July 2025


கிறிஸ்துவுக்குள் பிரியமான வாலிபத் தம்பி தங்கையரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். இன்றைய நாட்களில், 'மாடர்ன்' (Modern) என்ற பெயரில் உலகில் பலவிதமான காரியங்களும் பழக்கவழக்கங்களும் வலம்வந்துகொண்டிருக்கின்றன என்பது நாமறிந்ததே. சக மனிதர்களைக் காட்டிலும் சற்றாகிலும் தங்களை வித்தியாசப்படுத்திக் காண்பித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன், சிகை அலங்காரம் செய்வதிலும், ஆடை மற்றும் ஆபரணங்களை அணிவதிலும் அதிக கவனம் செலுத்தும் வாலிபர்கள் இன்றைய நாட்களில் அநேகர்.  அத்துடன், தாங்கள் விரும்புகின்ற அல்லது தங்கள் மனதிற்குப் பிடித்தமான பிரபலங்களைப் போல தங்களை மாற்றிக்கொள்வதிலும், அவர்களது சாயலுக்கு ஈடானதாகத் தங்கள் சரீரத்தை ஒப்பனையாக மாற்றிக்கொள்வதிலும், அவர்களைப் போன்ற வாழ்க்கை முறைகளை அமைத்துக்கொள்வதிலும் திருப்தியடைந்துவரும் வாலிபர்களும்கூட இந்நாட்களில் அநேகர் உண்டு. அலங்காரம் என்ற பெயரில் அலங்கோலமாகக் காட்சியளித்தாலும், அதனைப் பொருட்படுத்தாமலும், அதனைத் தொடரும் ஆபத்துகளையும் மற்றும் தொக்கி நிற்கும் பின்விளைவுகளையும் உணராமலுமேயே தொடர்கிறது அத்தகைய வாலிபரின் வாழ்க்கை. என்றபோதிலும், அவை அனைத்தும் நிலையானவைகள் அல்லவே; சீக்கிரத்தில் நீங்கிப்  போய்விடுபவைகள், இவ்வுலக வாழ்க்கையோடு விடுபட்டுவிடுபவைகள். 'இவ்வுலகத்தின் வேஷம் 
கடந்துபோகிறதே"
(1கொரி. 7:31) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே! எனவே, பிரியமான வாலிபரே! மரணம் வரையிலான இந்த உலக வாழ்க்கையை மனதில் கொண்டவர்களாக அல்ல, மரணமில்லாத நித்திய இராஜ்யத்தை மனதில் கொண்டவர்களாக இவ்வுலக வாழ்க்கையைக் கடந்துசெல்ல அழைக்கப்பட்டவர்கள் நாம். 

ஆதியிலே, தேவன் மனிதரைச் சிருஷ்டித்தபோது, தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் (ஆதி. 1:27) என்றே வாசிக்கின்றோம். ஆனால், அதனை விரும்பாத இவ்வுலகத்தின் அதிபதியாகிய சத்துருவோ, அந்தச் சாயலைக் கறைபடுத்தவும், தன்னுடைய சாயங்களை அதன் மீது பூசி அதனை தனக்குக் கீழ்ப்படுத்திவிடவும் முயற்சிக்கிறான்; இதற்கு ஒதுபோதும் நாம் அடிமையாகிவிடக்கூடாதே! 

பிரியமான வாலிபரே! தம்மைப் போல மாற்றவே தேவன் உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதே வேதத்தின் சத்தியம். 'தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்" (யோவான் 1:18) என்று வாசிக்கின்றோமே; தன்னுடைய வார்த்தைகளிலும், செயல்களிலும், நற்காரியங்களிலும் பிதாவையே வெளிப்படுத்தின அந்தக் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் போல மாறுவதற்கும் வாழுவதற்கும் நம்மை அர்ப்பணிப்போமென்றால், தேவனுடைய சாயலை நம்முடைய வாழ்க்கையில் நிச்சயம் நாம் வெளிப்படுத்த முடியும். இந்த உலகத்தினால் கறைபட்ட நம்மை கழுவுவதற்கும், பாவங்களை நீக்கி நம்மைப் பரிசுத்தமாக்குவதற்கும், இரட்சிப்பின் வஸ்திரத்தை நமக்கு உடுத்துவிக்கிறதற்கும்தானே தேவன் தன்னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பித்தந்தார். வழியாகிய அவரது வழிகளிலேயே வாழ இந்த வாலிபத்தின் நாட்களை அர்ப்பணிப்பது,  அவரது சாயலை உங்களது வாழ்க்கையில் பிரதிபலிக்கச்செய்துவிடுமே!  

