Feb 2026

கிறிஸ்துவுக்குள் அன்பான வாலிபரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். நிலையில்லாத இப்பூமியில் ஆண்டவருக்காக நிற்கும் சாட்சிகளாக அழைக்கப்பட்டவர்கள் நீங்கள்; என்றபோதிலும், வாலிபத்தின் ஓட்டத்தில் ஒருவேளை நான் விழுந்துவிடுவேனோ? என்ற பயத்துடனேயே ஓடிக்கொண்டிருக்கும் வாலிபர்கள் இந்நாட்களில் உண்டு. எங்கே விழுவேன்? எப்படி விழுவேன்? யாரால் விழுவேன்? எதனால் விழுவேன்? ஏன் விழுவேன்? எதற்காக விழுவேன்? போன்ற கேள்விகளை ஒருவேளை சுயமாக நீங்கள் கேட்டுப்பார்த்தால், உத்தரவு கொடுக்க உங்கள் உள்ளத்திற்கும் உதடுகளுக்கும் பெலனிருக்காது. நினையாத நேரத்தில் விழுந்துபோன வாலிபர் பலர்; நினைத்திருந்தும் கவனக்குறைவினால் விழுந்துபோன வாலிபர் பலர்; தடுக்குவதும் மற்றும் தள்ளுவதும் பெலமுள்ளதாயும் தங்களுக்குள்ளோ பெலமில்லாமலிருப்பதினாலும் வீழ்ந்துபோன வாலிபர் பலர்; உதவுவார் மற்றும் தூக்கிவிடுவார் எவருமின்றி ஒண்டியாய் வழிகளில் வீழ்ந்து கிடக்கும் வாலிபர் பலர்; அவ்வாறே, எதிரியின் பாதையில் தொடர்ந்து பயணித்து, தொலைதூரம் சென்றபின்பு வீடு திரும்ப திசையறியாமல் திணறும் வாலிபரும் உண்டு.

                பிரியமான வாலிபரே! பாவத்தினால், பாவம் செய்யும் வாலிபரது வாழ்க்கையில் தன் பெலமே ஓங்கி நிற்கவேண்டும் என்றும், தன் குரலே ஓங்கி ஒலிக்கவேண்டும் என்றும் நினைப்பவன் சத்துரு. எனவே, விழுகையைக் குறித்த பயத்திற்கு இடங்கொடுக்காமல், உங்கள் ஆத்துமாவின் பெலத்தை அதிகரித்து, வாலிபத்தை கிறிஸ்துவுடன் வலிமையுள்ளதாக்கிக்கொள்ளுங்கள்.  

                எப்படியாகிலும் கிறிஸ்துவை விட்டு உங்களைப் பிரித்து, தன்னோடு சேர்த்துவிடவேண்டுமென்று, வெவ்வேறு விதங்களில் உங்களைச் சூழ சத்துரு யுத்தம் செய்துகொண்டிருந்தாலும், கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் 'அன்புகூறுகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே" (ரோமர் 8:36,37) என்ற பவுலின் வாழ்க்கை உங்கள் வாழ்க்கையிலும் காணப்படுமாயின் 'நீங்கள் அன்புகூருகின்ற கிறிஸ்துவினாலேயே உங்கள் வாழ்க்கையிலும் ஜெயம் உண்டாகும்" என்பது நிச்சயம். 'உயிரைப் பறித்தாலும் உறுதியாயிருப்போம்" என்று தானியேலைப் போல நீங்கள் நின்றால், பிதாவுடனான உறவினின்று உங்களைப் பிரிக்க பெலனற்றவனாகிவிடுவான் சத்துரு. மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் (ரோமர் 8:38,39) என்ற 'அழுத்தமான அர்ப்பணிப்பு" உங்களுக்கு இருந்தால், அச்சம் அவசியமில்லை.

       பிரியமான வாலிபரே, 'தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும், அன்பும், தெளிந்தபுத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்" (2தீமோ. 1:7). அப்படியிருக்க, பயத்தை சத்துரு உங்கள் வாழ்க்கையில் புகுத்தும் சந்துபொந்துகளை அடையாளம் கண்டு அவைகளை அடைத்துவிடுங்கள்; பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள் (எபே. 4:27). 

