாகிவிட்டது. வாலிபனே நீ உன்னுடைய தீர்மானத்தில் உறுதியாயிருந்தால், உன்னோடு கூட இருப்பவர்களையும் இணைத்துக்கொள்வது எளிதானது. 

எல்லா சூழ்நிலைகளிலும், என்ன நடந்தாலும், வேறு இடத்திற்குத் தள்ளப்பட்டாலும், கவனிப்பதற்கு ஒருவரும் இல்லையென்றாலும், எல்லாவற்றிலும் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தாலும், விடுதலையோடிருந்தாலும் தேவனுக்கு முன்பாக எடுத்த தீர்மானத்தைக் காத்துக்கொள்ளவேண்டும், கடைசிவரை அதில் நிலைத்து நிற்கவேண்டும். தானியேல் என்ற ஒரு வாலிபன் என்னைத் தீட்டுப்படுத்த விடமாட்டேன் என்று தனது தீர்மானத்தில் நிலைத்து நின்றதால், மேலும் மூன்று பேர் தீட்டுப்படாதபடிக்குத் தங்களைக் காத்துக்கொள்ள தீர்மானித்தனர். 

உடலிலிருந்து ஒரு முடி விழுந்துவிட்டாலும், உயிர் நீத்துவிடும் என கவரிமானைக் குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன; அத்தனை உணர்வுடையது, உறுதியானது அது. காட்டுப் புறாவைக் குறித்து வேதத்தில் சொல்லப்பட்ட எல்லா பகுதிகளிலும், ஒரு ஜோடி காட்டுப் புறா என்றே சொல்லப்பட்டுள்ளது. யோசேப்பும் மரியாளும் இயேசுவை பிரதிஷ்டை செய்ய ஆலயத்திற்குக் கொண்டுவந்தபோது, எட்டாம் நாளில் பலியிட்டு விருத்தசேதனம் செய்து சுத்திகரிப்பைச் செய்தபோது, ஒரு ஜோடி காட்டுப் புறாக்களைச் செலுத்தவேண்டும் என்ற கற்பனைக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஜோடியாக வாழும் காட்டுப் புறாக்களைப் பிரிக்க முடியாது, அப்படி பிரிக்கப்பட்டால் மற்றொன்று தற்கொலை செய்துகொள்ளும். பத்திரிக்கையிலே பல வருடங்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது. வேட்டைக்காரன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான், இரண்டு காட்டுப்புறாக்கள் ஜோடியாக உட்கார்ந்திருந்தன, ஒன்றை அவன் அடித்தான் அது செத்து விழுந்தது. வேடன் அதை எடுத்துக்கொண்டு செல்லும்போது, உடனிருந்த மற்றொரு புறாவும் வழியில் செத்துக் கிடந்தது. வேடன் அதைப் பார்த்தபோது, அதன் தொண்டையிலே கூழாங் கல் இருந்தது. உடனிருந்த புறாவை வேடன் வீழ்த்திவிட்டதினால், அதன் ஜோடியான இந்தப் புறா கூழாங்கல்லை விழுங்கி தற்கொலை செய்துகொண்டதை வேடன் அறிந்துகொண்டான். 

ஆவியையும், ஆத்துமாவையும், சரீரத்தையும் ஆண்டவருக்குக் கொடுத்த மனிதனும் இப்படியே இருப்பான். என் சரீரத்தை, ஆவியை, ஆத்துமாவை மாசுப்படுத்த விடமாட்டேன் என்று உறுதியான தீர்மானத்தை எடுக்கிற வாலிபர்கள் ஆண்டவருக்குத் தேவை. ஆவியையும், ஆத்துமாவையும், சரீரத்தையும் கறைபடவிடாமல் காத்துக்கொள்கிற வாலிபர்கள் இன்றும் உண்டு. எந்த சூழ்நிலையில் நீ வைக்கப்பட்டாலும், எந்த சூழ்நிலை எதிராக வந்தாலும், எவரும் உடன் நிற்காமல் போனாலும், என் ஆண்டவருக்காக ஆவி, ஆத்துமா, சரீரத்தை மாசு படாமல் காத்துக்கொள்ளுவேன் என்று தீர்மானம் எடுத்தால், நீ வித்தியாசமுள்ளவனாகவும், மற்றவர்களையும் ஈர்க்கிறவனாகவும்  மாறிவிடுவாய். 