அதுமாத்திரமல்ல, அவரை ஏற்றுக்கொண்டவர்களாகவும், அவரையே மாதிரியாகவும் கொண்ட வாழ்க்கை, 'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" என்ற நிலைக்கும், 'அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்" என்ற நிலைக்கும், 'மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி" (மத் 5:14-16) என்ற நிலைக்கும், உங்களுடைய வாலிபத்தின் தரத்தை உன்னதம் விரும்புகின்ற தரத்திற்கு உயர்த்திவிடும் என்பதும் உண்மையே! 'என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்" (யோவான் 15:4) என்றார் இயேசு கிறிஸ்து. அப்படியென்றால், நாம் அவரில் நிலைத்திருப்போமென்றால், அவரையே மாதிரியாகக் கொண்டிருப்போமென்றால்  நம்முடைய வாலிபத்தின் நாட்கள் அதிகக் கனிகளைக் கொடுக்கிறவைகளாக மாறிவிடுமே! அதனால் பரலோகம் களிகூருமே! அப்படிப்பட்ட வாழ்க்கைக்குள் உங்கள் ஒவ்வொருவரின் வாலிபத்தையும் தேவன் வழிநடத்துவாராக! அறுவடை நாளில் பதராய் அல்ல, கோதுமையாய் களஞ்சியத்தில் சேர்க்கப்படட்டும் உங்கள் வாழ்க்கை. 

                                                                                                                                           -எலிசபெத்

 

June 2025


            

 கிறிஸ்துவில் பிரியமான வாலிப சகோதர சகோதரிகளே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். தேர்வு முடிவுகள் உங்கள் கரங்களை வந்தடைந்திருக்கும் என்று நினைக்கிறேன். பெற்றோரின் விருப்பங்கள், உறவினரின் எதிர்பார்ப்புகள், மூத்தோரின் அறிவுரைகள் மற்றும் நண்பர்களின் ஆலோசனைகள் என்ற சூழ்நிலைகளின் மத்தியில், எதிர்காலத்தைக் குறித்தும் மற்றும் என்ன பயிலலாம் என்பதைக் குறித்தும் நீங்களும் ஆழ்ந்து  சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் இம்மடல் உங்கள் கரங்களை வந்தடையும் என நினைக்கிறேன். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்றுவிட்டோம் என்ற வெற்றிக் களிப்பில் ஒருசிலரும், விரும்பின அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்துடன் வேறு சிலரும் மற்றும் தோல்வியைச் சந்தித்ததினால், எதிர்காலம் என்னவாகுமோ? என்ற பயத்துடனும் சிலரும் இந்நாட்களில் ஒருவேளை காணப்படக்கூடும்.   

'குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்' (நீதி. 21:31) என்று வேத வசனத்தின்படி, எத்தனையாய் நீங்கள் ஆயத்தப்பட்டீர்களோ, அத்தனையான பதில் நிச்சயம் உங்களுக்கு அளந்துகொடுக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்றபோதிலும், எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான பலனை அடைந்திருப்பீர்களென்றால், தொடர்பயணத்தில் தொய்வு காட்டிவிடாமல் முன்னேறிச்செல்வதில் நீங்கள் உறுதியாயிருக்க உங்களை உற்சாகப்படுத்துகிறேன். 'வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு", 'முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்", 'அடிக்க அடிக்க அம்மியும் நகரும்", 'எறும்பு ஊரக் கல்லும் தேயும்" என்ற பழமொழிகள் அனைத்தும் நம்மிடம் காணப்படவேண்டிய தொடர் முயற்சிகளைத்தானே முன்வைக்கின்றன. 

'படிப்பதற்கே தகுதியற்றவன்" என்று ஆசிரியர்களால் தள்ளப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனின் 1000 முறைக்கும் மேலான தொடர் முயற்சிகளின் விளைவினால் கண்டுபிடிக்கப்பட்டதுதானே மின்விளக்கு, அதுபோலவே, K.F.C கர்னல் சாண்டர்ஸ், இவரது Chicken உணவு ஏராளமான உணவகங்களில் நிராகரிக்கப்பட்டது; என்றபோதிலும், தன்னம்பிக்கை இழக்காமல் அவர் முயற்சித்ததின் பலனால், உலகப்பிரசித்திப் பெற்ற உணவகமாக KFC உருவாகிவிட்டதே! மேலும், உலகப் புகழ்பெற்ற 'மிக்கி மவுஸ்" கார்டூன் படைப்பாளி மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் நிறுவனர் வால்டர் எலியாஸ் டிஸ்னி, 'படைப்பாற்றல் இல்லை" என்ற காரணத்திற்காக பத்திரிக்கை வேலையை இழந்தவர். என்றபோதிலும், தொடர் முயற்சினால், Walt Disney Company என்ற உலகப் புகழ்பெற்ற பொழுதுபோக்கு நிறுவனம் உருவாகக் காரணமானதுடன், 22 அகாடமி விருதுகளையும் மற்றும் 2 ஆஸ்கர் விருதுகளையும்; பெற்றார். எனவே வாலிபரே! தோல்விகள் உங்கள் தொடர்பயணத்தை நிறுத்திவிடக்கூடாது.