     ஆனாலும், நீங்கள் அறிந்துகொள்ளவேண்டிய மற்றும் ஒரு காரியம் உண்டு; அது, தன் பக்கத்திலிருக்கும் வீழ்ந்தவர்களை, உங்களை வீழ்த்துவதற்காகச் சத்துரு பதிவிருக்கச் செய்வது. ஆம், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் யானைகளை (கும்கி) காட்டிலிருக்கும் பிற யானைகளோடு பழகச்செய்து மனிதர்கள் பிடிப்பதைப் போல, தனது கட்டுப்பாட்டில், தனது வலையில், தனது எல்லைக்குள் மற்றும் தனது சொற்படி கேட்கும் வாலிபர்களைக் கொண்டு, பிற வாலிபர்களை தனது வலைக்குள் இழுக்கும் சத்துருவின் தந்திரத்தை வாலிபராகிய நீங்கள் அறிந்துகொண்டு உங்களைத் தப்புவித்துக்கொள்வது அவசியம். தன்னோடு பேசுகிற மற்றும் பழகுகிறவர்கள் யாரென்ற அறிவில்லாத வாலிபர்களின் வாழ்க்கையிலிருந்து ஆண்டவரை அகற்றிவிட இத்தகைய வாலிபர்களை சத்துரு பயன்படுத்துகின்றான். வீழ்ந்தோரின் சோர்புள்ள வார்த்தைகள், தோல்விக்கான காரணங்களைச் சொல்லும் விதங்கள், அவர்களுக்குள் இருக்கும் பயங்கள், அவிசுவாசம் மற்றும் உலகத்திற்கடுத்த காரியங்கள் உறவில் தொடங்கி உங்கள் உயிரில் கலந்துவிடக்கூடும்; விதையாகி வளர்ந்து, விரோதியின் சத்திரத்திலும் உங்களைச் சேர்த்துவிடக்கூடும்; எச்சரிக்கை!! காயம்பட்டுக் கிடக்கும் நேரத்தில், கண்ணீர் விடுவது யாரென்று தெரியாததினால்,அவர்களுடன் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு தடையமேயில்லாமற்போய்விட்ட வாலிபர்கள் உண்டு. 

ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்குச் செல்ல முதலையின் முதுகில் பயணித்த குரங்கின் நிலையைப் போல வாலிபனே உனது வாழ்கை காணப்படுமாயின்
, இன்றே உன்னைத் தப்புவித்துக்கொள்! இன்றே உன்னைத் தப்புவித்துக்கொள்!!

       

 செத்த ஈக்களை மற்ற ஈக்களோடு கலந்து, மொத்த ஈக்களும் தன்னையே மொய்த்துக்கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுபவன் சத்துரு.  'செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமள தைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்" (பிர. 10:1) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே! எனவே, கிறிஸ்துவுக்குத் தூரமானவர்கள் தரும் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளைக் குறித்துக் கவனமாயிருங்கள்; அவைகள் கிறிஸ்துவை விட்டு பிசாசின் எல்லைக்குள்ளாக உங்களை இழுத்துச்சென்றுவிடக்கூடும். அவர்களது உடுத்தும் உலகத்தர ஆடைகள், உலகோரைக் கவரும் சிகை அலங்காரங்கள், உலாத்தும் இடங்கள், அணியும் ஆபரணங்கள் உன்னையும் கவர்ந்து உனக்குக் கண்ணியாகக்கூடும். நேர்வழியாக நடந்து சென்றுகொண்டிருக்கும்போது, இடைவழியில் வரும் இவர்களால் இடறிவிழுந்துவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். இத்தகை மனிதர்களின் வலைகளில் நீங்கள் சிக்கியிருப்பீர்களென்றால், 'வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்" (நீதி. 6:5). அவர்களையும் ஆதாயப்படுத்த முயற்சிக்கிறேன் என்றால், உங்கள் ஆத்துமாவின் பெலத்தை அதிகரித்துக்கொள்ளுங்கள்; இல்லையேல், அவர்களால் அடித்துச்செல்லபட்டுவிடுவீர்கள். உங்கள் காலடிகள் கிறிஸ்துவாகிய கன்மலையின் மேல் உறுதியாயிருக்கட்டும்.  உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் அங்கங்களை அழிக்கும் சத்துருவின் அஸ்திரங்களை அடையாளம் கண்டு, உங்களை உயிரோடு காத்துக்கொள்வது உங்கள் கடமையே.

                தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான் (1யோவான் 5:18). இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். (1கொரி. 10:12)


Jan 2025

 



இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரவும், அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷயையும்  கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான். (தானி 1:3,4)

தானியேலும்  அவன் உடனிருந்த வாலிபர்களும் சாதாரணமானவர்கள் அல்ல, அழகானவர்கள், அறிவிலே சிறந்தவர்கள், எதனையும் எளிதாகக் கற்றுக்கொள்ளும் திறமை படைத்தவர்கள். அவர்களுக்கு பாபிலோன் தேசத்திலே, நேபுகாத்நேச்சாரின் அரண்மனையிலே உயர்தர ஆகாரமும், கல்வியும் கொடுக்கப்பட்டது. ராஜாவின் கட்டளையின்படி விசேஷித்தவர்களாக அரண்மனையிலே அந்த வாலிபர்கள் நடத்தப்பட்டார்கள், போஷிக்கபட்டார்கள். தானியேலோ அந்த வாலிபர்களுக்குள் வித்தியாசமுள்ளவனாயிருந்தான். மூன்று வருடங்கள் கொடுக்கப்படும் பயிற்சியைப் பெற்று அரண்மனையிலே பதவியை அடையும் எண்ணம் தானியேலை ஈர்க்கவில்லை. தகப்பனும், தாயும், ஊராரும், உறவினரும் மற்றும் நண்பர்களும் பார்க்கக்கூடாத தேசத்தில் இருந்தாலும், கர்த்தருக்காக வித்தியாசமுள்ளவனாக தானியேல் வாழ விரும்பினான். 