வாலிபனே!... உன்னைத் தீட்டுப்படுத்துகின்ற காரியங்கள் எந்த விதத்திலும், எந்த ரூபத்திலும் வந்தாலும் அதற்கு இடம் கொடுத்துவிடாதே. ஆண்டவரால் அங்கீகரிக்கப்பட்ட பாத்திரமாக, முத்திரிக்கப்பட்ட பாத்திரமாக, கிராமங்களில், நகரங்களில், குடும்பத்தில், கல்லூரிகளில், வேலை ஸ்தலங்களில் வித்தியாசமான வாழ்க்கை வாழவே கர்த்தர் உன்னை அழைத்திருக்கிறார்.  

 (சகோ. அகஸ்டின் ஜெபக்குமார் எழுதிய வித்தியாசமுள்ளவனாயிரு புத்தகத்திலிருந்து)

DEC 2025


 வால வயதின் குமாரராம் இன்றைய வாலிபச் செல்வங்களுக்கு, பலவான் இயேசுவின் கையில் கூர்மையான அம்புகளாய் மாற வாழ்த்துக்கள்! 

இரண்டாவது தானா? நீங்க First  இல்லீங்களா? பரவாயில்லீங்க.. 

Name list - ல் இவரும் யாக்கோபு, எப்பிராயீம் போல இரண்டாவது இடம்தான். எப்பிராயீம், அண்ணன் மனாசே பிறந்து மாதங்களோ அல்லது வருடங்களோ கழித்து பிறந்து இருக்கலாம். ஆனால், யாக்கோபு ஒரே பிரசவத்தில், ஒரே நாளில், ஏன் ஒரே நேரத்தில் சில நிமிஷங்களுக்காகப் போராடி இரண்டாவது இடம் பெறுகிறார். ஆனால், கர்த்தரின் கண்களோ, அதாவது பரலோகத்தின் பார்வையோ, இவர்களையே முதலாவதாகப் பார்த்தது. 

தம்பி, தங்கச்சி! நீங்கள் ஸ்கூல் மற்றும் காலேஜ் படிப்பில் அல்லது விளையாட்டில் 2nd ரேங்க் வாங்கினபோது, உங்கள் அம்மா அப்பா கண்டிப்பாகக் கேட்டிருப்பாங்க, 1st Rank எடுக்கவில்லை? என்று; 'அப்படித்தானே?

ஒலிம்பிக் வெற்றி மேடை (Victory Stand) போன்ற ஒரு வெற்றி மேடையில் மூன்று பேர் நிற்கிறார்கள். ஆனால், முதலாவது மற்றும் மூன்றாம் இடங்கள் திடீரென்று காலியாகி, இரண்டாம் இடம் பெறுபவர் மாத்திரம் நிற்கிறார் என்றால், எப்படி இருக்கும் இந்த சீன்...? பின்னால் நான்காவது இடம் பெறுபவரும் மிஸ்ஸிங் லிஸ்டில் சேர்ந்து விட்டாரென்றால் என்னவாகும்? என்ன புதிராக இருக்கிறதா.... ?

ஆம், மூத்தவனாகப் பிறந்த தாவீதின் குமாரன் அம்னோன் அம்போ தான், சொந்த உறவுகளைக் கூட பாசமாகப் பார்க்காமல், மோகம் கொண்டு பார்த்து, கோமாளியாகிக் கோட்டை விடுகிறான். மூன்றாம் இடத்தில் அப்சலோம் absent ஆகிறான்... ரொம்ப handsome எல்லாரையும் ஈசியாக மயக்கி ஏமாற்றி, மனங்களைக் கவர்ந்து, கட்டிப் பிடித்துத் தழுவி முத்தம் கொடுத்து விட்டு (attractive); ஆனால், தந்தையையே கொலை செய்து, தானே அரசனாகி ஆளவேண்டும் என்று வெறியாட்டம் ஆடி, அந்தரத்தில் தலை போய்விட்டது. அதோனியாவின் கதியோ அந்தோ! அதோ கதிதான்! கர்த்தரே முன்னறிந்து தெரிந்துகொண்ட தம்பி சாலொமோனை ஏற்றுக்கொள்ள முடியாத அதோனியா, அட்ரஸ் இல்லாமல் போய்விட்டான். இப்போது, இரண்டாம் இடத்தில் தானியேலோ நிலைத்து, நிமிர்ந்து நிற்கிறார்!! யாருங்க இவங்க எல்லாரும்...? இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டாரே, அந்த தாவீது ராஜாவின் முதல் பிறந்த ராஜகுமாரர்கள் தான் இவர்கள். (1 நாளா. 3:1-3)     