எலிசா இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி, 'உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்று சொல்லி, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து: ஜன்னலைத் திறவும், எய்யும்" என்று சொன்னபோது, அது கர்த்தருடைய ரட்சிப்பின் அம்பும், சீரியரினின்று விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமானது. ஆனால், 'அம்புகளைப் பிடியும்" என்று அவைகளை இஸ்ரவேலின் ராஜாவின் கைகளில் கொடுத்து, 'தரையிலே அடியும்" என்று எலிசா சொன்னபோது, தன்னுடைய கரங்களால் மாத்திரம் அம்புகளைப் பிடித்திருந்த இஸ்ரவேலின் இராஜா மூன்றுதரம் அடித்து நின்றுவிட்டான். அப்பொழுது தேவனுடைய மனுஷனாகிய எலிசா அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசைமாத்திரம் முறிய அடிப்பீர் என்றான் (2இராஜா. 13:16-19). பிரியமான வாலிபரே, யாராவது ஒருவர் நமக்கு உதவிசெய்யும்போது, ஊக்கப்படுத்தும்போது அல்லது உடனிருக்கும்போது ஒருவேளை 'நம்மால் முன்னேறிச் செல்வதும் ஓடுவதும் எளிதாயிருக்கக்கூடும்"; ஆனால், 'இஸ்ரவேலின் ராஜாவின் கைகளில் அம்புகள் கொடுக்கப்பட்டதுபோல" நம்முடைய கரங்களில் மாத்திரம் காரியங்கள் விடப்படுமென்றால், நம்முடைய தொடர் முயற்சி எத்தகையதாயிருக்கும்? இஸ்ரவேல் ராஜாவைப் போல மூன்றுதரம் மாத்திரமே அம்புகளை அடித்துவிட்டு, 'போதும்" என்று நிறுத்திக்கொள்ளுவோமா? அல்லது, தீர முறியடிக்கும்வரை அதாவது வெற்றிபெறும்வரை நாம் செயல்பட்டுக்கொண்டேயிருப்போமா? வாலிபரே! உங்களது தொடர் முயற்சிகள் நிச்சயம் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம். 

பேதுரு இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய சீடனாக இருந்தபோதும், மூன்று முறை அவரை மறுதலித்தவன் (லுக்கா 22:61-62). என்றபோதிலும், வருத்தத்துடன் மனங்கசந்து அழுதபோது (மத். 26:75), 'என் ஆடுகளை மேய்ப்பாயாக' என்ற பெரும்பணி பேதுருவினிடத்தில் ஒப்படைக்கப்பட்டதே (யோவான் 21:15-17). மறுதலித்த பேதுரு ஆண்டவருக்காக மரிப்பதற்கும் ஆயத்தமாக மாறிவிட்டானே! இத்தகையத் திருப்புமுனை வாலிபரே உங்கள் வாழ்க்கையிலும் உண்டாகக்கூடும்; எனவே, செய்துவிட்ட தவறுகளையும் மற்றும் நடந்து முடிந்த நிகழ்வுகளையும் மனம்வருந்தி விட்டுவிட்டு, முன்னேற்றப் பாதையில் அடியெடுத்துவையுங்கள். 

தாவீது அரசனாக அபிஷேகம்பண்ணப்பட்டவன்; என்றபோதிலும், கண்களின் இச்சையில் இழுப்புண்டு உரியாவின் மனைவியாயிருந்த பத்சேபாளிடத்தில் பாவத்தில் விழுந்ததோடு, அவளை தன்னுடையவளாக்க, அவளது கணவனான உரியாவைக் கொல்லவும் ஏற்பாடுகளைச் செய்தான் (2 சாமு. 11 அதி.). ஆயினும், நாத்தான் தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் அவனோடு பேசினபோது, பாவத்தை ஒத்துக்கொண்டு, திருந்தி வாழ தன்னை அர்ப்பணித்ததினால் (சங்கீதம் 51), அவருடைய சந்ததியில் இயேசு கிறிஸ்து பிறக்கும் பாக்கியத்தைப் பெற்றுவிட்டானே! 

யோனா அழைப்பிலிருந்து விலகி ஓடிய ஒரு தீர்க்கதரிசி; என்றபோதிலும், தேவன் யோனாவை அவனது வழியில் விட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடவில்லை; மாறாக, புயலைக்கொண்டு தடுத்தார். வழிமாறிச் சென்றபோது கப்பலில் சென்றவன், தேவனால் வழிமறிக்கப்பட்டு மீனின் மூலமாக நினிவே பட்டணத்திற்குத் திருப்பப்பட்டபோது, தன் தவற்றை உணர்ந்த யோனா, மீனின் வயிற்றில் ஜெபித்தான் (யோனா 2:1). நினிவே பட்டணத்தார் மனந்திரும்பிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு யோனாவுக்கு இல்லைதான்; என்றாலும், தேவன் அவன் மூலமாக நினிவே மக்களுக்குக் கொடுத்த எச்சரிப்பு அவர்களை மனந்திரும்பச் செய்துவிட்டதே! 

வாலிபரே! நீங்களும் தவறுகளில் தேங்கி நிற்காமல், தேவனண்டை நெருங்கிச் சேருவீர்களென்றால், தேவன் காட்டும் திசையில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளுவீர்களென்றால் உங்களையும் தேவன் இவர்களைப் போல பயன்படுத்தக்கூடும், நீங்களும் தேவன் கரத்தில் உபயோகமான பாத்திரங்களாக மாறுவது நிச்சயம்.  