தனிமையில் இருக்கும்போது பல வாலிபர்கள் விழுந்துவிடுகின்றனர். தனித்திருக்கும் நேரத்தில் ரகசிய பாவங்களுக்கு உடன்பட்டுவிடுகின்றனர். உள்ளத்திலே பல நாட்களாக மறைந்து கிடக்கின்ற ரகசிய பாவங்கள் அனைத்தும் அரங்கேறுவது தனிமையிலேயே. அறிந்தவர்களும், தெரிந்தவர்களும் அறியக்கூடாத தூரமான இடத்தில் வாழும்போது, வாழ்க்கையில் சிறந்ததோர் இடத்தைப் பெறும்போது, பாவத்திற்குள் தள்ளி சரீரத்தையும் மனதையும் கெடுத்து, அத்துடன் ஆவியையும் அசுசிப்படுத்துவதற்கு ரகசிய பாவத்திற்கு வலிமை உண்டு. நல்ல குடும்பத்திலும், சபையிலும் இருந்தாலும், தேவ பயமற்ற வாலிபர்கள் ரகசிய பாவத்திற்குள் கிடக்கின்றனர். 

வாலிபனான உனக்கு தானியேலின் வாழ்க்கை ஓர் மாதிரி. தானியேல் விரும்பினதைப் புசிக்கலாம், ராஜாவின் உணவையும், ராஜா குடிக்கும் ரசத்தையும் பருகலாம்; அனைத்தும் அவன் கண்களுக்கு முன்னே, கைக்கு எட்டும் தூரத்திலேயே இருந்தது. தானியேல் என்ன செய்தாலும் அவனைக் குற்றப்படுத்த அங்கு யாரும் இல்லை. தானியேல் தனது இஷ்டப்படி வாழ்ந்தால் உடனிருந்த நண்பர்கள் அவனைக் குற்றப்படுத்தும் நிலை உருவாகலாம், ஆனால் மன்னனின் அரண்மனையிலோ தானியேலையும் அவனது போஜனத்தையும் குறித்து குற்றப்படுத்த யாருமில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தேவனுக்குப் பிரியமானவனாகவே வாழ்ந்தான் தானியேல். 

திருடனாய், பொய்யனாய், ஆகாதவனாய், வீம்பு பேசுகிறவனாக தேவனுக்கு விரோதமான காரியங்களுக்குத் தங்களை விற்றுப்போட்டிருந்த பல வாலிபர்களை தேவன் சந்தித்திருக்கின்றார். கூட்டங்களிலோ, முகாம்களிலோ கலந்துகொள்ளும்போது பல வாலிபர்கள் தேவனுக்குத் தங்களை ஒப்புக்கொடுக்கின்றனர். காலையில் எழுந்து ஜெபிப்பதையும்,  வேதத்தை நிதம் ஆராய்ந்து அறிவதையும் வழக்கமாக்கிக் கொண்ட  வாழ்க்கை வாழும் ஒரு வாலிபன், சோதனையான இடத்தில் வைக்கப்பட்டால் அல்லது அவனது செய்கைகளையோ, வார்த்தைகளையோ, மனதின் காரியங்களையோ எவரும் குற்றப்படுத்தாத இடத்தில் வைக்கப்பட்டால் அவனது நிலை என்ன? 

