August 2026

 

    கிறிஸ்துவில் பிரியமான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். யாக்கோபு என்ற தேவ மனிதனுக்கு பன்னிரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் இருந்தனர். அவர்களில் அனைவரும் வாலிபர்களாக இருந்தபோதிலும், யோசேப்பு தனித்துவமான ஒருவனாகக் காணப்பட்டான். அவனுடைய பேச்சு, பார்வை, சிந்தனை மற்றும் செயல்களில் ஒரு வித்தியாசம் வெளிப்பட்டது. அவன் சகோதரர்களுடன் வாழ்ந்தாலும், அவர்களைப் போல வாழவில்லை. தேவனை அறிந்துகொள்ளவும், அவருக்குப் பிரியமான வாழ்க்கையை வாழவும் அவன் விரும்பினான். அதனால்தான் தேவன் அவன்மேல் பிரியம்கொண்டு, தமது திட்டங்களையும் சித்தத்தையும் நிறைவேற்றும் கருவியாக அவனைத் தேர்ந்தெடுத்தார். இளவயதிலேயே யோசேப்பு தேவனை அறிந்தவனாகவும்நடக்க விரும்பியவனாகவும் இருந்தான். தேவ சிந்தனை அவனுடைய இருதயத்தை நிரப்பியிருந்ததால், தேவன் தமது எதிர்கால நோக்கங்களை தரிசனங்களின் மூலம் அவனுக்கு வெளிப்படுத்தினார்.

     என்றபோதிலும், யோசேப்பின் வாழ்க்கை எளிதானதாக இருக்கவில்லை. அவன் சென்ற இடமெல்லாம் எதிர்ப்புகளும் பகைகளும் எழுந்தன. அவனுடைய சொந்த சகோதரர்களே அவனை வெறுத்து, அவனை அழிக்க நினைத்து, இறுதியில் அடிமையாக விற்றுவிட்டனர். இருந்தபோதிலும், தேவன் எல்லாச் சூழ்நிலைகளிலும் அவனோடு இருந்தார். அதனால்தான் வேதாகமம், 'கர்த்தர் யோசேப்போடே இருந்தார்; அவன் காரியசித்தியுள்ளவனானான்" (ஆதி. 39:2) என்று சாட்சியளிக்கிறது. அடிமையாக விற்கப்பட்ட தேசத்திலேயே தேவன் அவனை ஆளுகை செய்யும் நிலைக்கு உயர்த்தினார்.  தேவன் யோசேப்போடு இருந்து அவனை உயர்த்தியதற்கான சில காரணங்களை நாம் காணலாம்.

 1. யோசேப்பு தேவனுடைய திட்டத்திற்குள் நடந்தான்             

 முதலாவதாக, தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவதற்காக யோசேப்பை பயன்படுத்தினார். மனிதர்கள் அவனை அடிமையாக விற்றாலும், தேவனோ உயர்ந்த நோக்கத்திற்காக அவனை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தார். பிரியமான வாலிபரே! உங்களது வாழ்க்கையில் உண்டாகும் பிரச்சனைகள், ஒருவேளை தாங்க முடியாததாகவும் வேதனையானதாகவும் தோன்றலாம். ஆயினும், அவற்றின் மத்தியில்

தேவன் தமது உயர்ந்த நோக்கத்திற்காகம் திட்டத்திற்காகவும் உங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம். ஆரம்பத்தில் யோசேப்பு இதனைஅறியாவிட்டாலும், பின்னர் தேவனுடைய திட்டத்தை தெளிவாக உணர்ந்தவனாக, தனது சகோதரர்களிடம், 'ஜீவரட்சனை செய்யும்படிக்கும், உங்களை உயிரோடே காப்பாற்றும்படிக்கும் தேவன் என்னை உங்களுக்குமுன்னே அனுப்பினார்" (ஆதி. 45:5-8) என்று கூறுகிறான்.

                மனிதர்கள் நமக்கு விரோதமாகச் செயல்பட்டாலும், தேவன் அந்தத் தீமையையே தமது திட்டத்தை நிறைவேற்றும் நன்மையாக மாற்றுவார் (ஆதி. 50:20). தேவன் தேவையில்லாமல் நம்மைச் சோதிப்பதில்லை; நம்மை புடமிடுவதன் மூலம் தமது நோக்கத்தை நிறைவேற்றுகிறார் (சங். 105:17-19). எனவே, நமக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவோ அல்லது பிறர் மூலமாகவோ பிரச்சனைகள் வந்தாலும், யோசேப்பைப் போல அதன் பின்னால் இருக்கும் தேவனுடைய திட்டத்தை அறிந்து அமைதியாய் காத்திருக்க வேண்டும்.

   2. யோசேப்பு உண்மையும் நேர்மையும் உடையவனாக இருந்தான்

                இரண்டாவதாக, போத்திபாரின் வீட்டில் யோசேப்பு அடிமையாக இருந்தபோதும், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையோடும் விசுவாசத்தோடும் செய்தான். அவனுடைய வாழ்க்கையில் தேவனுடைய கிருபையும் ஆசீர்வாதமும் வெளிப்படையாகக் காணப்பட்டன. அதனால், போத்திபாரே, 'கர்த்தர் அவனோடே இருக்கிறார்" (ஆதி. 39:3-6) என்பதை உணர்ந்தான். பிரியமான வாலிபரே! நாம் எந்த இடத்தில் வேலை செய்தாலும், நமது உண்மையும் விசுவாசமும் தான் நம்முடைய அடையாளமாக இருக்க வேண்டும். சிறிய காரியங்களில் உண்மையாய் இருப்பவர்களை தேவன் பெரிய பொறுப்புகளுக்காக உயர்த்துகிறார் (லூக். 16:10). யோசேப்பு போத்திபாரின் வீட்டில் தன் பணிகளை உண்மையோடும் ஜாக்கிரதையோடும் செய்தபடியால், தேவன் அவனை ராஜாக்களுக்கு முன்பாக நிற்கும் நிலைக்கு உயர்த்தினார் (நீதி. 22:29).

3. யோசேப்பு சோதனையில் பரிசுத்தத்தைக் காத்துக்கொண்டான்

                மூன்றாவதாக, போத்திபாரின் மனைவி அவனைப் பாவத்தில் விழச் செய்ய முயன்றபோது, யோசேப்பு அதற்கு இடமளிக்கவில்லை. 'நான் தேவனுக்கு விரோதமாக இப்படிப்பட்ட பெரிய பாவத்தைச் செய்வது எப்படி?" (ஆதி. 39:9) என்று கூறி அந்தச் சோதனையை வென்றான். வாலிப வயதில் இப்படிப்பட்ட சோதனைகள் வருவது இயல்பானதே. எனினும், யோசேப்பைப் போல நாமும் தீமையை வெறுத்து, உத்தம இருதயத்தோடு நடக்கவேண்டும் (சங். 101:2-3). மனிதர்களின் கண்களுக்கு மறைவாகப் பாவம் செய்ய முடியும்; ஆனால், தேவனுடைய கண்களுக்கு எதுவும் மறைவல்ல என்பதை யோசேப்பு அறிந்திருந்தபடியினாலேயே, பாவம் அவனை நெருங்கியபோது அதற்கு இணங்காமல் விலகியோடினான் (2 தீமோ. 2:22).

  4. யோசேப்பு துன்பத்திலும் தேவனை விட்டுவிடவில்லை
                                சகோதரர்கள் அவனுக்குத் துரோகம் செய்தார்கள். அவன் அடிமையாக விற்கப்பட்டான். பாவத்திலிருந்து விலகியவன் பொய்யான குற்றச்சாட்டால் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனால், எந்தச் சூழ்நிலையிலும் தேவன் மீது யோசேப்பு கசப்பு கொள்ளவில்லை. 'ஏன்?" 'எதற்கு?" என்று தேவனை குற்றம் சாட்டவில்லை. சூழ்நிலைகளைப் பார்த்து வாழாமல், தேவனை நம்பி வாழ்ந்தான். அதனால் சிறைச்சாலையிலும் தேவனுடைய பிரசன்னம் அவனோடு இருந்தது (ஆதி. 39:20-23). தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு சகலத்தையும் நன்மைக்கேதுவாக நடத்துவார் (ரோமர் 8:28) என்ற விசுவாசம் அவனுக்குள் இருந்தது. மேலும், சோதனையில் நிலைத்திருப்பவர்களை தேவன் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையும் அவனைத் தாங்கியது (யாக். 1:12).

    5. யோசேப்பு தேவனுக்கு மகிமையைக் கொடுத்தான்

 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக உயர்ந்த இடத்தில் நின்றபோதும், யோசேப்பு தனது ஞானத்தையோ திறமையையோ பெருமைப்படுத்தவில்லை. பார்வோனின் கனவுக்கு விளக்கம் சொல்லும்போது, 'நான் அல்ல; தேவனே பார்வோனுக்கு சமாதானமான உத்தரவு அருளிச்செய்வார்" (ஆதி. 41:16) என்று கூறினான். தனது வாழ்க்கையின் வெற்றிக்கு தேவனுடைய கிருபையையே காரணமாகக் கருதினான். பிரியமான வாலிபரே! நமக்கும் தேவன் கொடுத்த வரங்கள், தாலந்துகள், திறமைகள், ஞானம், அறிவு ஆகியவற்றில் பெருமைப்படாமல், தாழ்மையுடன் நடக்கவேண்டும். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபையையும் உயர்வையும் அளிக்கிறார் (யாக். 4:6).