                                                                                                                 

     P. J. கிருபாகரன்

MAY 2025

 கிறிஸ்துவில் பிரியமான தம்பி, தங்கச்சி உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மே மாதத்தில் எங்கேயாவது சுற்றுலா செல்லவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறீர்களா? ஜம்மு காஷ்மீர், சிம்லா போன்ற இடங்களில் பனி பெய்கின்ற காலங்களில் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சுற்றுலாவுக்கு வருகிறவர்கள் பனி பொம்மைகளைச் செய்தும் மற்றும் பனி உருண்டைகளை வைத்து ஒருவர் மேல் ஒருவர் வீசியும் விளையாடுவார்கள். நான் ஒரு காணொளியில் பனிப் பந்துகளைக் குறித்து கவனித்தேன். அதில் ஒருவர் ஒரு சிறிய பனிப் பந்தை உருவாக்கி அதை உருட்டிவிடுகிறார்; அது உருண்டுபோகும்போது, அதிக பனித்துகள்களைச் சேர்த்து சேர்த்து மிகப்பெரிய பனிப் பந்தாக மாறிக்கொண்டே போனதைப் பார்த்தேன்; மிகவும் அழகாக இருந்தது. உளவியலில் 'பனிப் பந்து விளைவு' என்பதைக் குறித்து மிகவும் அழகாக விளக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொருவரின் வாழ்விலும் எடுக்கும் சிறிய முடிவுகள் மற்றும் அறியாமலேயே கடைப்பிடித்துவரும் பழக்கவழக்கங்கள் அல்லது நிகழ்வுகள் எவ்வாறு படிப்படியாக குறிப்பிடத்தக்க விளைவுகளை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ உண்டாக்க வழி வகுக்கும் என்பதையே இது குறிக்கிறது. 

இளைஞர்களாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல கனவுகளை உடையவர்களாக இருக்கலாம்; வெகுவிரைவில் அது சாத்தியமாகவேண்டும் என்றும் நீங்கள் விரும்பலாம்; சாதிக்க முடியாமல் வீழ்ச்சியடைந்து விடுவேனோ என்ற பயமும் உங்களுக்குக் காணப்படலாம்; குறிப்பாக தேவன் உங்களுக்கென்று வைத்திருக்கும் திட்டத்தை அறிந்து அதை நிறைவேற்றவும், தேவனுடைய பரிபூரணமான ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவும் மிகவும் வாஞ்சையோடு  எதிர்பார்த்துக்கொண்டிருக்கலாம். என்றபோதிலும், உங்கள் வாழ்வின் உயர்வும் வீழ்ச்சியும் ஒரே நாளில் கிடைப்பதோ அல்லது நடந்து முடிவதோ இல்லை. துவக்கத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளே உங்களது எதிர்காலப் பாதையினை வடிவமைக்கக் கூடியவைகளாக உள்ளன. வேதாகமத்திலிருந்து இரண்டு உதாரணங்களைக் கூற விரும்புகிறேன். 

 1. ஆசீர்வாதத்தை அலட்சியம் பண்ணின ஏசா : ஆதியாகமம் 25 : 28 - 34

நன்றாக வேட்டையாடுகிறவன், நன்றாகச் சமைக்கிறவன், தகப்பன் நேசித்த மகன், சேஷ்ட புத்திர  பாகத்தின்  சுதந்திரவாளி.......  இப்பொழுதோ வேட்டையாடி மிகவும் களைத்துப்போய் இருக்கிறான். இந்த வேளையிலே களைப்பின் எண்ணங்கள்தான் மேலோங்கி இருக்கின்றன. கண்ணுக்கு எதிரே சிவப்பான கூழ்..... சரீரத்திலோ களைப்பு..... தன்னையே மறந்தவனாய் அந்தக் கூழிலே சாப்பிடக் கொஞ்சம் தா என்று கேட்கிறான் ஏசா... இப்பொழுது இருக்கிற நிலைமைக்கு எனக்கு  சிவப்பான கூழ் தான் வேண்டும்... இந்த  சேஷ்ட புத்திர பாகம் எனக்கு  என்னத்துக்கு.....? என்றுதான் ஆரம்பிக்கிறது ஏசாவின் அலட்சிய வார்த்தைகள்.... பின்னர் தொடர்ந்தது ஏசாவின் அலட்சியம்... தன் சகோதரனாகிய யாக்கோபுக்கு ஆணையிட்டு, சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப்போட்டான் (எபிரேயர் 12 : 16,17). ஏசாவின் வாழ்வில் காணப்பட்ட அலட்சியத்தினால், அவனுடைய தகப்பன் ஈசாக்கின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது. 

  பிரியமான வாலிபத் தம்பி தங்கச்சியே! நாம் காண்கின்ற இந்த உலகம் இப்படிப்பட்ட தற்காலிக எண்ணங்களால் சிதைந்து கிடக்கிறது. ஒரு கண நேர ஆசை, உணர்வின் அடிப்படையில் தூண்டப்பட்டு, தொடர்ந்து செய்யப்படும் செயல்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணீர் வடிக்கும் தவறான முடிவுக்கு நேராய் நம்மைக் கொண்டுபோய்விடுகிறது. கட்டுப்படுத்த முடியாமல்  திடீரென்று வரும் கோபம் அதிகமாகி, என்ன செய்வதென்று தெரியாமல், அன்பான உறவுகளையும் உடைத்துவிடுகிறது. தற்காலிக ஆசைகள் அல்லது உணர்வுகள் நம் வாழ்வின் நிரந்தர முடிவை எடுக்க நாம் அனுமதிக்க கூடாது. மன அழுத்தத்துக்கு மறுபடி மறுபடி இடம் கொடுத்து மனச்சோர்வு உண்டாகிறது. தவறான ஒரு நண்பனின் சகவாசம், பின்பு தவறான கூட்டத்தோடு பழக வைத்து கல்வியிலும் ஆவிக்குரிய வாழ்விலும் வீழ்ச்சிக்கு நேராய் நடத்துகிறது. பிழைகள் குற்றங்கள் ஆகி, பின்பு துணிகரமானப் பாவங்களைச் (சங்கீதம் 19 : 12,13) செய்யவைத்து, முடிவில் பெரும் பாதகமாக மாறிவிடுகிறது. அருமையான தம்பி, தங்கச்சி, தற்காலிக உணர்வுகள் உன்னை தவறான முடிவுக்கு கொண்டுபோய்விடும்; எனவே ஒருபோதும் அலட்சியமாக இராதே!