தானியேலைச் சுற்றியிருந்த வாலிபர்கள் அனைவரும் இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவர்களே. அவர்கள் தானியேலுடன் வளர்ந்தவர்களும், வேத வாக்கியங்களை நன்கு அறிந்தவர்களுமாயிருந்தார்கள். யூத குலத்தைச் சேர்ந்த தாய் தனது பிள்ளைக்கு வாரத்திற்கு சுமார் 14 மணி நேரம் இறையியல் சொல்லிக்கொடுப்பது வழக்கம். யூத வாலிபர்களுக்கு வாரத்தில் சுமார் 18 மணி நேரம் ஜெப ஆலயத் தலைவன் ஜெப ஆலயத்திலே இறையியல் சொல்லிக்கொடுப்பது வழக்கம். இப்படி வளர்க்கப்பட்ட யூத வாலிபர்கள் விக்கிரங்களைப் பற்றியும், மதுபானத்தைக் குறித்தும், மற்றவர்களால் உண்டாகும் தீட்டுகளைக் குறித்தும் நன்கு அறிந்தவர்கள், சிறு வயதிலிருந்தே அவைகளைக் குறித்து போதிக்கப்பட்டவர்கள். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட தன் உடன் இருக்கும் யூத வாலிபர்கள், பாபிலோன் தேசத்தில் நேபுகாத்நேச்சாரின் அரண்மனையில் வெறுக்கப்படவேண்டிய அனைத்தையும் சாப்பிடுகிறதை தானியேல் கண்டான். ராஜாவினால் கொடுக்கப்படும் பயிற்சி என்ற எண்ணத்தில் அனைத்தையும் அந்த வாலிபர்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.  ஒரு நாளில் தேசத்தில் அதிகாரியாக உயர்த்தபடவிருக்கிறோம் என அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்கள். அருவருப்புகளைச் செய்தவர்கள் இஸ்ரவேல் தேசத்திலே அழிக்கப்பட்டுவிட்டார்கள், தேவனுக்குப் பயந்து வாழ்ந்தபடியினாலேயே தேவன் நம்மை பாபிலோன் தேசத்தில் உயர்த்தி, எல்லாவற்றையும் அனுபவிக்கும் நிலையில் வைத்திருக்கிறார் என அந்த வாலிபர்கள் நினைத்தனர். தேவனுக்குப் பயந்து வாழ்ந்த நம்மேல் கர்த்தர் இரக்கம் பாராட்டினதினாலேயே, கைதியாகப் பிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டிருந்தாலும், ராஜ மரியாதையுடன் நடத்தப்படுகிறோம் என எண்ணினார்கள். 

ஆண்டவருக்குப் பிரயோஜனமாய் நடந்ததினால் என்ன பிரயோஜனம்? என்ற கேள்வி தானியேலின் முன் வந்தாலும், தானும் மற்ற வாலிபர்களைப் போல அடிக்கப்பட்டு, காயப்படுத்தப்பட்டு பாபிலோனிய சேவகர்களால் ஒன்றரை மாதம் நடத்திக்கொண்டுவரப்பட்டவன் என்ற நினைவு அவனுக்குள் இருந்தாலும்; பாபிலோன் தேசத்திலும் தன் உடனிருக்கும் வாலிபர்களைக் காட்டிலும் வித்தியாசமுள்ளவனாக வாழ தானியேல் தன்னை ஒப்புக்கொடுத்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தேவனுக்குப் பிரியமாய் வித்தியாசமாக வாழும் வாலிபர்களை தானியேல் தேடியபோது, உடனிருந்த வாலிபர்களுக்குள் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று வாலிபரை அவன் கண்டுகொண்டான். 'இனம் இனத்தோடு, வெள்ளாடு தன்னோடு" என்ற தமிழ் பழமொழியின்படி ஒரே எண்ணமுடைய அந்த வாலிபர்கள் ஒன்றாக இணைந்துகொண்டனர். 

ஆவிக்குரிய வாலிபன், ஆவிக்குரிய வாலிபனை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும். குடிக்கிற வாலிபன், குடிக்கிறவனை எளிதில் அடையாளம் கண்டுகொண்டு அவனுடன் இணைந்துகொள்ளுவான். பாவம் பாவத்தைப் பிடித்து இழுப்பதுபோல, பரிசுத்தம் பரிசுத்தத்தைப் பிடித்து இழுத்துக்கொள்ளும். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று வாலிபர்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டான் தானியேல். அங்கிருந்த வாலிபர்களில் பிற வாலிபர்கள் பாபிலோன் ராஜாவின் போஜனத்தைச் சாப்பிட தங்களை விட்டுக்கொடுத்தனர். 

தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான்.(தானி 1:8)

அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ர் என்பவனைத் தானியேல் நோக்கி: பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்கப் பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான். (தானி 1:11-13)

தானியேல் தனி வாலிபனாகவே முதலில் தீர்மானம் செய்தான்; ஆனால், இப்பொழுதோ நான்கு வாலிபர்கள் உள்ள குழு உருவாகிவிட்டது. வாலிபனே நீ உன்னுடைய தீர்மானத்தில் உறுதியாயிருந்தால், உன்னோடு கூட இருப்பவர்களையும் இணைத்துக்கொள்வது எளிதானது. 

எல்லா சூழ்நிலைகளிலும், என்ன நடந்தாலும், வேறு இடத்திற்குத் தள்ளப்பட்டாலும், கவனிப்பதற்கு ஒருவரும் இல்லையென்றாலும், எல்லாவற்றிலும் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தாலும், விடுதலையோடிருந்தாலும் தேவனுக்கு முன்பாக எடுத்த தீர்மானத்தைக் காத்துக்கொள்ளவேண்டும், கடைசிவரை அதில் நிலைத்து நிற்கவேண்டும். தானியேல் என்ற ஒரு வாலிபன் என்னைத் தீட்டுப்படுத்த விடமாட்டேன் என்று தனது தீர்மானத்தில் நிலைத்து நின்றதால், மேலும் மூன்று பேர் தீட்டுப்படாதபடிக்குத் தங்களைக் காத்துக்கொள்ள தீர்மானித்தனர். 