                பிரியமான வாலிபரே! இன்றும் தேவன் தமக்குப் பிரியமாய் நடக்கிறவர்களோடு இருக்கிறார். சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும், அவரை நம்பி உண்மையாய் நடக்கிறவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. யோசேப்பை அடிமைத்தனத்திலிருந்து ஆளுகைக்கு உயர்த்திய தேவன், தம்மை நம்புகிறவர்களையும் தமது நேரத்தில் உயர்த்த வல்லவராக இருக்கிறார்.

                'தேவன் நம்மோடு இருப்பதற்கான மிகப்பெரிய தகுதி நமது திறமை அல்ல; நமது விசுவாசமும் கீழ்ப்படிதலுமே".

                                                                                                                    சகோ. சரவணன்

July 2026

 

    இந்தக் காலம் வாலிபரின் காலம் அல்லது Gen Z-களின் நாட்கள் என்கின்றனர்... எங்கு பார்த்தாலும் நம் நாட்டிலும் இன்னும் அண்டை நாடுகளிலும் இளம் தலைமுறையினரின் போராட்டங்கள்... தங்களின் எதிர்காலம், வேலைவாய்ப்பு மற்றும் சில சமூக தீமைகளுக்கு விரோதமாகவும் இன்னும் நல்ல காரியங்களுக்காகவும் போராடுபவர்களாகவும், முக்கியமானத் தீர்மானங்களையும் எடுப்பவர்களாகவும் எழும்பிவிட்டனர்... ஒருவகையில் நல்லது தான்; என்றாலும், பெற்றோர்களும் பெரியவர்களும் ஒருவித பயத்தோடு என்னதான் நடக்கிறது என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கத்தான் முடிகிறது..? அல்லது, இல்லை, இனி அப்படித்தான் என்கின்றனரோ..! ஒன்று உண்மை; இன்றைய வாலிபரின் இதயங்களை நண்பர்கள் கூட்டம், இன்னும் யார் யாரோ வசப்படுத்தி, இரட்சகரைப் பார்க்கவிடாமல் உண்மையான இவ்வளவு பெரிதான இரட்சிப்பிற்கு நேராய் கவனம் செலுத்தவிடாமல,; வேறு எதை நோக்கியோ திசை திருப்பி விட்டிருக்கின்றனர். பெலனோடு நிற்கத் திராணியற்றவர்கள் போல, கூட்டமாகச் சேர்ந்து பெலமாய் கயிறு கட்டி இழுப்பது போல (Tug of war) இழுக்கப்பட்டு (carried away)  வீழ்த்தப்படுகிறார்கள். சத்தியத்தின் மேலுள்ள அன்பை அங்கிகரியாமல், சரியாக அறிய விடாமல் (Deceptions & Delusions)  வஞ்சிக்கப்பட்டிருக்கின்றனர் (2தெச2:10). தோற்றத்தை வைத்து அல்லது சில செயல்களைப் (Performance) பார்த்து, இவர்கள் தான் சரி, இவர்களைப் பின்பற்றலாம் என்று தவறாகக் கணித்துவிடுகின்றனர்... யாரையும் வெளிப்புறமாகப் பார்த்து இவர் ஒரு உண்மை கிறிஸ்தவர் என்றோ, அல்லது அவர் சரியல்ல என்றோ ஒருபோதும் சொல்லிவிட முடியாது. 

வேதத்திலே பர்திமேயு, பர்னபா, பரபாஸ், பர்சபா, பர்ஜோனா (யோனாவின் குமாரனாகிய சீமோன்) போன்ற பெயர்கள் உண்டு. திமேயுவின் மகனாகிய பர்திமேயு; அதாவது 'பர்" என்றால் மகன். அது போல பர்யேசு என்ற ஒரு நபரை நாம் வேதத்திலே பார்க்கிறோம் (அப்போஸ்தலர் 13 : 6 - 12).பெயரின் அர்த்தம் இயேசுவின் மகன் ஆனால் அவனோ பிசாசின் மகன் (அப்; 13:10). இங்கே பழைய வாழ்க்கையில் - சவுல்; ஆனால், இப்பொழுது, புதிதான, கர்த்தர் தெரிந்து கொண்ட பாத்திரமாக மாறினவர் பவுல். பவுல் என்ற பெயரின் அர்த்தமோ - சிறுமை - எளிமை தான்; ஆனால், இங்கே பெரிய இயேசுவின் மகனாக உயர்ந்து நிற்கும் பவுல் அந்த நபரை எதிர்கொள்கிறார். இயேசுவின் மகன் என்ற பெயரைக்கொண்ட பர்யேசுவோ ஒரு எலிமா - மாயவித்தைக்காரனும் கள்ளத்தீர்க்கதரிசியுமானவன்; பிரபுக்கள், அதிபதிகளோடு, அதிகாரிகளோடு இருப்பவன். மற்றவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுப்பவனாகவும் (Inspiring & Influencial personality) இருந்திருக்கலாம். ஆனால், இயேசுவின் பிள்ளைகளுக்கு, அதாவது அவரை விசுவாசித்து இரட்சிப்பை அடைய விரும்புவோருக்கு, எதிர்த்து நின்று அவர்களை விசுவாசத்தைவிட்டு திருப்ப வகைதேடுபவன். 

  எத்தனை எலிமாக்கள் இந்நாட்களில் சத்தியத்தை சரியாய்ப் பின்பற்ற விடாமல், குறிப்பாக வாலிபரை திசை திருப்புகின்றனர். நல்ல வேளை பவுலின் பெயரைக் கொண்ட செர்கியு பவுல் என்னும் அதிபதி இழுபட்டுப் போய்விடாமல் பவுல் என்று சொல்லப்பட்ட சவுலால் காப்பாற்றப்பட்டுவிட்டார். பின்னாட்களில்... 'உங்களிலும் சிலர் எழும்பி சீஷர்களை தங்களிடத்தில் இழுத்துக் கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்" என்றார் பவுல். (அப் 20 : 30).

  இன்றைய நாட்களில், பெற்றோர்களின் விசுவாச மற்றும் ஊழிய வாழ்க்கையில் விருப்பமற்று, அதைவிட்டுப் பிள்ளைகள் திருப்பப்பட்டுப் (draw away) விடுகிறார்கள். பெற்றோரின் இருதயங்களோடு பிள்ளைகளின் இருதயங்கள் ஒத்துப்போக முடியவில்லை. 

  பழைய ஏற்பாட்டின் கடைசி வசனத்தின் கடைசி பாகம் எலியா தீர்க்கதரிசி வந்து 'பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்குத் திருப்புவான்." என்பதாய் முடிகிறது (மல்கியா4:6). எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் நம் ஆண்டவர் இயேசுவுக்கு வழியை ஆயத்தப்படுத்த அவருக்கு முன்னே நடப்பான் என்று சொல்லப்பட்ட யோவான் ஸ்நானகனின் பிறப்பை காபிரியேல் தூதன் தூபபீடத்தண்டையில் சகரியாவுக்கு அறிவித்தார். எப்படி? 'அவன் இஸ்ரவேல் வம்சத்தாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்கு திருப்புவான். பிதாக்களுடைய இருதயங்களை பிள்ளைகளிடத்திற்கும் கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்புவான்." சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் அப்படியே நிறைவேறியது. (லூக் 1: 16,17) யோவான் ஸ்நானகன் ஒரு நல்ல உன்னதமானவருடைய தீர்க்கதரிசி. ஆனால், இயேசுவின் மகன் என்ற பெயரையுடைய கள்ளத்தீர்க்கதரிசி எலிமா என்பவனோ உள்ளுக்குள்ளே எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவன்! பிசாசின் மகன்! நீதிக்கெல்லாம் பகைஞன்! கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில்... திருப்பிவிடுவதில்... குழப்பிவிடுவதில் ... ஓயமாட்டான்!!  

பர்யேசு என்ற பெயரைப் பார்த்தால் ஒருவேளை இவரின் தந்தை பெயர் இயேசு என்பதாய் இருந்திருக்கலாம். யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுவதாக வேறொரு நல்ல நபரைப் பற்றி பவுல் எழுதுகிறார். (கொலோ 4:11) பர்யேசு என்ற பெயருக்கும் வாழ்க்கைக்கும் எத்தனை பெரிய வித்தியாசம். பவுல் பிரசங்கியாத வேறொரு இயேசு பிரசங்கிக்கப்படுவதாகவும் வேறொரு ஆவி... வேறொரு சுவிசேஷம்... என்றும் பவுல் சொல்லுகிறாரே..! 