   2. ஆசீர்வாதத்தை நாடின யாக்கோபு : ஆதியாகமம் 25 : 31 - 34

ஏசா சேஷ்ட புத்திர பாகத்தை அலட்சியப்படுத்தினான். ஆனால், அவன் சகோதரனாகிய யாக்கோபு அதை ஆவலோடு விரும்பினான்.  அதைக் குறித்த மகத்துவத்தை அவன்  அறிந்திருந்தான். தேவன், நாம் எதை விரும்புகிறோம், எப்படி விரும்புகிறோம் என்பதைக் கவனித்துப் பார்க்கிறார். யாக்கோபு ஆசீர்வாதமாக இருக்க விரும்பினான்; அதைப் பெற்றுக் கொள்ளும்படியாக வந்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் கவனமாகப் பயன்படுத்திக்கொண்டான்;அதற்காகப் போராடினான் (ஓசியா 12 : 3,4), கெஞ்சினான், தன் பெற்றோருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தான், தேவ சத்தத்துக்கும் அப்படியே கீழ்ப்படிந்தான். தேவன் தன்னை ஆசீர்வதிக்கும் வரைக்கும் போராடி மேற்கொண்டான். 'இஸ்ரவேல்' என்னும் பெயர் பெற்றான்.

பிரியமான வாலிபத் தம்பி தங்கச்சியே! நம்முடைய வாழ்க்கையிலும் தொடர்ச்சியான ஜெப வாழ்க்கை, தொடர்ந்து பரிசுத்தமாய் வாழ எடுக்கும் முயற்சி, வேத வசனத்தைத் தினமும் தியானிக்கும் வாஞ்சை, தேவனுக்கு அடுத்த காரியங்களில் வாஞ்சையோடு ஈடுபடுதல், மற்றவர்களைக் குறித்த கரிசனையோடு நாம் செய்யும் சிறிய சிறிய சேவைகள்..... இவைகள் நம்முடைய வாழ்க்கையை முடிவில் கிறிஸ்துவைப் போல மாற்றுகிறது. தேவன் நமக்கென்று வைத்த திட்டத்தை நம் மூலமாக நிறைவேற்றுவதோடு, தேவனுடைய முழு ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்ளும் இடத்தில், உயர்ந்த ஸ்தானத்தில் நம்மைக் கொண்டுபோய் விடுகிறது.

டேவிட் லிவிங்ஸ்டனின் வாழ்க்கையை உங்களுக்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கூற விரும்புகிறேன். சாதாரண ஏழ்மை நிலையில் துவங்கினது அவரது வாழ்க்கை, முடிவிலோ ராஜ மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. குடும்பத்தின் ஏழ்மையின் காரணமாக ஒரு பருத்தி ஆலையில் அவர் வேலை செய்ய நேரிட்டது. கிடைக்கின்ற கொஞ்ச இடைவெளி நேரத்திலும் அவர் தான் நேசித்த வேத புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். இதை கவனித்த அவரது முதலாளி, இடைவெளி நேரத்தில் ஏன் இந்த வேத புத்தகத்தைப் படிக்கிறாய்? என்று கேட்டபோது, 'நான் சங்கீதம் 119-ஐ மனப்பாடமாகச் சொன்னதினால் எனக்கு இந்த வேத புத்தகம் பரிசாக கிடைத்திருக்கிறது" என்றார் டேவிட் லிவிங்ஸ்டன். இதைக் கேட்டவுடன் அவரது முதலாளி அவருக்கு வேத புத்தகத்தை படிக்க அனுமதி கொடுத்தார். எந்தச் சூழ்நிலையிலும் வேத வசனத்தைப் படிக்கும் பழக்கத்தை  அவர் விட்டுவிடவில்லை. பின்னர் படித்து டாக்டராகப் பட்டம் பெற்றார்.