     வேதத்தில் தானியேல் என்ற பெயரில் வரும் முதல் நபர் இவரே. இவருக்கு கீலேயாப் என்று இன்னொரு பெயரும் உண்டு (2 சாமுவேல் 3:3). இன்று உலகம் முழுவதும் எண்ணடங்கா நபர்கள் தானியேல் என்று பெயர் வைத்ததில், இன்னும் வைப்பதில் பெருமை அடைந்துவருகின்றனர். வேதத்தில் இரண்டு மூன்று தானியேல்கள் இருக்கின்றனர். ஆனால், நட்சத்திரத் தானியேலாக இருப்பவர் பின்னால் வரும் தானியேல் தீர்க்கதரிசி. இருவருமே ராஜ குடும்பத்தில் பிறந்த இளவரசர்கள். தானியேல் தீர்க்கதரிசி அதே ராஜ குடும்பத்தில் தாவீதின் யூதப்பரம்பரையில் பின்னால் வந்தவர். இவர் பெயர் கூட முன்னால் உள்ள தானியேல் என்ற இந்த நபரை பார்த்து வைத்து இருக்கலாம். (வேதத்தில் நம் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு ... தாவீது... போன்றவர்களுடைய பெயர்கள், மீண்டும் இன்னொரு நபருக்கு வைக்கப்படவில்லை. ஏன் என்று தெரியவில்லை. ஆனால், இவர் பெயரோ மீண்டும் வருவது ஆச்சரியத்திற்குரியது!)

12 கோத்திரங்களில் ஒருவர் 'தாண்". அதன் அர்த்தம் 'நியாயாதிபதி". ஆம் தாண் கோத்திரத்தில் தான் சிம்சோன் என்று நாம் நன்கு அறிந்த ஸ்டார் நியாயாதிபதி வருகிறார். (நியாயாதிபதிகளின் நாட்களில் கர்த்தரை விட்டுத் தங்களுக்கு சுரூபங்களை உண்டாக்கிக் கொண்ட தாண் கோத்திரத்தார், வெளிப்படுத்தலில் வரும் முத்திரை போடப்பட்டோர் பட்டியலில் இல்லாமல் போய்விட்டார்கள்). ஆனால் 'தானியேல்" என்ற பெயரின் அர்த்தம் 'கர்த்தரே என் நியாயாதிபதி"! இந்தப் பெயரிலேயே எத்தனை பெரிய வெளிப்பாடு! கர்த்தரே நீதி செய்பவர்!! கர்த்தரே நியாயாதிபதி!!! என்று வேதத்தில் மீண்டும் மீண்டும் நாம் பார்க்கிறோம்.

இவர் பின்னணியில் இருந்தது கண்டிப்பாக அவரது தாயார்: வேதத்திலே ஒரு சிறந்த பெண்மணியாக, ரூபவதியாக 'மகா புத்திசாலி" என்று வர்ணிக்கப்பட்ட அபிகாயில் தான். 1 சாமுவேல் 25:28,31 - இங்கே அபிகாயில் பேசின வார்த்தைகளில் இருந்து நாம் இதை நன்றாக அறிந்து கொள்ள முடியும். அவர் தாவீதுக்குச் சொல்லிய புத்திமதி என்ன? கர்த்தரின் யுத்தங்களை நடத்தும் தாவீது- விருதாவாக இரத்தம் சிந்தக்கூடாது, பழிவாங்கவும் கூடாது. (No Revenge - Avenge). அப்போதுதான் அவருக்கு துக்கமும், மனஇடறலும்  (No grief - nor offense) இராது. தாவீதின் மற்ற பிள்ளைகள் விழுந்துபோக இவைகள் தானே காரணம்! தாவீது கர்த்தரின் யுத்தங்களைத் தான் செய்தார். ஆனாலும், கர்த்தருக்கு ஆலயம் கட்ட ஆசைப்பட்ட தாவீதுக்கு கர்த்தர் சொன்னது என்ன? (1 நாளா. 28:3) நீ யுத்த மனுஷனாய் இருந்து ரத்தத்தைச் சிந்தினாய், எனவே நீ கட்ட வேண்டாம். தீர்க்கதரிசி நாத்தான்  சொல்லும் முன்னே (2 சாமுவேல் 7:11-13 ), அபிகாயில், 'தாவீதுக்கு கர்த்தர் நிலையான வீட்டை நிச்சயமாய் கட்டுவார்" (1 சாமுவேல் 25:28) என்று எத்தனை திட்டவட்டமாகக் கூறிவிட்டாள் பாருங்கள். தொலைதூரப் பார்வையும், தீர்க்கதரிசனமான வார்த்தைகளும் அபிகாயிலிடம் இருந்து வந்தன. தாவீதுக்கு மனைவியாகி அபிகாயில் பெற்ற பிள்ளை தானியேலுக்குள் அந்த விதைகள் ஆழமாக வேர் விட்டிருந்தது. எத்தனை தான் காஷ்மீரின் மேக வெடிப்பினால் (Clouds burst) உண்டாகும் பெருவெள்ளமே (floods) வந்து மோதினாலும் தானியேல் விழுந்து போகவில்லை. 