'வாலிபனே நீ யாருடைய மகன்?" என்று கோலியாத்தை வீழ்த்தி வெற்றிநடை நடந்து வந்த தாவீதைப் பார்த்து சவுல் கேட்டார். (1சாமு 17:58) 'நீ யாருடைய மகள்?" என்று ரெபேக்காளிடம் எலியேசர் கேட்டார். இருவருமே இப்பூமியில் தங்களைப் பெற்றுத்தந்த தகப்பன்மார்களைப் பற்றி சொன்னார்கள். உண்மையில் இருவருமே தேவனுடைய பிள்ளைகளாக வீட்டில் பெற்றோருக்கும் மற்றோருக்கும் ஆசீர்வாதமான பாத்திரங்களாக  பின்பற்றப்படக்;கூடியவர்களாக வாழ்ந்தனர். தாவீதோ இன்னும் ஆண்டவரின் இருதயத்திற்கு ஏற்றவனாக கண்ட நல்லதொரு மகன்! தம்பித் தங்கையே! உண்மையில் நீ யாருடைய பிள்ளை? யோசித்துப் பார்க்கலாமா? 

இந்த கடைசி காலங்களில் வஞ்சிக்கிறவர்களால் கிறிஸ்தவ உலகம் நிறைந்து காணப்படுகிறது. எனவே இழுக்கப்பட்டுப் போகாதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். இயேசு வாழ்ந்த நாட்களில் இருந்த வேதபாரகர்கள் பரிசேயர்களைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார், 'ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிந்து அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்" (மத் 23:15). ரொம்ப risk  எடுத்து பண்ணுறாங்க; ஆனால், எதற்கு நரகத்தின் மகனாக்கவா? மாபெரும் அப்போஸ்தலனாக அழைப்பு பெற்ற தன் சீஷன் யூதாஸ்காரியோத்து இழுக்கப்பட்டுப் போனதைக் குறித்து இயேசு ஜெபிக்கும் போது, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, 'கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல் அவர்களில் ஒருவரும் கெட்டுப்போகவில்லை" என்றார் (யோவான் 17:12). கேட்டின் மகன்; ஆனால், அழைக்கப்பட்ட அழைப்போ தேவடைய பிள்ளை! ஐயோ! கெட்டுப் போய்விட்டதே...!! 

நாம் கெட்டுப் போகாமல் இருக்க நம்மை இரட்சிக்க இயேசு நமக்காக செய்தவைகளை நாம் விசுவாசிக்கும் போது நாம் தேவனுடைய பிள்ளைகளாகிறோம். இனி எவ்விதமாயிருப்போம் என்று இன்னும் வெளிப்படாவிட்டாலும் அவர் வெளிப்படும் போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரை தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாக இருப்போம் என்பது நிச்சயம். (1யோவான் 3:1,2) 

'என்னை இழுத்துக் கொள்ளும் உமக்குப் பின்னே ஓடிவருவோம்!" வேறு யாரையும் பார்த்து ஓடமாட்டோம். 'நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்! உமது அன்பை நினைப்போம்! உத்தம வாலிபர்கள் உம்மை நேசிக்கிறார்கள்!" (உன்னத 1:4) எத்தனை அருமையான காட்சி. 

'பிள்ளைகளே! இயேசுவின் நாமத்தின் நிமித்தம் உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப் பட்டிருக்கிறது. பிள்ளைகளே! நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறீர்கள். வாலிபரே! நீங்கள் பலவான்களாயிருக்கிறீர்கள். வாலிபரே! நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்தீர்கள்."(1யோவா2:12-14) எத்தனையாய் வாலிபரை உற்சாகப்படுத்தும் வார்த்தைகள்! 

மனதும் மாமிசமும் விரும்பியவைகளைச் செய்யாமல் வீசி எறிந்து விட்டு தேவ ஆவியானவரின் ஆளுகைக்குள் அவரால் நடத்தப்பட்டு தேவனுடைய புத்திரராய் வாழ (ரோமர் 8:14) ஒப்புக்கொடுப்போம். என்றென்றும் இயேசுவின் மகனாக மகளாக வாழ்ந்து இயேசுவை உலகிற்கு காட்டிவிடலாமே! அவரின் மகிமைக்கு புகழ்ச்சியாக வாழ்வோமா...?


                                                                                          சகோதரி. ஜான்சி ஜெயராணி


June 2026

 

கிறிஸ்துவில் அன்பான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். இளம் வயதில் எல்லாவற்றையும் வேகமாகச் செய்துவிடவேண்டும் என்ற எண்ணம் ஒருவேளை உங்களுக்குத் தோன்றக்கூடும். இளவயதில், சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் இருக்கவேண்டியது அவசியம் தான்; ஆனால், விவேகத்தோடு, சரியான ஆலோசனையைப் பெற்று, எதையும் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் நாம் செய்யவேண்டுமே! இன்றைய நாட்களில், அநேக வாலிபர்கள், 'வேகம்" என்ற பெயரில் தவறான ஆலோசனைகளின்படி ஓடி, இறுதியில் எழும்ப முடியாத புதைகுழிகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.

இளவயதில் பலவிதமான நண்பர்கள் உங்களுக்குக் கிடைப்பார்கள்ளூஎனினும், எல்லாரையும் நண்பர்களாக்கிக்கொண்டு, அவர்களோடு சேர்ந்து பயணிப்பது உங்களை ஆபத்தான இடத்திற்குக் கொண்டுசெல்லக்கூடும். அப்படியல்லாமல், யார் நல்லவர்கள் மற்றும் யார் கெட்டவர்கள் என்பதை அறிந்து, சரியான ஆலோசனைகளைக் கொடுக்கும் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதே நம்மை வெற்றிப் பாதைக்கு நேராக அழைத்துச் செல்லும். தவறான நண்பர்களோடு இணைவது நம் உயிருக்கு நாமே உலை வைத்துக்கொள்வதற்குச் சமமானதுளூ இதனால் பேரழிவில் நாம் சிக்கிக்கொள்ள வாய்ப்பு அதிகம் (நீதி. 1:14-18).

அம்னோன் ராஜகுமாரனாக இருந்தான்ளூ அவன் தாவீதின் முதற்பேறானக் குமாரன். ராஜாவாக முடிசூடப்படும் தகுதியும் அவனுக்கு இருந்தது. ராஜாவின் மகனாகப் பிறந்ததால், அவனுக்கு எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தன. ஆனால், அவன் தனது வாழ்க்கையில் சரியான நண்பனையும் நல்ல ஆலோசகரையும் தேர்ந்தெடுக்கவில்லை. தன் நெருங்கிய உறவினரான யோனாதாபை நண்பனாகவும் ஆலோசகராகவும் தேர்ந்தெடுத்தான். ஆனால், யோனாதாபோ மகா தந்திரமானவன்ளூ பிறரை வஞ்சகமாகப் பேசி, தவறான ஆலோசனைகளால் அழிவிற்குத் தள்ளுகிற குணமுடையவன். சிலர் வெளியில் மென்மையாகவும் கனிவாகவும் பேசுவார்கள்;ளூ ஆனால், அவர்களது உள்ளத்திலோ ஓநாயின் குணம் மறைந்திருக்கும். தேவனை அறிந்த பிள்ளைகள் தேவபயமுள்ள பக்தியுள்ளவர்களையே நண்பர்களாகவும் ஆலோசகர்களாகவும் தேர்ந்தெடுக்க வேண்டும். அம்னோனின் மனதில் அவனுக்கே தெரியாமல் தவறான ஆசை துளிர்விட்டது. தனது சகோதரி முறைமையான தாமாரின் மேல் அவன் கண்கள் அலைந்தன. அந்த இச்சையைக் கட்டுப்படுத்தாமல் விட்டதால், அது அவனுக்குள் பெரிய மரமாக வளர்ந்தது. அவனால் தூங்க முடியவில்லை, படிக்க முடியவில்லை, எந்த காரியத்திலும் கவனம் செலுத்த முடியவில்லைளூ அவனுடைய சரீரமும் நாளுக்கு நாள் மெலிந்தது.

பிரியமான தேவபிள்ளைகளே! இப்படிப்பட்டச் சோதனைகள் இளவயதில் பலருக்கும் வரக்கூடியவையே. இப்படிப்பட்ட நேரத்தில், உடனே நம் கண்களைக் கட்டுப்படுத்தவேண்டும் (மத் 5:28-30), மனதை அடக்கவேண்டும். இப்படிப்பட்ட இச்சைகள் நம் அவயங்களில் போர்செய்து நம்மை வீழ்த்தாதபடிக்கு நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

அம்னோன் இச்சைக்கு இடங்கொடுத்ததால், அது அவனுக்குள் கர்ப்பம் தரித்தது (யாக்கோபு 1:14,15). அம்னோன் இந்தக் காரியத்தை யோனதாபிடம் பகிர்ந்தபோது, யோனதாப், அவனுக்கு சரீர இச்சையை அடக்கும்படி அறிவுரை சொல்லாமல், அதை நிறைவேற்றுவதற்கான தீய ஆலோசனையையே கொடுத்தான் (2சாமு. 13:1-5). அதன் விளைவாக, அம்னோன் யோனதாபின் கெட்ட ஆலோசனையின்படி நாடகமாடி, பாவம் என்ற குழியில் விழுந்தான். அந்த தவறான நட்பும் ஆலோசனையும் அவன் வாழ்க்கையை அழிவிற்குக் கொண்டுசென்றது. இறுதியில் அவன் வாழ்வு அவமானத்திலும் மரணத்திலும் முடிந்தது.