தன் ஏழ்மையில் டாக்டர் பட்டம் பெற்றதை வைத்து, நன்றாகப் பணம் சம்பாதித்து அவர் செல்வச் செழிப்பாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், தான் தொடர்ந்து தியானித்து வந்த வேத வார்த்தைகள், அவரை தேவையில் உள்ள ஜனங்களுக்கு சேவை செய்ய ஊக்குவித்தது. அவருடைய நெருங்கிய நண்பர், டேவிட் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காவுக்கு மிஷனரியாகச் செல்வதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டு அவரை கடிந்துகொண்டார். ஆனால், டேவிட் லிவிங்ஸ்டனோ தேவன் விரும்புகிற சரியான முடிவை எடுக்கவே விரும்பினார். தேவனோடு தொடர்ந்து அவர் வைத்துக்கொண்ட உறவு மற்றும் வேத வார்த்தைகளை தொடர்ந்து வாசித்து தியானித்த பழக்கம் அவருடைய வாழ்க்கையை தேவ சித்தத்தின் மையத்தில் திடமாக நிற்கவைத்தது. 

  அருமையான தம்பி, தங்கச்சி உங்களை சிருஷ்டித்த தேவன், உங்கள் ஒவ்வொருவரையும் குறித்து மிகப் பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய பார்வையில் மிகவும் விலையேறப் பெற்றவர்கள். எனவே, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவைக் குறித்தும் மிகவும் கவனமாக இருங்கள். அவசரப்பட்டு உணர்வின் அடிப்படையில் மட்டும் முடிவுகளை எடுக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடைப்பிடிக்கும் சிறிய, சிறிய ஆவிக்குரிய நல்ல பழக்கங்கள் உங்களை மிகவும் பெரிய, உன்னத நிலைக்கு நிச்சயம் கொண்டு போய்விடும். இந்த வாலிப வயதில் சரியான முடிவுகளை எடுக்க, அதைக் கடைப்பிடிக்க, பழக்கமாக்கிக் கொள்ள தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக. தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக !


March 2025

கிறிஸ்துவில் பிரியமான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். நகர்ந்துகொண்டிருக்கும் வாலிபத்தில், நீங்கள் நின்றுகொண்டிருக்கும் நிகழ்காலத்தை நினைவுபடுத்தி சில உண்மைகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். வாலிபம் என்பது, முன்னேறுவதை விட்டுவிட்டு, வாழ்க்கையின் முடிவை நோக்கி முடிச்சு போட, கைவசமிருக்கும் கலைகளைக் கொண்டு சத்துரு கவர்ந்திழுக்கும் காலம். உலகை அறிந்துகொள்ளவேண்டுமென்ற உந்துதல் அதிகரிக்கும் உள்ளம்; சாதித்துவிடவேண்டும் என்ற ஆசை; நினைவிலே கனவு உலகில் நின்றுகொண்டு, நிகழ்காலத்தையோ காற்றிலே பறக்கவிட்டுவிடுமளவிற்குச் சுற்றிலும் நெருக்கும் சூழ்நிலைகள்; அறியாத பல கேள்விகளுக்கு விடை தேடி அலையும் மனம்; என எத்தனையையோ அடுக்கிக்கொண்டேபோனாலும், ஒவ்வொரு நாளும் வாழ்க்கையில் தாங்கள் சந்திப்பவைகளை எதிர்மறையாக எடுத்துக்கொண்டு, எழுந்திருக்க முடியாமல் அமிழ்ந்துகொண்டிருக்கும் வாலிபர்கள் அநேகர். படகு இருந்தும், துடுப்பு இருந்தும் பயணிக்கத் தெரியாத பயணிகளாக பரிதாபமான நிலையில், நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு வாலிபத்தின் நாட்களை வீணாக்கிக்கொண்டிருக்கும் வாலிபர்களும் இல்லாமலில்லை. வாழ்க்கையில் தாங்கள் செய்துவிட்ட தவறுகளுக்காக, யாரையோ குறை கூறி, வெற்றி என்ற இலக்கை விட்டு இன்னும் விலகியே வாழ்ந்துகொண்டிருக்கும் வாலிபர்களும் அநேகர் உண்டு. 

கடலைக் கடந்திருக்கவேண்டிய காலத்தில் கரையிலேயே நின்றுகொண்டு, பிறர் கைகொட்டிச் சிரித்து அவமதிக்கும் நிலைக்கும் ஆளாகிவிட்டனர்; பல வாலிபர்கள். தங்கள் வாழ்க்கையின் விண்ணகத் தரிசனத்தை அறியாமல், வீராப்பு வார்த்தைகளை மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் பல வாலிபர்களின் வாழ்க்கை, ஏனோ? இன்னும் வெறுமையாகவே விடப்பட்டிருக்கிறது வேதனையானதே! எதிர்பார்க்கும் பெற்றோரை எதிர்த்துப் பார்ப்பதும், அவர்களை ஏய்த்து வாழ்வதும், அவர்களது அரணை உடைத்து முரணாக முன்னேறத் துணியும் அளவிற்கும் முற்றிவிட்டது சில வாலிபர்களது வாழ்க்கை. இறுதியில், மாயையை வைத்து மாளிகை கட்டி, அதில் நிஜ வாழ்க்கையினை வாழ இயலாது போனதுதான் பலருக்கு மிச்சம். தீர்மானங்கள் எடுக்கவேண்டிய காலத்தினைத் தவறாகப் பயன்படுத்திவிட்டதால், திரும்பி வர வழியறியாது திக்குமுக்காடி, அனைத்தையும் தொலைத்து, பின், 'வீண்' என்று வாழ்க்கையைத் தானே முடித்துக்கொள்ள முற்படுவோரின் நிலையும் வருத்தமானதே! 