இன்றைய உலகில் நட்சத்திரங்கள் போல ஜொலித்து வெளி உலகத்தாலும் அறியப்பட்ட அநேக வாலிபர்கள் ஆராதனை வீரர்களாகவும், புதுப் புதுப் பாடல்களை இயற்றுபவர்களாகவும் மற்றும் ஆங்காங்கே பிரசங்கிகளாகவும் எழும்புகிறார்கள். ஆனால், அவர்களில் அநேகர், மழைக்காலங்களில் திடீரென்று முளைக்கும் காளான்கள் போல முளைத்துப் பின் காணாமல் போய்விடுகிறார்கள். Name & Fame பின்னால் போய், பின் சீனிலே இல்லாமல் போய்விடுகிறார்கள். Lime-lite வெளிச்சத்தில் மிதந்து பின் கர்த்தரால் பயன்படுத்த முடியாத, அவர் சித்தம் செய்யாத, அவருக்குப் பிரியமில்லாத, பிரயோஜனமற்ற இடத்திற்குச் சென்று விடுகிறார்கள். ஆனால், நீயோ தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டு ஓடு...! (1 தீமோ 6:11,12 & 2 தீமோ2:22) 

வாலிபத் தம்பித் தங்கையே! இச்சையின் கோரப் பிடிகளில் மற்றும் பலவித addictions -ல் இன்னும் சிக்கித் தவிக்கிறாயோ? பழிவாங்கப் பிடிவாதமாய் துடிக்கிறாயோ? விரிந்த கைகளோடு உனக்காகக் காத்திருக்கும் அன்பான அப்பாவிடம் வந்து விழுந்து விடு. விழுந்த உன்னைத் தூக்கி நிறுத்தி நிலைத்து நிமிர்ந்து நிற்க வைப்பார். இதை சற்றும் சந்தேகப்படாமல் நம்பிவிடு; உன்னை விட்டு விலகாத, கைவிடாத தெய்வம் கூட இருக்கிறார்.

இந்த தானியேலின் பெயர், அவர் என்ன செய்தார் என்று மீண்டும் விளக்கங்கள் வேதத்தில் இல்லை தான். 2 சாமுவேல் 8:18 -ன் படி, பின் நாட்களில் இவர் தாவீது ராஜாவின் ராஜ்யத்திலே, இஸ்ரவேல் நாட்டிலே பிரதானியாக அதாவது ஒரு முதலமைச்சராக (chief minister/priest) இருந்ததாக வேதத்தில் சொல்லப்பட்ருக்கிறது. அதோடு கூட அவர் ஆசாரியராக இருந்ததாக ஆங்கில வேதாகமத்தில் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம், நாம்  ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும் (Royal Priesthood), பரிசுத்த ஜாதியாயும், அவருக்கு சொந்த ஜனமாயும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அல்லவா! அநேகரை அந்தகாரத்தினின்று இரட்சிக்கத்தானே உன்னை நிறுத்தி வைத்திருக்கிறார்.       

  எல்லாருக்கும் நியாயமும் நீதியும் செய்துவந்த தந்தையைப் பின்பற்றி, மகன் தானியேலும் கடைசிவரை வாழ்ந்திருப்பார் என்று தெரிகிறது. சாந்தம், அமைதிக்கு சொந்தக்காரர்; அதிகம் வெளியில் அறியப்படாதவர் தான், திரைக்குப் பின்னால் இருந்தாலும் இறுதிவரை நிலைத்து நின்றாரே!