இன்றும் அநேக இளைஞர்கள் நண்பர்களின் தவறான வழிநடத்துதலால் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். 'ஒரு முறை தான்", 'இது சாதாரணம்", 'எல்லாரும் இப்படித்தான் செய்கிறார்கள்" என்று சொல்லி, இளைஞர்களை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும் எண்ணற்ற நண்பர்கள் நம்மைச் சுற்றிலும் உண்டு. ஆரம்பத்தில் அவர்களது ஆலோசனைகளும் அறிவுரைகளும் சந்தோஷமாகவும் சுதந்திரமாகவும் தோன்றலாம்; ஆனால், அதன் முடிவு வேதனையிலும் அழிவிலுமே என்பதை இன்றைய இளைஞர்களாகிய நீங்கள் அறிய வேண்டும்.

ஆகையால், பிரியமான வாலிபரே! இளவயதில் நட்பைத் தேர்ந்தெடுக்கும் போது மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். தேவனுக்குப் பயப்படுகிறவர்களையும் நல்ல குணமுள்ளவர்களையும் தேர்ந்தெடுத்து, அவர்களோடு பழக வேண்டும். நம்மை தேவனிடமிருந்து விலக்குகிறவர்களை விட, தேவனிடத்தில் நெருக்கமாக நடத்துகிற நண்பர்களே உண்மையான நண்பர்கள். 'ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்;. மதிகேடரோடே தோழனாயிருக்கிறவனோ நஷ்டமடைவான்" (நீதி. 13:20). 

இந்த வாலிப வயதில், நல்வழியில் நடத்துகிற நண்பர்களை தேர்ந்தெடுப்போம், ஒருவேளை தவறான நண்பர்களைக் கொண்டிருந்தால், இன்றே அவர்களை விட்டு விலக தீர்மானம் எடுப்போம். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!

May 2026

 

கிறிஸ்துவுக்குள் அருமையான தம்பி, தங்கச்சி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். இன்றைய நாட்களில் நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிய  கனவுகளோடு இருக்கிறீர்களா? தேவனால் உயர்த்தப்படவேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறீர்களா? தேவன் உங்களை எந்த இடத்தில், எப்படியாக உயர்த்த விரும்புகிறாரோ, அந்த இடத்திற்கு உயர்த்தப்பட  உங்களை ஆயத்தப்படுத்தும் முக்கியமான உண்மையை வேத வசனத்தின் மூலம் உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

இளமைப் பருவம் என்பது வாழ்க்கையில் மிக முக்கியமாக,  உருவாக்கப்படும் காலமாகும். இப்பருவத்தில், நீங்கள் உங்களுக்காக ஒரு அடையாளத்தைத் தேடிக்கொள்ள விரும்பலாம்; யாருடைய கட்டுப்பாடும் இல்லாமல், உங்களின் விருப்பப்படி வாழ வேண்டும் என்று நினைக்கலாம்;ஆனால், வேத வசனம் நமக்குக் கற்றுக்கொடுப்பது என்ன? எது நமக்கு தகுதியானது? எது நமக்கு நல்லது? என்பதையே. 

வேதாகமத்தின் அடிப்படை உண்மை : புலம்பல் 3 : 27 -ல் 'மனுஷன் தன் இளம் பிராயத்தில்  நுகத்தைச் சுமப்பது அவனுக்கு நல்லது" என்று வாசிக்கின்றோம். இந்த வசனம் முதலாவது கடினமாகத் தோன்றலாம்.  ஆனால், அதில் ஒரு ஆழமான உண்மை இருக்கிறது. தேவன் உங்களை எடுத்துச் செல்லும் பயணம் ஒருவேளை கடினமாகத் தோன்றலாம். அந்தக் கடினமானப் பாதையின் வழியாக உங்களை எடுத்துச் சென்று பழக்குவித்து, பலப்படுத்தி, தகுதிப்படுத்தி  கைகளில் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்து, அநேகருக்கு ஆசீர்வாதமாக உங்களை தேவன்  மாற்றுவார். 

வாலிபனே, உன் வாழ்க்கையில் நீ சுமக்கின்ற  நுகங்கள், உன் வாழ்க்கையை உருவாக்கும். எடுத்துக்காட்டாக, பெற்றோர் அநேக நேரம் இதைச் செய்யாதே, நேரத்துக்கு வா, நன்றாகப் படி, ஞாயிற்றுக்கிழமை ஒழுங்காக ஆராதனைக்குப் போ, வேதம் வாசித்து ஜெபம் செய் என்று சொல்பவைகள் எல்லாம், உன் எதிர்காலத்தை உருவாக்குகின்ற நுகங்களே!  

நுகத்தை ஏற்றுக்கொள்ளும்  மூன்று வழிகள் : 

1. பணிவு அல்லது அடங்கி இருத்தல் : 1 பேதுரு 5 : 5, 6 வசனங்களில் இளைஞர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று பேதுரு கூறுகிறார். மனத் தாழ்மையோடு, தங்களுக்கு மேலானவர்களுக்குக் கீழ்ப்படிந்து, தேவனுடைய பலத்த கைக்குள் அடங்கியிருக்கவேண்டும். இளைஞர்களாகிய உங்களின் எண்ணங்கள் அநேக நேரம், 'எனக்கு எல்லாம் தெரியும், என்னால் எல்லாம் செய்ய முடியும், யாருக்கும் நான் அடங்கி இருக்க விருப்பமில்லை" என்பதுதான். 

எஸ்தர் மனத் தாழ்மையோடு, பணிவோடு, தன்னை வளர்த்த மற்றும் தேவன் தெரிந்து கொண்ட ஜனங்களை நேசித்த மொர்தேகாய்க்கு அடங்கி இருந்தாள். தான் பட்டத்து ராணியாக வருவதற்கு தன்னை ஆயத்தம் பண்ணும்படி, தனக்கு மேலாக நியமிக்கப்பட்ட ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமே அல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை. தேவன் இவர்களை எனக்கு மேலாக நியமித்திருக்கிறார் என்ற எண்ணத்தினால் பொறுமையோடு, எந்த முறுமுறுப்பும் இல்லாமல் அடங்கியிருந்ததை நாம் பார்க்கிறோம் (எஸ்தர் 2:15,20). அதன் விளைவு என்ன? எஸ்தர் ராஜாத்தியாக உயர்த்தப்பட்டாள். அவள் மூலம், சொந்த ஜனங்களுக்கு மகிழ்ச்சியும், களிப்பும் உண்டாயிற்று; பகைஞனுடைய சதித்திட்டங்கள் முறியடிக்கப்பட்டன.

அருமையான தம்பி, தங்கச்சி, தேவன் உங்கள் மூலம் பெரிய திட்டங்களை நிறைவேற்றப் போகிறார். அதற்காக உங்களை பழக்குவிக்கிறார் என்பதை அறிந்து, தேவனுடைய பலத்த கைக்குள் பொறுமையாக அடங்கி இருங்கள். உங்களுக்கு மேலாய் வைக்கப்பட்டவர்களுக்கு கீழ்படியுங்கள். தேவன் ஏற்ற காலத்தில் உங்களை அநேகருக்கு ஆசிர்வாதமாக உயர்த்துவார்!

2. பொறுப்புணர்வு : மோசேயின் பணிவிடைக்காரனாகிய யோசுவா என்னும் வாலிபன், மோசேயின் காலத்திற்குப் பின்பு ஒரு பெரிய தலைவனாக உயர்த்தப்பட்டதைப் பார்க்கிறோம். மோசே தன் கைகளை யோசுவாவின் மேல் வைத்தபோது, அவன் ஞானத்தின் ஆவினால் நிறையப்பட்டான் (உபா. 34:9). மோசே செய்யவேண்டிய, தேசத்தைப் பங்கிட்டுக் கொடுக்கின்ற வேலையை யோசுவா செய்யும்படி, ஒரு பெரிய பொறுப்பை தேவன் அவன் கையில் கொடுத்தார் (யோசுவா 1 : 6). 

இந்த யோசுவாவின் துவக்கம், மோசேயின் பணிவிடைக்காரனாகிய வாலிபனாக, மோசே கொடுத்த கட்டளைகளைப் பொறுப்புணர்வோடு செய்கிறவனாக ஆரம்பித்தது. யோசுவாவைப் பார்த்து அமலேக்கியரோடு  யுத்தம் பண்ணு என்று மோசே சொன்னபோது, உடனடியாக கேள்வி கேட்காமல், சந்தேகிக்காமல் தனக்குக் கொடுத்த பொறுப்பை உடனே நிறைவேற்றினான் (யாத. 17:9.10). வேவு பார்க்க சென்றபோதும் மற்றும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் யோசுவா பொறுப்புணர்வோடு நடந்து கொண்டதை வேதத்தில் பார்க்கிறோம். தேவன் யோசுவாவை உயர்த்தினார்.