உடலிலிருந்து ஒரு முடி விழுந்துவிட்டாலும், உயிர் நீத்துவிடும் என கவரிமானைக் குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன; அத்தனை உணர்வுடையது, உறுதியானது அது. காட்டுப் புறாவைக் குறித்து வேதத்தில் சொல்லப்பட்ட எல்லா பகுதிகளிலும், ஒரு ஜோடி காட்டுப் புறா என்றே சொல்லப்பட்டுள்ளது. யோசேப்பும் மரியாளும் இயேசுவை பிரதிஷ்டை செய்ய ஆலயத்திற்குக் கொண்டுவந்தபோது, எட்டாம் நாளில் பலியிட்டு விருத்தசேதனம் செய்து சுத்திகரிப்பைச் செய்தபோது, ஒரு ஜோடி காட்டுப் புறாக்களைச் செலுத்தவேண்டும் என்ற கற்பனைக்குக் கீழ்ப்படிந்தார்கள். ஜோடியாக வாழும் காட்டுப் புறாக்களைப் பிரிக்க முடியாது, அப்படி பிரிக்கப்பட்டால் மற்றொன்று தற்கொலை செய்துகொள்ளும். பத்திரிக்கையிலே பல வருடங்களுக்கு முன் ஒரு செய்தி வந்தது. வேட்டைக்காரன் ஒருவன் வேட்டைக்குச் சென்றான், இரண்டு காட்டுப்புறாக்கள் ஜோடியாக உட்கார்ந்திருந்தன, ஒன்றை அவன் அடித்தான் அது செத்து விழுந்தது. வேடன் அதை எடுத்துக்கொண்டு செல்லும்போது, உடனிருந்த மற்றொரு புறாவும் வழியில் செத்துக் கிடந்தது. வேடன் அதைப் பார்த்தபோது, அதன் தொண்டையிலே கூழாங் கல் இருந்தது. உடனிருந்த புறாவை வேடன் வீழ்த்திவிட்டதினால், அதன் ஜோடியான இந்தப் புறா கூழாங்கல்லை விழுங்கி தற்கொலை செய்துகொண்டதை வேடன் அறிந்துகொண்டான். 

ஆவியையும், ஆத்துமாவையும், சரீரத்தையும் ஆண்டவருக்குக் கொடுத்த மனிதனும் இப்படியே இருப்பான். என் சரீரத்தை, ஆவியை, ஆத்துமாவை மாசுப்படுத்த விடமாட்டேன் என்று உறுதியான தீர்மானத்தை எடுக்கிற வாலிபர்கள் ஆண்டவருக்குத் தேவை. ஆவியையும், ஆத்துமாவையும், சரீரத்தையும் கறைபடவிடாமல் காத்துக்கொள்கிற வாலிபர்கள் இன்றும் உண்டு. எந்த சூழ்நிலையில் நீ வைக்கப்பட்டாலும், எந்த சூழ்நிலை எதிராக வந்தாலும், எவரும் உடன் நிற்காமல் போனாலும், என் ஆண்டவருக்காக ஆவி, ஆத்துமா, சரீரத்தை மாசு படாமல் காத்துக்கொள்ளுவேன் என்று தீர்மானம் எடுத்தால், நீ வித்தியாசமுள்ளவனாகவும், மற்றவர்களையும் ஈர்க்கிறவனாகவும்  மாறிவிடுவாய். 

வாலிபனே!... உன்னைத் தீட்டுப்படுத்துகின்ற காரியங்கள் எந்த விதத்திலும், எந்த ரூபத்திலும் வந்தாலும் அதற்கு இடம் கொடுத்துவிடாதே. ஆண்டவரால் அங்கீகரிக்கப்பட்ட பாத்திரமாக, முத்திரிக்கப்பட்ட பாத்திரமாக, கிராமங்களில், நகரங்களில், குடும்பத்தில், கல்லூரிகளில், வேலை ஸ்தலங்களில் வித்தியாசமான வாழ்க்கை வாழவே கர்த்தர் உன்னை அழைத்திருக்கிறார்.  

 (சகோ. அகஸ்டின் ஜெபக்குமார் எழுதிய வித்தியாசமுள்ளவனாயிரு புத்தகத்திலிருந்து)

DEC 2025


 வால வயதின் குமாரராம் இன்றைய வாலிபச் செல்வங்களுக்கு, பலவான் இயேசுவின் கையில் கூர்மையான அம்புகளாய் மாற வாழ்த்துக்கள்! 

இரண்டாவது தானா? நீங்க First  இல்லீங்களா? பரவாயில்லீங்க.. 