பிரியமான வாலிபரே! உங்கள் வாழ்க்கையின் 'நிகழ்காலம்' (pசநளநவெ டகைந) மிக மிக மிக முக்கியமானது. நிகழ்காலத்தில் நீங்கள் செய்யாது விட்டுவிட்டவைகள், கடந்தகாலத்திற்குள் உங்களை விட்டுக் கடந்துசெல்லும்போது, மீண்டும் அவைகளை உங்கள் வாழ்க்கையின் வழிக்குள் மீண்டும் கட்டி இழுப்பது கடினமாகிவிடுமே! நிகழ்காலம் ஒருபோதும் நிற்பதில்லை, பயணித்துக்கொண்டேதானிருக்கிறது, மெல்ல மெல்ல அது உங்களைவிட்டுக் நகர்ந்துசென்றுகொண்டேதானிருக்கிறது; இந்த உண்மையை நீங்கள் அறிந்துகொண்டீர்களென்றால், அதன் ஓட்டத்தில் உங்கள் வாழ்க்கையின் ஓடத்தை ஓட்டிச் செல்லுவதில் ஒருபோதும் தவறிழைக்கவோ அல்லது தாமதிக்கவோ மாட்டீர்கள். கடந்துவிட்டபின், காலத்தை நினைத்துக் கண்ணீர் வடிப்பதில் அர்த்தமில்லையே! பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம், வாலிபப் பருவம்..... என ஒவ்வொன்றாக உங்களை விட்டு விடைபெறும்போது, அதன் குடையின் கீழ் செய்துமுடித்திருக்கவேண்டியவைகளைச் செய்துமுடிக்காவிடில், வாழ்க்கை என்னும் காகிதத்திற்கு வயதாகிக்கொண்டேபோனாலும், உங்கள் கண்முன்னும் உடனிருப்போர் கண்முன்னும் அது வெறுமையானதாகவே காட்சியளிக்கும்; 'காலம் பொன் போன்றது'. 'காலத்தின் அருமையை அறிந்து வாழாவிடில் கண்ணீர் விடுவாயே.....' என்ற பாடல் வரிகள் எத்தனை அர்த்தச்செறிவுள்ளவை. எனவே, வாலிபரே! நிகழ்காலத்திற்கு (pசநளநவெ டகைந) நீங்கள் கொடுக்கும் அர்த்தங்களே, உங்கள் வருங்காலத்தை வடிவமைக்கும் என்பதை மறந்துவிடவேண்டாம்.  

மேலும், உங்களைக் குறித்து மாத்திரமல்ல, நிகழ்காலத்தில் உங்களோடு நின்றுகொண்டிருக்கும் மனிதர்களின் உறவுகளும் உயர்ந்ததே! பெற்றோரின் காலத்திற்குப் பின் அவர்களைப் பாராட்டிப் பேசுவதைக் காட்டிலும், அவர்கள் உங்களோடு வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தில். கீழ்ப்படிந்து, செய்யவேண்டிய கடமைகளைச் செய்து, கனம்பண்ணுவதினால், 'உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருக்கும்' (யாத். 20:12) என்ற ஆசீர்வாதத்தை ஆண்டவரிடத்திலிருந்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாமே! இது எத்தனை பெரிய பாக்கியம்!  சிலாக்கியம்! என்றபோதிலும், இதனை அவர்கள் உங்களோடு வசிக்கும் நிகழ்காலத்தில் மாத்திரமே நடைமுறைப்படுத்துவது சாத்தியம். அவ்வாறே, 'ஒப்புரவாகுதல் மற்றும் மன்னிப்பு...' போன்றவைகளையும் சாத்தியப்படுத்த, இருதிறத்தாரின் வாழ்க்கையும் இத்தரையில் அவசியமல்லவா! நிகழ்காலத்தில்தானே இவைகளும் சாத்தியம்!   

பிரியமான வாலிபரே! 'இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள்' (2கொரி. 6:2) என்ற 'நிகழ்காலத்திற்கடுத்த' வேத வார்த்தைக்குச் செவிகொடுத்து, இயேசு கிறிஸ்துவை தங்கள் வாழ்க்கையின் சொந்த இரட்சராக ஏற்றுக்கொண்டு, இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்ற வாலிபர்களாக நீங்கள் வாழுவீர்களென்றால், நிகழ்காலத்தைக் குறித்து நீங்கள் ஒருபோதும் கரிசனையற்றவர்களாக இருக்கமாட்டீர்கள். தேவனோடு மாத்திரமல்ல, பெற்றோரோடும் மற்றும் பிற மனிதரோடும் உள்ள உங்கள் உறவிலும் தேவ சாயல் வெளிப்படும். இத்தகைய வாழ்க்கைக்குள் தேவன் உங்களை வழிநடத்துவாராக! 