தாவீதும் கூட தன் வீட்டிலும், வேலையிலும், தன் கையில் கொடுக்கப்பட்ட ஆடுகளைக்குறித்த விஷயத்திலும் பொறுப்புணர்வோடு நடந்து  கொண்டார். இதனால் தாவீது  தேவனால் அபிஷேகம் பெற்று, உயர்த்தப்பட்டார். நீங்களும் இந்த இளவயதில், பொறுப்புணர்வோடு இருந்தால், தேவன் உங்களை நம்பி, பெரிய பொறுப்புகளை உங்கள் கையில் கொடுப்பார்.

3. ஒழுக்கமுள்ள வாழ்க்கை : உன்னுடைய உயர்வுக்கு ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை மிகவும் அவசியமானது. ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு ஒழுக்கத்தை கடைப்பிடிக்காவிட்டால், தோல்வியான வாழ்க்கை வாழ நேரிடும். தானியலும் அவன் நண்பர்களும் அடிமைகளாக பாபிலோனுக்கு வந்தபோது, ராஜ போஜனத்தினால் தாங்கள் தீட்டுப்படக்கூடாது, தேவன் விரும்புகிற ஒழுக்கம், நாங்கள் சாப்பிடும் ஆகாரத்தில் கூட இருக்கவேண்டும் என்ற ஒரு தீர்மானத்தோடு வாழ்ந்தார்கள். 

தானியலுக்கு ஒரு நல்ல பழக்கம் இருந்தது, அதுதான் இடைவிடாத ஜெப வாழ்க்கை. தானியலுக்கு விரோதமாக யார் எதிராக வந்தாலும், சட்டங்கள் அவனுக்கு விரோதமாய் இயற்றப்பட்டாலும், சூழ்நிலை கடினமாக இருந்தாலும் தேவனைத் தேடுகிற ஒழுக்கமுள்ள வாழ்க்கையை இழக்கமாட்டேன் என்ற தீர்மானத்தோடு வாழ்ந்தான். அதனால் தான் தானியேலின் காரியம் எல்லா ராஜாக்களின் காலத்திலும், ஜெயமாகவே இருந்தது (தானியேல் 6:18). உயர்ந்த அதிகாரத்தில் வைக்கப்பட்டிருந்தாலும் கூட, சாதாரண அன்றாட காரியங்களிலும் ஒழுக்கம் நிறைந்தவனாகக் காணப்பட்டான். நீங்களும் அந்த ஒழுக்கம் என்ற நுகத்தை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளுங்கள். ஆவிக்குரிய ஒழுக்கத்தை பழக்கமாக்குங்கள்; தேவன் உயர்ந்த ஸ்தானத்தில் கொண்டு வந்து நிறுத்துவார்.

இயேசுவின் நுகம் : இரண்டு மாடுகள் அல்லது காளைகள் நுகங்கள் பூட்டப்பட்டு நிலங்களில் உழவுக்காக பயன்படுத்தப்படுவதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். நன்றாய் பழக்கப்பட்ட மாட்டை, பழக்கப்படாத மாட்டுடன் நுகத்தில் இணைத்து, பழக்குவிப்பார்கள். இரண்டும் சேர்ந்து நுகத்தினால் இணைக்கப்படும்போது வேலை இலகுவாகி விடுகிறது. அவர்கள் ஒன்றாகச் செயல்படும்போது, ​​தனித்தனியாகச் செய்வதை விட அதிகமாகச் செய்ய முடியும். ஓர் இணைப்பு என்பது ஒரு துணைக் கருவியாகும். மத்தேயு 11 : 27- 29 இல் இயேசு கிறிஸ்து, அவருடைய நுகத்தை நாம் ஏற்றுக் கொள்ளும்போது அது மெதுவானதாக மற்றும் அவரது சுமை இலகுவானதாக இருக்கும் என்று கூறி நம்மை அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவோடு நாம் நுகத்தில் இணைக்கப்படும்போது நாம் தனியாக இல்லை, அவர் நம்மோடு கூட இருக்கிறார். எனவே, 'எனக்கு நியமிக்கப்பட்ட நுகத்தை, சுமையை நான் சுமப்பேன்; தேவனுடைய உதவியோடு, தேவனிடத்தில் கற்றுக்கொண்டு சுமப்பேன்" என்று இன்று ஒரு தீர்மானம் செய்வோம்! அருமையான தம்பி, தங்கச்சி, 'மனுஷனுக்கு நல்லது" என்று சொன்ன நுகத்தை இளவயதில் சுமக்கும் போது, தேவன் உங்களை ஏற்ற காலத்தில் அவருடைய திட்டத்தின் படி உயர்த்துவார். ஆமென்!

April 2026

 

அன்பான வாலிப நண்பர்களே! உங்கள் மேல் நினைவாய் இருக்கிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 

'நானோ சிறுமையும் எளிமையுமானவன்! கர்த்தரோ என்மேல் நினைவாய் இருக்கிறார்!!" என்றார் கர்த்தரின் இருதயத்திற்கு ஏற்றவராய்க் காணப்பட்ட தாவீது. ராஜாவாக அபிஷேகிக்கப்பட்டிருந்தாலும், அவர் வேளை வரும் வரை எல்லோராலும் மறக்கப்பட்டவர். ஆம், இன்றைய வாலிபர்களின் நிலையும் அப்படித்தானே…! உங்களில் சிலர் அல்லது பலர் தழடிடநளளஇ டயல ழககஇ பேப்பர் போட்டுவிட்டேன்… என இன்னும் நிறைய சவால்கள் நிறைந்த பாதைகளின் வழியாய் போய்க்கொண்டிருப்பீர்கள். ஆனால், கர்த்தர் உங்களை நினைத்தால் அது போதுமே!

வேதத்தில் 'சகரியா" என்ற பெயரில் கிட்டத்தட்ட 30 பேர் உண்டு. அந்த பெயரின் அர்த்தம் 'யெஹோவா நினைவுகூறுகிறார்"(Yahweh Remembers) என்பது. இஸ்ரவேல் மற்றும் யூதர்களின் சரித்திரங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, யூதர்கள் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப் போகும் முன்பும், அப்புறம் ஆலயத்தைக் கட்ட சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்த பின்பும், இதே பெயரில் வரும் இரண்டு வாலிபரை நாம் வேதத்திலே சந்திப்போமா?

யோய்தா என்ற மிகச் சிறந்த ஆசாரியனால் 7 ஆண்டுகள் பொத்தி பாதுகாத்து வைக்கப்பட்டு, 7 வயதிலேயே யூதாவின் எருசலேமிலே தாவீதின் சிங்காசனத்தில் ராஜாவானார் யோவாஸ். தகப்பனில்லாத அவருக்கு ஆசாரியனாகிய யோய்தா தான் எல்லாமே. யோய்தா உயிரோடிருந்த நாளெல்லாம் அவர் சொற்கேட்டு நடந்ததால், பெரிய சீர்திருத்தங்களையும், தேவாலயத்தைச் சுத்திகரிப்பதையும் சிறந்த முறையில் செய்தார். ஆனால், யோய்தாவின் காலம் முடிந்தபோதோ, பிரபுக்கள் மற்றும் மக்கள் சொல்வதைக் கேட்டு, கர்த்தரை விட்டுவிட்டு, அந்நிய தெய்வங்களை உள்ளே கொண்டுவந்து விட்டார்கள் (2நாளாகமம் 24:15-22). அங்கே தான் வெகுண்டு எழுகிறான் யோய்தாவின் குமாரனான வாலிபனாகிய சகரியா! யோவாஸ் ராஜாவுடன் சிறுவயதிலிருந்தே ஒன்றாக உண்டு உறவாடி விளையாடியவன், ஆனால் இன்று எதிர்த்து நிற்கிறான். ஒரு தீர்க்கதரிசியாக உருவெடுத்து நிற்கிறான்… தேவனுடைய ஆவியினால் நிறைந்து, 'நீங்கள் கற்பனைகளை மீறுகிறது என்ன? கர்த்தர் உங்களைக் கைவிடுவார்" என்கிறான். ஜீவனையும் பணயம் வைத்து துணிச்சலாக. விளைவு, இரத்தசாட்சிகளின் பட்டியலில் இடம் பிடிக்கிறான். ஆலயப்பிரகாரத்திலே ராஜாவின் கட்டளைப்படி கல்லெறிந்து கொல்லப்படுகிறான். இவரைப் பற்றி வேறு காரியங்கள் எதுவும் தெரியாவிடினும், தேவனால் ஆசாரிய ஊழியத்திற்கென்று தெரிந்தெடுக்கப்பட்ட ஆரோனின் பேரன் பினெகாஸ் போன்று வைராக்கியம் பிடித்த ஆசாரியப் பரம்பரை! என்பது தெளிவு. ஏபிரெயர் 12:4 ன் படி 'பாவத்திற்கு விரோதமாய் போராடுகிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே!" வாலிப தம்பி தங்கையே! உங்களுடைய சொந்த வாழ்க்கையிலும் படிக்கிற இடங்களிலும் அல்லது வேலையிடங்களிலும் கூட இதுபோன்ற எதிர்த்து தனித்;து நிற்கும் அனுபவம் உண்டா? அப்படியானால் கர்த்தர் உங்களை விசேஷமாய் நினைக்கிறார்.