Name list - ல் இவரும் யாக்கோபு, எப்பிராயீம் போல இரண்டாவது இடம்தான். எப்பிராயீம், அண்ணன் மனாசே பிறந்து மாதங்களோ அல்லது வருடங்களோ கழித்து பிறந்து இருக்கலாம். ஆனால், யாக்கோபு ஒரே பிரசவத்தில், ஒரே நாளில், ஏன் ஒரே நேரத்தில் சில நிமிஷங்களுக்காகப் போராடி இரண்டாவது இடம் பெறுகிறார். ஆனால், கர்த்தரின் கண்களோ, அதாவது பரலோகத்தின் பார்வையோ, இவர்களையே முதலாவதாகப் பார்த்தது. 

தம்பி, தங்கச்சி! நீங்கள் ஸ்கூல் மற்றும் காலேஜ் படிப்பில் அல்லது விளையாட்டில் 2nd ரேங்க் வாங்கினபோது, உங்கள் அம்மா அப்பா கண்டிப்பாகக் கேட்டிருப்பாங்க, 1st Rank எடுக்கவில்லை? என்று; 'அப்படித்தானே?

ஒலிம்பிக் வெற்றி மேடை (Victory Stand) போன்ற ஒரு வெற்றி மேடையில் மூன்று பேர் நிற்கிறார்கள். ஆனால், முதலாவது மற்றும் மூன்றாம் இடங்கள் திடீரென்று காலியாகி, இரண்டாம் இடம் பெறுபவர் மாத்திரம் நிற்கிறார் என்றால், எப்படி இருக்கும் இந்த சீன்...? பின்னால் நான்காவது இடம் பெறுபவரும் மிஸ்ஸிங் லிஸ்டில் சேர்ந்து விட்டாரென்றால் என்னவாகும்? என்ன புதிராக இருக்கிறதா.... ?

ஆம், மூத்தவனாகப் பிறந்த தாவீதின் குமாரன் அம்னோன் அம்போ தான், சொந்த உறவுகளைக் கூட பாசமாகப் பார்க்காமல், மோகம் கொண்டு பார்த்து, கோமாளியாகிக் கோட்டை விடுகிறான். மூன்றாம் இடத்தில் அப்சலோம் absent ஆகிறான்... ரொம்ப handsome எல்லாரையும் ஈசியாக மயக்கி ஏமாற்றி, மனங்களைக் கவர்ந்து, கட்டிப் பிடித்துத் தழுவி முத்தம் கொடுத்து விட்டு (attractive); ஆனால், தந்தையையே கொலை செய்து, தானே அரசனாகி ஆளவேண்டும் என்று வெறியாட்டம் ஆடி, அந்தரத்தில் தலை போய்விட்டது. அதோனியாவின் கதியோ அந்தோ! அதோ கதிதான்! கர்த்தரே முன்னறிந்து தெரிந்துகொண்ட தம்பி சாலொமோனை ஏற்றுக்கொள்ள முடியாத அதோனியா, அட்ரஸ் இல்லாமல் போய்விட்டான். இப்போது, இரண்டாம் இடத்தில் தானியேலோ நிலைத்து, நிமிர்ந்து நிற்கிறார்!! யாருங்க இவங்க எல்லாரும்...? இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டாரே, அந்த தாவீது ராஜாவின் முதல் பிறந்த ராஜகுமாரர்கள் தான் இவர்கள். (1 நாளா. 3:1-3)     

     வேதத்தில் தானியேல் என்ற பெயரில் வரும் முதல் நபர் இவரே. இவருக்கு கீலேயாப் என்று இன்னொரு பெயரும் உண்டு (2 சாமுவேல் 3:3). இன்று உலகம் முழுவதும் எண்ணடங்கா நபர்கள் தானியேல் என்று பெயர் வைத்ததில், இன்னும் வைப்பதில் பெருமை அடைந்துவருகின்றனர். வேதத்தில் இரண்டு மூன்று தானியேல்கள் இருக்கின்றனர். ஆனால், நட்சத்திரத் தானியேலாக இருப்பவர் பின்னால் வரும் தானியேல் தீர்க்கதரிசி. இருவருமே ராஜ குடும்பத்தில் பிறந்த இளவரசர்கள். தானியேல் தீர்க்கதரிசி அதே ராஜ குடும்பத்தில் தாவீதின் யூதப்பரம்பரையில் பின்னால் வந்தவர். இவர் பெயர் கூட முன்னால் உள்ள தானியேல் என்ற இந்த நபரை பார்த்து வைத்து இருக்கலாம். (வேதத்தில் நம் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு ... தாவீது... போன்றவர்களுடைய பெயர்கள், மீண்டும் இன்னொரு நபருக்கு வைக்கப்படவில்லை. ஏன் என்று தெரியவில்லை. ஆனால், இவர் பெயரோ மீண்டும் வருவது ஆச்சரியத்திற்குரியது!)