நீங்கள் 90 Kids அல்லது 2K Kids அல்லது GenZ  எப்படிப்பட்டவராய் இருந்தாலும், இன்றைக்கு உங்களுக்கு இருக்கும் அதிகப்படியான சவால்கள் மற்றும் சோதனைகளில் விழுந்து விடாமல் நிற்பது என்பது எத்தனை பெரிய ஆறுதலான  விஷயம். வழுவாதபடி உங்களைக் காக்கவும் தம்முடைய மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமை உள்ளவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எல்லா மகிமையும் துதியும் உண்டாகட்டும்.(யூதா 24,25). இறுதி வரை அவர் சத்தம் கேட்டு, சித்தம் செய்ய கிருபை கிடைப்பதாக. ஆமேன்.






November 2025

 





    அருமையான வாலிப தம்பி, தங்கச்சி,  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனது அன்பின் வாழ்த்துகள். ஒரு கேள்வியோடு உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன். உன் வாழ்க்கையில்  எதை முதன்மையாக வைத்து நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? சுயமரியாதையோடு வாழ்வதற்கான படிப்பா? உன் மனதை நிறைவு செய்யும் நண்பர்களா? நினைத்ததைச் சாதிக்கவைக்கும் பணமா?   எதையும் சிறப்பாகச் செய்ய வைக்கும் திறமைகளா? எல்லாராலும் அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற  எண்ணமா? உன்னத நோக்கத்தோடு உன்னைப் படைத்த தேவாதி தேவனைக் குறித்ததா? இந்தக் கேள்விக்கான உன் பதில் தான் உன் இதயம் அமைதியால் நிரம்பி இருக்கிறதா? அல்லது கவலையால் பாரமாக இருக்கிறதா? என்பதை வெளிப்படுத்தும்.

மேலே குறிப்பிட்ட காரியங்களைப் பார்க்கும்போது, எல்லாமே எனக்கு தேவையானது தானே என்று நீ கேட்கலாம். ஆம், தேவையானது தான்; ஆனால் உன் வாழ்வில் முதன்மையான இடத்தை யாருக்கு, எதற்கு கொடுத்திருக்கிறாய்? 

    வேதமே வழிகாட்டி: வேத வசனத்தில் நாம் பார்க்கும் போது, மத்தேயு 6 : 33 இல்: “முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. எல்லா காலத்திற்கும் பொருந்தும் மேன்மையான கட்டளையை இந்த வசனத்தில் பார்க்கிறோம். இதுதான் உன் வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் உண்மையான வெற்றி, தேவனுக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதில் தான் உள்ளது.

'இருட்டில் பாடும் பறவை" என்று அழைக்கப்பட்ட ஃபேன்னி கிராஸ்பி  ஆறு வார குழந்தையாக இருக்கும்போதே கண் பார்வையை இழந்துவிட்டார். இந்தச் சூழ்நிலையிலும் தேவனை மகிமைப்படுத்தும் 8000 பாடல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், வேதாகமத்தில் அத்தியாயங்களையும், முழு புத்தகங்களையும் கூட மனப்பாடம் செய்து மேற்கோள் காட்டும் திறன் அவருக்கு இருந்தது. ஒரு பெரிய ஊழியர் அவரைப் பார்த்து, “உனக்கு அநேக திறமைகளைப் பரிசாக அளித்த உன் பரம எஜமானர், பார்வையை மட்டும் தராதது பரிதாபத்திற்குரியது” என்று கூறினார். அதற்கு கிராஸ்பி இப்படியாகப் பதிலளித்தார்: “நான் கண் பார்வை இல்லாதவளாய் பிறந்தது பரிதாபத்திற்குரியது அல்ல; நான் என்னை பாக்கியசாலியாக கருதுகிறேன். ஏனென்றால,; நான் எல்லாவற்றையும் பார்ப்பதற்கு முன்பாக, பரலோகத்துக்கு செல்லும்போது, என் கண்கள் முதலாவது இயேசு கிறிஸ்துவைக் காணும்.... அதையே நான் விரும்புகிறேன்.” அதுவே அவளுடைய முன்னுரிமை! வாழ்வின் கடினமான சூழ்நிலையும் கூட, தேவனுக்கு கொடுத்த முன்னுரிமையை கிராஸ்பியிடமிருந்து பறிக்க முடியவில்லை.