சிறிய தீர்க்கதரிசிகளின் வரிசையில் கடைசிக்கு முந்தின புத்தகமாக வரும் சகரியா தீர்க்கதரிசி தான் இரண்டாம் நபர். வாலிபனான சகரியா ஒரு வல்லமையான தீர்க்கதரிசி" எப்படி..? பெரிய தீர்க்கதரிசி ஏசாயா தரிசித்த (ஏசாயா 6:5) சேனைகளின் கர்த்தராகிய இராஜாவை, கேரூபீன்கள், சேராபீன்களாகிய பரலோக தூதர் சேனைகளோடு பெரிய ஆர்மியை, சிறிய ஆனால் துடிப்பான வாலிபன் தரிசித்துவிட்டார் அல்லவா! ஆம்! உங்களுக்கு இந்த அனுபவம் உண்டா? தனியாக உட்கார்ந்து வேதத்தின் வெளிச்சத்திலே தேவனை தரிசிக்க முடிகிறதா? 'சேனைகளின் கர்த்தர்" என்னும் நாமம் (சகரியா புத்தகத்தில் 50க்கும் அதிகமான முறை) திரும்பத் திரும்ப வசனத்திற்கு வசனம் வருகிறதோடு 'சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்" என்று மாபெரும் மிலிட்டரியின் கேப்டனுடைய கட்டளையாக வெளிப்படுகிறது! 

இவரின் முதல் தீர்க்கதரிசன வார்த்தையே, 'என்னிடத்தில் திரும்புங்கள்" அல்லது 'மனம்திரும்புங்கள்" என்று புதிய ஏற்பாட்டிலே யோவான் ஸ்நானகனும் நம் இரட்சகர் இயேசுவும் சொல்லி அழைத்த வார்த்தைகள் தான் வாலிபன் சகரியாவின் வாயிலிருந்தும் வெளிப்படுகின்றன. இன்றும் இப்படிப்பட்ட செய்திகள் மிகவும் அவசியமல்லவா? 

பாபிலோனிலே பிறந்து வளர்ந்து, அக்கினிக்கிரையான தேவாலயம் திரும்பக் கட்டப்பட செருபாபேல் மற்றும் பிரதான ஆசாரியனாகிய யோசுவா தலைமையில் இஸ்ரவேல் நாடு திரும்பிய இவரை, சேனைகளின் கர்த்தரின் வைராக்கியம் பற்றியெரியச் செய்தது. உலகமே எதிர்த்தாலும் நான் உங்களோடு இருக்கிறேன் என்று கர்த்தர் தமது ஜனத்திற்காக காட்டும் வைராக்கியம் எத்தனை மகா உக்கிரமாகத் தெரிகிறது (சகரியா 1:14; 8:1-3). வாலிப தம்பி தங்கையே! இன்றைய சபைகளைக் குறித்த பக்திவைராக்கியம் இயேசு சொன்னதைப் போல நம்மைப் பட்சிக்கிறதா? (யோவான் 2:17). தேவாலயம் கட்ட வந்தவர்கள் தம் சொந்த வீடுகளையும் சொந்த அலுவல்களையும் பார்த்து உல்லாசமாய் வாழ்ந்தபோது, திரும்ப எடுத்துக் கட்டுவதற்கு ஜனங்களை உற்சாகப்படுத்தி 'திடன்கொள்ளச் செய்தார்" இவர். (எஸ்ரா 5:1,2) தனியாக அல்ல, நல்ல மூத்த அனுபவமிக்க ஆகாய் தீர்க்கதரிசியோடு நின்றார். 

அற்பமாய் செருபாபேலால் அஸ்திபாரம் போட்டு ஆரம்பிக்கப்பட்ட வேலை ஸ்தம்பித்தபோது, 'நீர் தான் இதை செய்துமுடிக்கப்போகிறீர். உமக்கு முன்பாக பெரிய பர்வதமாயிருந்தாலும் எம்மாத்திரம்! ஆவியானவர் பெலன் தந்து கிருபை தந்து சேனைகளின் கர்த்தர் கூட இருந்து செய்து முடிப்பார். நீர் எடுக்கும் முயற்சிகளை கர்த்தர் சந்தோஷமாய் பார்க்கிறார்." (சகரியா 4:6-10) என்று தலைவர்களையும் உற்சாகப்படுத்தும் சகரியாக்கள் இன்று தேவை! 'come on! வாலிப நண்பா! உன்னில் நற்கிரியையை ஆரம்பித்தவர் அதை முடிவு வரை இயேசுவின் வருகையின் நாள் வரை முடிய நடத்துவார்." (பிலி 1:5) என்ற நம்பிக்கையை நீங்கள் உங்கள் நண்பர்களுக்குச் சொல்லி கையைப் பிடித்துத் தூக்கிவிடுவது உங்களின் பொறுப்புதானே!

நம் ஆண்டவர் இயேசு இரட்சிக்கிறவராக முதல் வருகையில் இப்பூமியில் கழுதையின்மேல் பவணி வருவது (சகரி 9:9), அவர் 30 வெள்ளிக்கு காட்டிக் கொடுக்கப்படுவது (சகரி 11:12), அவரின் மரணம் - குத்தப்படுவது (சகரி 12:10; 13:1,7 மத் 26:31 யோவான் 19:37) இன்னும் பல மிகத் துல்லியமாக இவர் மூலம் முன்னறிவித்தவை அப்படியே நிறைவேறிவிட்டது. இப்போதிருக்கிற எருசலேமின் போர்ப் பதற்றங்கள் பற்றியும், கொடுமையாய் அழிக்கக்கூடிய அணு ஆயதங்களின் தாக்கம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் (சகரி 12:2,3; 14:2,12), இயேசுவின் இரண்டாம் வருகையில் பரிசுத்தவான்களோடு கூட ஒலிவமலையில் வந்து இறங்குவது (சகரி 14:4,5) மற்றும் ஆயிரம் வருட அரசாட்சி (சகரி 14:9,16-21) பற்றியும் வெளிப்படுத்தப்பட்டவைகள் துல்லியமாக நிறைவேறக் காத்திருக்கின்றன. இயேசுவின் வருகையைப் பற்றி பேசுவோர் இப்போது மிகக்குறைவு. அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதை நம்ப மறுக்கின்றனர். நீங்கள் ஒரு சகரியாவாக இருந்தால் சொல்லவேண்டியது உங்கள் கடமை! வருகையின் நாள் சமீபமே…ஓவ்வொரு நாளும் பரிசுத்தமாய் வாழ நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்… பரிசுத்தமாயிருக்கிறவன் இன்னும் ... நீதி செய்கிறவன் இன்னும் செய்யட்டும்... ஆனால், பரிசுத்தமில்லாதவன் (கானானியன்) அங்கே இருப்பதில்லை... ஆம்! 'சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தம்" என்பவைகள் தான் சகரியாவின் இறுதி வார்த்தைகள்!

மேஜர் தீர்க்கதரிசிகளாக வரும் ஏசாயா, எசேக்கியேல், தானியேல் போன்றவர்களோடு நின்று, இவரும் பரலோக தரிசனங்களை தூதர்களோடு பேசி கண்டதோடு, நாடுகளின் மேல் வரும் நியாயத்தீர்ப்புகளையும் அறிவிக்கிறார். 