12 கோத்திரங்களில் ஒருவர் 'தாண்". அதன் அர்த்தம் 'நியாயாதிபதி". ஆம் தாண் கோத்திரத்தில் தான் சிம்சோன் என்று நாம் நன்கு அறிந்த ஸ்டார் நியாயாதிபதி வருகிறார். (நியாயாதிபதிகளின் நாட்களில் கர்த்தரை விட்டுத் தங்களுக்கு சுரூபங்களை உண்டாக்கிக் கொண்ட தாண் கோத்திரத்தார், வெளிப்படுத்தலில் வரும் முத்திரை போடப்பட்டோர் பட்டியலில் இல்லாமல் போய்விட்டார்கள்). ஆனால் 'தானியேல்" என்ற பெயரின் அர்த்தம் 'கர்த்தரே என் நியாயாதிபதி"! இந்தப் பெயரிலேயே எத்தனை பெரிய வெளிப்பாடு! கர்த்தரே நீதி செய்பவர்!! கர்த்தரே நியாயாதிபதி!!! என்று வேதத்தில் மீண்டும் மீண்டும் நாம் பார்க்கிறோம்.

இவர் பின்னணியில் இருந்தது கண்டிப்பாக அவரது தாயார்: வேதத்திலே ஒரு சிறந்த பெண்மணியாக, ரூபவதியாக 'மகா புத்திசாலி" என்று வர்ணிக்கப்பட்ட அபிகாயில் தான். 1 சாமுவேல் 25:28,31 - இங்கே அபிகாயில் பேசின வார்த்தைகளில் இருந்து நாம் இதை நன்றாக அறிந்து கொள்ள முடியும். அவர் தாவீதுக்குச் சொல்லிய புத்திமதி என்ன? கர்த்தரின் யுத்தங்களை நடத்தும் தாவீது- விருதாவாக இரத்தம் சிந்தக்கூடாது, பழிவாங்கவும் கூடாது. (No Revenge - Avenge). அப்போதுதான் அவருக்கு துக்கமும், மனஇடறலும்  (No grief - nor offense) இராது. தாவீதின் மற்ற பிள்ளைகள் விழுந்துபோக இவைகள் தானே காரணம்! தாவீது கர்த்தரின் யுத்தங்களைத் தான் செய்தார். ஆனாலும், கர்த்தருக்கு ஆலயம் கட்ட ஆசைப்பட்ட தாவீதுக்கு கர்த்தர் சொன்னது என்ன? (1 நாளா. 28:3) நீ யுத்த மனுஷனாய் இருந்து ரத்தத்தைச் சிந்தினாய், எனவே நீ கட்ட வேண்டாம். தீர்க்கதரிசி நாத்தான்  சொல்லும் முன்னே (2 சாமுவேல் 7:11-13 ), அபிகாயில், 'தாவீதுக்கு கர்த்தர் நிலையான வீட்டை நிச்சயமாய் கட்டுவார்" (1 சாமுவேல் 25:28) என்று எத்தனை திட்டவட்டமாகக் கூறிவிட்டாள் பாருங்கள். தொலைதூரப் பார்வையும், தீர்க்கதரிசனமான வார்த்தைகளும் அபிகாயிலிடம் இருந்து வந்தன. தாவீதுக்கு மனைவியாகி அபிகாயில் பெற்ற பிள்ளை தானியேலுக்குள் அந்த விதைகள் ஆழமாக வேர் விட்டிருந்தது. எத்தனை தான் காஷ்மீரின் மேக வெடிப்பினால் (Clouds burst) உண்டாகும் பெருவெள்ளமே (floods) வந்து மோதினாலும் தானியேல் விழுந்து போகவில்லை. 

இன்றைய உலகில் நட்சத்திரங்கள் போல ஜொலித்து வெளி உலகத்தாலும் அறியப்பட்ட அநேக வாலிபர்கள் ஆராதனை வீரர்களாகவும், புதுப் புதுப் பாடல்களை இயற்றுபவர்களாகவும் மற்றும் ஆங்காங்கே பிரசங்கிகளாகவும் எழும்புகிறார்கள். ஆனால், அவர்களில் அநேகர், மழைக்காலங்களில் திடீரென்று முளைக்கும் காளான்கள் போல முளைத்துப் பின் காணாமல் போய்விடுகிறார்கள். Name & Fame பின்னால் போய், பின் சீனிலே இல்லாமல் போய்விடுகிறார்கள். Lime-lite வெளிச்சத்தில் மிதந்து பின் கர்த்தரால் பயன்படுத்த முடியாத, அவர் சித்தம் செய்யாத, அவருக்குப் பிரியமில்லாத, பிரயோஜனமற்ற இடத்திற்குச் சென்று விடுகிறார்கள். ஆனால், நீயோ தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டு ஓடு...! (1 தீமோ 6:11,12 & 2 தீமோ2:22) 

வாலிபத் தம்பித் தங்கையே! இச்சையின் கோரப் பிடிகளில் மற்றும் பலவித addictions -ல் இன்னும் சிக்கித் தவிக்கிறாயோ? பழிவாங்கப் பிடிவாதமாய் துடிக்கிறாயோ? விரிந்த கைகளோடு உனக்காகக் காத்திருக்கும் அன்பான அப்பாவிடம் வந்து விழுந்து விடு. விழுந்த உன்னைத் தூக்கி நிறுத்தி நிலைத்து நிமிர்ந்து நிற்க வைப்பார். இதை சற்றும் சந்தேகப்படாமல் நம்பிவிடு; உன்னை விட்டு விலகாத, கைவிடாத தெய்வம் கூட இருக்கிறார்.