இன்றைய இளைஞர்களின் மனம் பல திசைகளிலும் இழுக்கப்படுகிறது. இதனால், அவர்களின் மனதில் கவலை நிறைந்து இருக்கிறது. அது மகிழ்ச்சியைத் திருடுகிறது; தவறான முடிவுகளை எடுக்க வைக்கிறது; வாழ்க்கையைக் கெடுத்து விடுகிறது. தேவனுக்கு முதலிடம் கொடுத்து வாழும்போது, இப்படிப்பட்ட கவலைகளிலிருந்து விடுபடமுடியும். மத்தேயு 6 : 26 – 30 வசனங்களில்: ஆகாயத்து பறவைகளுக்கு உணவு கொடுக்கிற தேவன், காட்டு புஷ்பங்களுக்கு உடை கொடுக்கிற தேவன், மிகவும் விசேஷித்தவர்கள் ஆகிய நமக்கு அன்றாடத் தேவைகளை கொடுக்க போதுமானவராய் இருக்கிறார். நீங்கள் செய்ய வேண்டியது: தேவனுடைய ராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் முதலாவது தேடவேண்டும். தேவன் நம் வாழ்வில் முதலிடத்தில் இருக்கும்போது, மற்ற அனைத்தும் அதனதன் இடத்தில் சரியாக வந்தடைகின்றன. உங்கள் வாழ்க்கையில் தேவனை முதன்மையாக வைக்கும் போது, நீங்கள் எதையும் இழந்துபோவதில்லை. 

தேவனுக்கே முதலிடம் : ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவரும், மிஷனரியுமான எரிக் லிடெல், தேவனுக்கு முதலிடம் கொடுக்கவேண்டியதைத் தேர்ந்தெடுத்தார். அவர் ஒரு சிறந்த ஓட்டப் பந்தய வீரர். ஒருமுறை அவருக்கே உரிய சிறந்த போட்டியில் ஓட மறுத்துவிட்டார்;. ஏனெனில், அது ஞாயிற்றுக்கிழமை, கர்த்தருடைய நாளில் நடக்கவிருந்தது. போட்டியில் ஓட மறுத்ததால் மக்கள் அவரை கேலி செய்தனர். ஆனால், அவர் கர்த்தருடைய நாளை கனப்படுத்த விரும்பினார். அதனால், தேவன் அவரை உயர்த்தினார்.  அவர் தனக்குப் பழக்கம் இல்லாத மற்றொரு பந்தயத்தில் தங்கம் வென்று உலக சாதனை படைத்தார். அவரது வாழ்க்கை “என் வாழ்வின் முதன்மை தேவனுக்கே, என் புகழ் அதற்குப் பின்பே” என்பதை இன்றும் கிறிஸ்துவுக்கு சாட்சியாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

நடைமுறை வழிமுறைகள்: உங்கள் நடைமுறை வாழ்க்கையில் தினமும் தேவனுக்கு முதன்மையான இடத்தையும் நேரத்தையும் கொடுங்கள் (மத்தேயு 22: 37,38). ஜெப நேரம் மற்றும் வேத வாசிப்புக்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி முழு மனதோடு செய்யுங்கள் (தானியேல் 6:10 ரூ சங்கீதம் 1:2,3).  ஒரு குறிப்பிட்ட வேளையில், சமூக ஊடகங்களை அமைதிப்படுத்தி விட்டு தேவனோடு அமர்ந்திருங்கள் (பிலிப்பியர் 4:8). சிறிய, பெரிய தீர்மானங்களிலும் தேவனிடம் ஆலோசனை கேட்டு பழகுங்கள் (1 சாமுவேல் 23:2,4,11,12). உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், திருப்தி உள்ளதாகவும் மாறும்.

தீர்மானம் எடுங்கள்: இந்த உலகத்தில் வாழ்வதற்கு தேவையான அன்றாட விஷயங்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது, புறஜாதியாரைப் போல வாழ்வதற்குச் சமம்! நம் வாழ்வில் தேவ சித்தத்தையும், தேவ நீதியையும் முதன்மையாக வைத்தால் அவர் மற்ற அனைத்தையும் கவனித்துக் கொள்வார். மத்தேயு 6:33 ஐ தேவனுடைய பிள்ளைகள் கடைப்பிடித்தால் இந்த உலகத்தில் நற்சாட்சி பெற்று வாழமுடியும். ஆனால், நம்மில் பலர் அதை கடைப்பிடிக்கத் தவறுவது எவ்வளவு  துக்கமான காரியம்! அருமையான தம்பி, தங்கச்சி! இந்த வாலிப வயதில்  அசைக்க முடியாத தீர்மானத்தோடு, தேவனுக்கு முதலிடம் கொடுக்க முடிவு செய்வாயா?  நீ எடுத்த தீர்மானத்தில்  உறுதியாக இருக்க தேவன் தாமே உதவி செய்வாராக. ஆமென்!

                                                                                                 சகோதரி. கிருபா எமர்சன்