இறுதியாக நம் ஆண்டவர் இயேசு மத்தேயு 23:35 ல் 'ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொலை செய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம் வரைக்கும்" என்று பழைய ஏற்பாட்டு இரத்தசாட்சிகளைப் பற்றி குறிப்பிடுவதைப் பார்க்கும்போது இந்த சகரியாவும் முதலில் கொல்லப்பட்ட அவரைப் போன்றே இரத்தசாட்சியானது எத்தனை பெரிய ஆச்சரியமான ஒற்றுமையைக் காட்டுகிறது. எந்த ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று செருபாபேலையும் மக்களையும் எழும்பிக் கட்டிமுடிக்க கைகளைத் திடப்படுத்தினாரோ அதே ஆலயத்தில் அவர் இரத்தசாட்சியாகிறார். ஒருவேளை அவர் கொல்லப்பட்ட காலம் இரண்டு ஏற்;பாடுகளுக்கும் இடைப்பட்ட கர்த்தர் பேசாதிருந்த 400 வருட இருண்ட காலத்தில் நடந்திருக்கலாம்; அதனால் வேதத்தில் எழுதப்படாமல் இருக்கலாம். ஆனால், நம் ஆண்டவரோ அதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார் பாருங்கள்! நீங்கள் ஒரு உண்மையான சகரியாவானால் உங்களுக்குக்கூட இதே நிலை வரலாம்! பரவாயில்லை உங்களை கர்த்தர் கரத்தில் வரைந்தவராய் என்றென்றுமாய் நினைத்திருக்கிறாரே!! நடபடி புஸ்தகம் வாசிக்கப்பட்டு மொர்தெகாய் நினைவு கூறப்பட்டபோது ஒரே இரவிலே காரியங்கள் தலைகீழானதே! நீங்கள் கர்த்தருக்காக செய்யும் ஒவ்வொன்றும் ஞாபக புஸ்தகத்தில் எழுதப்படுவதை அறிவீர்களோ? கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார். (சங்115:12)

March 2026

 


    கிறிஸ்துவுக்குள் பிரியமான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். இந்த உலகத்தில் நாம் வாழும்வரை, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை நோக்கி வரும் ஒவ்வொரு சவால்களையும் நாம் சந்தித்தே ஆகவேண்டும். வாய்ப்புகள் ஒருவேளை நம்மைத் தேடிவராமலிருக்கலாம்; ஆனால், சோதனைகளும் மற்றும் சவால்களும் நம்மைத் தேடி வந்துகொண்டேயிருக்கும் (oppurtunities will not come to you, but temptation will knock at your door). 

என்றபோதிலும், ஒரு மனிதனுக்கு எழும் முதல் சவால், அவனது குடும்பத்திலேயே. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே (மத் 10:36) என்று இயேசுவும் சொல்லியிருக்கின்றாரே. எனவே, வாலிபரே, குடும்பத்தில் எழும் சவால்களைச் சந்திக்க முதலில் நீங்கள் ஆயத்தமாயிருக்கவேண்டும். ஒருவேளை நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கலாம்; ஆனால், குடும்பத்தாரோ இன்னமும் இரட்சிக்கப்படாத நிலையில் காணப்படலாம். நீங்கள் கிறிஸ்துவுக்கென்று உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கலாம்;; ஆனால், குடும்பமோ உங்களிடமிருந்து அநேக காரியங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கலாம். ஊழியக்காரராக, மிஷனரியாக மாறவேண்டும் அல்லது செல்லவேண்டும் என்று நீங்கள் மனதில் நினைத்துக்கொண்டிருக்கலாம்; ஆனால், தாயோ, தந்தையோ, உடன் பிறந்தவர்களோ, குடும்பமோ, 'நீ நன்றாகப் படித்து, நல்லதோர் வேலைக்குப் போகவேண்டும், உயர்ந்த நிலைக்கு வரவேண்டும்' என்று ஆலோசனை சொல்லலாம். தங்களுடைய நினைவுகளும், எண்ணங்களும் மற்றும் தேவைகளும் சந்திக்கப்படவேண்டும் என்ற வாஞ்சையோடு வாழ்ந்துகொண்டிருக்கும் வாலிபர்கள் இந்நாட்களில் ஏராளம். பிரியமான வாலிபரே! பெற்றோர்கள் உங்களைக் குறித்து ஒரு கனவு வைத்திருக்கலாம். ஆவிக்குரிய பெற்றோர்கள் ஆவிக்குரிய கனவோடும், உலகத்திற்குரிய பெற்றோர்கள் உலகத்திற்குரிய கனவோடும் உங்களது எதிர்காலத்தினைப் பார்க்கலாம். என்னைக் காட்டிலும் என் பிள்ளை அதிகம் சம்பாதிக்கவேண்டும் என்று உங்களது பெற்றோர் எண்ணலாம்;; இதுதான் இன்றைய உலகம்.

பெலிஸ்தியர்கள் சவுலுக்கு விரோதமாக படையெடுத்துவந்தபோது, தேசத்தின் ஜனங்கள் கைகளில் ஆயுதங்கள் இல்லாதிருந்தது. ராஜாவாகிய சவுலும், ராஜாவின் மகன் யோனத்தானும் மட்டுமே தங்கள் கைகளில் பட்டயங்களை வைத்திருந்தனர். எனவே, பெலனை அதிகரிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், ஜனங்களைச் சாப்பிடாதிருக்கும்படியாக ஆணையிட்டிருந்தான் ராஜாவாகிய சவுல். ஆனால், தகப்பன் சொன்னதை அறியாதவனாக ஆயுததாரியை உடன் கூட்டிக்கொண்டு பெலிஸ்தியரின் தாணையத்திற்குள் சென்று, பெலிஸ்தியரை முறியடித்து வெற்றியும் பெற்ற சவுலின் குமாரனாகிய யோனத்தான், திரும்பி வரும் வழியில் ஒரு தேன்கூட்டைக் கண்டு அதிலிருந்து தேனை எடுத்து சாப்பிட்டவனாக, 'எல்லாரும் சாப்பிட்டிருந்தால் கொள்ளை எத்தனை அதிகமாயிருந்திருக்கும்" என்று நினைத்தான். ஆனால், தகப்பனாகிய சவுலுக்கு இது தெரியவந்தபோது, சவுல் மிகுந்த கோபம் கொண்டான். அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான்வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் (1சாமு 14:44) என்று சொல்லுகின்றான்.

பிரியமான வாலிபரே! உங்களுடைய தீர்மானங்களும், திட்டங்களும் குடும்பத்தாருக்குத் தெரியவரும்போது, 'எங்களிடம் கேட்காமல் ஏன் இப்படி தீர்மானித்தாய்?' என்று குடும்பத்தினர் உங்களிடம் கேள்வி கேட்கும் நிலை உருவாகலாம். கல்லூரிக்குப் படிக்கவா அல்லது ஜெபிக்கவா எதற்குப் போகிறாய்? என்று உங்களுடைய தீர்மானங்கள் ஒருவேளை அசட்டை செய்யப்படக்கூடும். 

தாவீதின் வாழ்க்கையிலும் இப்படிப்பட்டச் சூழ்நிலை உண்டானது. யுத்தகளத்தில் இருந்த மனுஷரோடே தாவீது பேசிக்கொண்டிருக்கிறதை தாவீதின் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின் மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்திரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும் உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான் (1சாமு 17:28) அல்லவா.  பெற்றோர், உடன்பிறந்தோர், உறவினர் இவர்கள் மாத்திரமல்ல, சபை விசுவாசிகள், போதகர்கள் மூலமாகவும் நம்முடைய தீர்மானங்களுக்கு எதிர்ப்புகள் உண்டாகலாம்; என்றபோதிலும் நீங்கள் பய்பபடாமல் தொடர்ந்து முன்னேறிச் செல்லுவீர்களென்றால், வாசல்களைத் திறக்கவும், உங்களுக்காக காரியங்களை ஜெயமாக மாற்றவும் தேவன் போதுமானவர். 

இஸ்ரவேலருக்கு எதிராக பெலிஸ்தியர்கள் ஆயுதங்களோடு வந்திருந்தார்கள்; ஆனால், இஸ்ரவேலரிடத்திலோ ஆயுதங்கள் இல்லாதிருந்தது. பெலிஸ்தியரின் சேனையில் கோலியாத் போர்க்கவசங்களோடு நின்றுகொண்டிருந்தான்;; ஆனால், தாவிதோ கூழாங்கல்லோடு சென்றான். கோலியாத்தினிடத்தில் எல்லாம் இருந்தது, தாவீதினிடத்திலோ ஒன்றுமில்லை. என்றபோதிலும், 'அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப் போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே" (1சாமு. 17:36) என்று சொன்னவனாக தேவனால் வெற்றியை வசப்படுத்தினான் தாவீது. 

அவ்வாறே, 'விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்துக்குப் போவோம் வா. ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை" என்று தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கிச் சொன்னவனாக (1சாமு. 14:6) தேவனால் வெற்றியை வசப்படுத்தினான் யோனத்தான். 

பிரியமான வாலிபரே! யோனத்தானும், தாவீதும் வித்தியாசமானவர்களாயிருந்ததினால் அல்லவோ தன் ஜனத்திற்கு வெற்றியைக் கொண்டுவந்தார்கள். ஆம், தேவன் உடனிருந்தால், பக்கத்திலிருக்கும் ஆயிரமும் வலதுபுறத்திலிருக்கும் பதினாயிரமும் உங்களைச் சேதப்படுத்தாது; கண்களால் மட்டுமே அவைகளைப் பார்ப்பீர்கள். உறங்காமலும் தூங்காமலும் உங்களைக் காப்பவர் உங்களுடன் உண்டு. எனவே, எதிராக வரும் சவால்களைக் கண்டு நீங்கள் கலங்கவேண்டிய அவசியமில்லை. பராக்கிரமங்களைச் செய்கிற தேவனின் தோளில் நீங்கள் இருக்கிறீர்கள்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது. உலகத்திற்கு ஒத்த வேஷம் தரிக்க அழைக்கப்பட்டவர்களல்ல நீங்கள். படைத்தவருக்கு எதிர் திசையில் இன்றைய உலகம் சென்றுகொண்டிருக்க, தேவப் பிள்ளைகளாகிய நீங்கள் வித்தியாசமானவர்கள் என்பதை உலகத்திற்கு உணர்த்துங்கள். 'வித்தியாசமுள்ளவர்களாக வாழுங்கள், வித்தியாசமாக வாழுவோரை உருவாக்குங்கள்."