 

FEBRUARY 2025

      கிறிஸ்துவில் பிரியமான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2தீமோ. 1:7); என்றபோதிலும், எதிர்காலத்தை ஒரு எதிரியைப் போலவே பார்க்கும் கண்ணோட்டம் இன்றைய நாட்களில் அநேக வாலிபரின் வாழ்க்கையினை வலைக்குள்ளாக வளைத்துவைத்திருக்கிறது என்பதும் அவர்களை பயத்துடனேயே பயணிக்கச் செய்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. பள்ளி, கல்லூரி மற்றும் நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெறுவேனா? வேலை கிடைக்குமா? மற்றும் திருமணம் எப்போது? போன்ற கேள்விகள் ஒருபுறம் வலுவான பழுவாக அழுத்த, வேர்களைப் போல தாங்கி நிற்கும் பெற்றோர்களும் மற்றோர்களும் விடைபெறுவதற்குள் வாழ்க்கையில் வெற்றிகண்டுவிடவேண்டும் என்று விரைந்தோடும் வாலிபரும், அத்துடன், வேர்களற்ற நிலையிலும் தனித்தவர்களாயினும் ஓட்டத்தைக் கைவிடாத வாலிபரும் ஒருபுறமிருக்க, மற்றொரு புறமோ, தங்களைத் தாங்கி நிற்கும் மனிதரைக் குறித்தும் மற்றும் தனித்து விடப்பட்டிருக்கும் வாழ்வினைக் குறித்தும் கரிசனைகொள்ளாது காலத்தைக் கழிக்கும் வாலிபரும் வாழும் உலகம் இது! 

எட்டாக் கனியைப் போல எதிர்காலம் உங்கள் கண்களுக்குத் தென்பட்டாலும், 'குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்' (நீதி. 21:31) என்ற வசனத்தின்படி, உங்களுக்கு இருக்கும் பங்கினையும், ஆண்டவருக்கு இருக்கும் பங்கினையும் வாலிபராகிய நீங்கள் முதலாவது மறந்துவிடக்கூடாது. வாழ்க்கை வெற்றி பெறுவதும், வாழ்க்கை வெற்றிடமாவதும் ஆண்டவருக்கும் உங்களுக்கும் இடையிலான உறவினைப் பொறுத்ததே! வாலிபரே! உங்கள் கண்கள் காணும் கோலியத்தைப் போன்ற எதிர்காலத்திற்கு, உங்கள் அடைப்பப் பையிலே இருக்கும் கூழாங்கற்கள் போதுமானவை. ஆற்றில் அவைகளைப் பொறுக்கிச் சேர்த்து, ஆயத்தமானால் போதும் எதிர்காலம் எனும் போருக்கு; 'யுத்தம் கர்த்தருடையது' (1சாமு. 17:47). கூழாங்கல் கவணிலிருந்தால், கூட உங்களோடு கர்த்தரிருந்தால், உங்கள் எதிர்காலத்தின் வெற்றியை எதிர்படுவோரெல்லாம் கொண்டாடும் காலம் வரும் (1சாமு. 18:7).

  இரண்டாவதாக, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்;. ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள் (எபே. 5:15-17) என்பது பவுலின் ஆலோசனையல்லவோ! என்றபோதிலும், ஆவிக்குரிய கண்களோடு தேவன் ஆயத்தம்பண்ணித் தருபவைகளை, மாம்சீகக் கண்களோடு மறுத்துவிடுவதினால், வாலிபர் பலர் தேவ சித்தத்திலிருந்து விலகி, மாம்சத்தின் சிறைக்குள் தங்களைத் தள்ளிவிடுகின்னறனர். தேவ பார்வையில் அழகானவைகளை, தேவனால் ஆயத்தம்பண்ணப்பட்டவைகளை உலக அளவீடுகளால் அப்புறப்படுத்திவிடுகின்றனர். தேவ சித்தத்திற்கடுத்த இலக்கு நிச்சயிக்கப்படாததினாலேயே, அநேக வாலிபருடைய ஓட்டம் வீணாகிப்போயிற்று, பிரயாசமனைத்தும் காற்றோடு காணாமற்போயிற்று. எனவே, நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன்' (1கொரி. 9:26) என்ற பவுலின் அனுபவ ஆலோசனையின்படி அடிகளை எடுத்துவையுங்கள். 

இறுதியாக, வாலிபரே! 'நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்' (மத். 6:34) என்ற இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகளால் எதிர்காலத்தைச் சந்திக்கச் சத்துவமும், 'என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது' (சங். 31:15) என்ற தாவீதின் வார்த்தைகளால் உள்ளத்தில் சமாதானமும் உங்களில் உருவாக்கட்டும். 'தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷருடைய இருதயத்தில் தோன்றவுமில்லை' (1கொரி. 2:9) என்று வாசிக்கின்றோமே! அப்படியானால், பிதா இருக்க, பிள்ளைகள் நமக்கு பயம் எதற்கு? 'தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்' 'உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்' (சங். 18:28,29) என்ற தாவீதின் வரிகள் உங்களது வாழ்க்கையாகட்டும்!

'பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப் பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது' (ஏசா. 55:9) என்று கூறும் அவரது ஆளுகைக்குள் வாலிபத்தை அர்ப்பணித்தால், அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறதை (பிர. 3:11) அனுபவிக்கும் பாக்கியத்தோடு, ஆனந்தமும் பெருகும் உங்கள் வாழ்க்கையிலே! 'பராக்கிரமசாலிகளே கர்த்தர் உங்களோடே இருக்கிறார்' (நியா. 6:12). உங்களுக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்...(யோபு 23:14)

P.J. கிருபாகரன்