                                         (சகோ. D. அகஸ்டின் ஜெபக்குமார் எழுதிய   வித்தியாசமுள்ளவனாயிரு புத்தகத்திலிருந்து)

Feb 2026

கிறிஸ்துவுக்குள் அன்பான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். நிலையில்லாத இப்பூமியில் ஆண்டவருக்காக நிற்கும் சாட்சிகளாக அழைக்கப்பட்டவர்கள் நீங்கள்; என்றபோதிலும், வாலிபத்தின் ஓட்டத்தில் ஒருவேளை நான் விழுந்துவிடுவேனோ? என்ற பயத்துடனேயே ஓடிக்கொண்டிருக்கும் வாலிபர்கள் இந்நாட்களில் உண்டு. எங்கே விழுவேன்? எப்படி விழுவேன்? யாரால் விழுவேன்? எதனால் விழுவேன்? ஏன் விழுவேன்? எதற்காக விழுவேன்? போன்ற கேள்விகளை ஒருவேளை சுயமாக நீங்கள் கேட்டுப்பார்த்தால், உத்தரவு கொடுக்க உங்கள் உள்ளத்திற்கும் உதடுகளுக்கும் பெலனிருக்காது. நினையாத நேரத்தில் விழுந்துபோன வாலிபர் பலர்; நினைத்திருந்தும் கவனக்குறைவினால் விழுந்துபோன வாலிபர் பலர்; தடுக்குவதும் மற்றும் தள்ளுவதும் பெலமுள்ளதாயும் தங்களுக்குள்ளோ பெலமில்லாமலிருப்பதினாலும் வீழ்ந்துபோன வாலிபர் பலர்; உதவுவார் மற்றும் தூக்கிவிடுவார் எவருமின்றி ஒண்டியாய் வழிகளில் வீழ்ந்து கிடக்கும் வாலிபர் பலர்; அவ்வாறே, எதிரியின் பாதையில் தொடர்ந்து பயணித்து, தொலைதூரம் சென்றபின்பு வீடு திரும்ப திசையறியாமல் திணறும் வாலிபரும் உண்டு.

                பிரியமான வாலிபரே! பாவத்தினால், பாவம் செய்யும் வாலிபரது வாழ்க்கையில் தன் பெலமே ஓங்கி நிற்கவேண்டும் என்றும், தன் குரலே ஓங்கி ஒலிக்கவேண்டும் என்றும் நினைப்பவன் சத்துரு. எனவே, விழுகையைக் குறித்த பயத்திற்கு இடங்கொடுக்காமல், உங்கள் ஆத்துமாவின் பெலத்தை அதிகரித்து, வாலிபத்தை கிறிஸ்துவுடன் வலிமையுள்ளதாக்கிக்கொள்ளுங்கள்.  

                எப்படியாகிலும் கிறிஸ்துவை விட்டு உங்களைப் பிரித்து, தன்னோடு சேர்த்துவிடவேண்டுமென்று, வெவ்வேறு விதங்களில் உங்களைச் சூழ சத்துரு யுத்தம் செய்துகொண்டிருந்தாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் 'அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" (ரோமர் 8:36,37) என்ற பவுலின் வாழ்க்கை உங்கள் வாழ்க்கையிலும் காணப்படுமாயின் 'நீங்கள் அன்புகூருகின்ற கிறிஸ்துவினாலேயே உங்கள் வாழ்க்கையிலும் ஜெயம் உண்டாகும்" என்பது நிச்சயம். 'உயிரைப் பறித்தாலும் உறுதியாயிருப்போம்" என்று தானியேலைப் போல நீங்கள் நின்றால், பிதாவுடனான உறவினின்று உங்களைப் பிரிக்க பெலனற்றவனாகிவிடுவான் சத்துரு. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் (ரோமர் 8:38,39) என்ற 'அழுத்தமான அர்ப்பணிப்பு" உங்களுக்கு இருந்தால், அச்சம் அவசியமில்லை.

       பிரியமான வாலிபரே, 'தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும், அன்பும், தெளிந்தபுத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்" (2தீமோ. 1:7). அப்படியிருக்க, பயத்தை சத்துரு உங்கள் வாழ்க்கையில் புகுத்தும் சந்துபொந்துகளை அடையாளம் கண்டு அவைகளை அடைத்துவிடுங்கள்; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் (எபே. 4:27). 

     ஆனாலும், நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய மற்றும் ஒரு காரியம் உண்டு; அது, தன் பக்கத்திலிருக்கும் வீழ்ந்தவர்களை, உங்களை வீழ்த்துவதற்காகச் சத்துரு பதிவிருக்கச் செய்வது. ஆம், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் யானைகளை (கும்கி) காட்டிலிருக்கும் பிற யானைகளோடு பழகச்செய்து மனிதர்கள் பிடிப்பதைப் போல, தனது கட்டுப்பாட்டில், தனது வலையில், தனது எல்லைக்குள் மற்றும் தனது சொற்படி கேட்கும் வாலிபர்களைக் கொண்டு, பிற வாலிபர்களை தனது வலைக்குள் இழுக்கும் சத்துருவின் தந்திரத்தை வாலிபராகிய நீங்கள் அறிந்துகொண்டு உங்களைத் தப்புவித்துக்கொள்வது அவசியம். தன்னோடு பேசுகிற மற்றும் பழகுகிறவர்கள் யாரென்ற அறிவில்லாத வாலிபர்களின் வாழ்க்கையிலிருந்து ஆண்டவரை அகற்றிவிட இத்தகைய வாலிபர்களை சத்துரு பயன்படுத்துகின்றான். வீழ்ந்தோரின் சோர்புள்ள வார்த்தைகள், தோல்விக்கான காரணங்களைச் சொல்லும் விதங்கள், அவர்களுக்குள் இருக்கும் பயங்கள், அவிசுவாசம் மற்றும் உலகத்திற்கடுத்த காரியங்கள் உறவில் தொடங்கி உங்கள் உயிரில் கலந்துவிடக்கூடும்; விதையாகி வளர்ந்து, விரோதியின் சத்திரத்திலும் உங்களைச் சேர்த்துவிடக்கூடும்; எச்சரிக்கை!! காயம்பட்டுக் கிடக்கும் நேரத்தில், கண்ணீர் விடுவது யாரென்று தெரியாததினால்,அவர்களுடன் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு தடையமேயில்லாமற்போய்விட்ட வாலிபர்கள் உண்டு. 

ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்ல முதலையின் முதுகில் பயணித்த குரங்கின் நிலையைப் போல வாலிபனே உனது வாழ்கை காணப்படுமாயின்
, இன்றே உன்னைத் தப்புவித்துக்கொள்! இன்றே உன்னைத் தப்புவித்துக்கொள்!!

       

 செத்த ஈக்களை மற்ற ஈக்களோடு கலந்து, மொத்த ஈக்களும் தன்னையே மொய்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுபவன் சத்துரு.  'செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமள தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்" (பிர. 10:1) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே! எனவே, கிறிஸ்துவுக்குத் தூரமானவர்கள் தரும் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளைக் குறித்துக் கவனமாயிருங்கள்; அவைகள் கிறிஸ்துவை விட்டு பிசாசின் எல்லைக்குள்ளாக உங்களை இழுத்துச்சென்றுவிடக்கூடும். அவர்களது உடுத்தும் உலகத்தர ஆடைகள், உலகோரைக் கவரும் சிகை அலங்காரங்கள், உலாத்தும் இடங்கள், அணியும் ஆபரணங்கள் உன்னையும் கவர்ந்து உனக்குக் கண்ணியாகக்கூடும். நேர்வழியாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, இடைவழியில் வரும் இவர்களால் இடறிவிழுந்துவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். இத்தகை மனிதர்களின் வலைகளில் நீங்கள் சிக்கியிருப்பீர்களென்றால், 'வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்" (நீதி. 6:5). அவர்களையும் ஆதாயப்படுத்த முயற்சிக்கிறேன் என்றால், உங்கள் ஆத்துமாவின் பெலத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்; இல்லையேல், அவர்களால் அடித்துச்செல்லபட்டுவிடுவீர்கள். உங்கள் காலடிகள் கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் உறுதியாயிருக்கட்டும்.  உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் அங்கங்களை அழிக்கும் சத்துருவின் அஸ்திரங்களை அடையாளம் கண்டு, உங்களை உயிரோடு காத்துக்கொள்வது உங்கள் கடமையே.

                தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான் (1யோவான் 5:18). இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். (1கொரி. 10:12)