இந்த தானியேலின் பெயர், அவர் என்ன செய்தார் என்று மீண்டும் விளக்கங்கள் வேதத்தில் இல்லை தான். 2 சாமுவேல் 8:18 -ன் படி, பின் நாட்களில் இவர் தாவீது ராஜாவின் ராஜ்யத்திலே, இஸ்ரவேல் நாட்டிலே பிரதானியாக அதாவது ஒரு முதலமைச்சராக (chief minister/priest) இருந்ததாக வேதத்தில் சொல்லப்பட்ருக்கிறது. அதோடு கூட அவர் ஆசாரியராக இருந்ததாக ஆங்கில வேதாகமத்தில் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம், நாம்  ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும் (Royal Priesthood), பரிசுத்த ஜாதியாயும், அவருக்கு சொந்த ஜனமாயும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அல்லவா! அநேகரை அந்தகாரத்தினின்று இரட்சிக்கத்தானே உன்னை நிறுத்தி வைத்திருக்கிறார்.       

  எல்லாருக்கும் நியாயமும் நீதியும் செய்துவந்த தந்தையைப் பின்பற்றி, மகன் தானியேலும் கடைசிவரை வாழ்ந்திருப்பார் என்று தெரிகிறது. சாந்தம், அமைதிக்கு சொந்தக்காரர்; அதிகம் வெளியில் அறியப்படாதவர் தான், திரைக்குப் பின்னால் இருந்தாலும் இறுதிவரை நிலைத்து நின்றாரே!

நீங்கள் 90 Kids அல்லது 2K Kids அல்லது GenZ  எப்படிப்பட்டவராய் இருந்தாலும், இன்றைக்கு உங்களுக்கு இருக்கும் அதிகப்படியான சவால்கள் மற்றும் சோதனைகளில் விழுந்து விடாமல் நிற்பது என்பது எத்தனை பெரிய ஆறுதலான  விஷயம். வழுவாதபடி உங்களைக் காக்கவும் தம்முடைய மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமை உள்ளவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எல்லா மகிமையும் துதியும் உண்டாகட்டும்.(யூதா 24,25). இறுதி வரை அவர் சத்தம் கேட்டு, சித்தம் செய்ய கிருபை கிடைப்பதாக. ஆமேன்.






November 2025

 





    அருமையான வாலிப தம்பி, தங்கச்சி,  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனது அன்பின் வாழ்த்துகள். ஒரு கேள்வியோடு உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன். உன் வாழ்க்கையில்  எதை முதன்மையாக வைத்து நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? சுயமரியாதையோடு வாழ்வதற்கான படிப்பா? உன் மனதை நிறைவு செய்யும் நண்பர்களா? நினைத்ததைச் சாதிக்கவைக்கும் பணமா?   எதையும் சிறப்பாகச் செய்ய வைக்கும் திறமைகளா? எல்லாராலும் அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற  எண்ணமா? உன்னத நோக்கத்தோடு உன்னைப் படைத்த தேவாதி தேவனைக் குறித்ததா? இந்தக் கேள்விக்கான உன் பதில் தான் உன் இதயம் அமைதியால் நிரம்பி இருக்கிறதா? அல்லது கவலையால் பாரமாக இருக்கிறதா? என்பதை வெளிப்படுத்தும்.

மேலே குறிப்பிட்ட காரியங்களைப் பார்க்கும்போது, எல்லாமே எனக்கு தேவையானது தானே என்று நீ கேட்கலாம். ஆம், தேவையானது தான்; ஆனால் உன் வாழ்வில் முதன்மையான இடத்தை யாருக்கு, எதற்கு கொடுத்திருக்கிறாய்? 

    வேதமே வழிகாட்டி: வேத வசனத்தில் நாம் பார்க்கும் போது, மத்தேயு 6 : 33 இல்: “முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. எல்லா காலத்திற்கும் பொருந்தும் மேன்மையான கட்டளையை இந்த வசனத்தில் பார்க்கிறோம். இதுதான் உன் வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் உண்மையான வெற்றி, தேவனுக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதில் தான் உள்ளது.

'இருட்டில் பாடும் பறவை" என்று அழைக்கப்பட்ட ஃபேன்னி கிராஸ்பி  ஆறு வார குழந்தையாக இருக்கும்போதே கண் பார்வையை இழந்துவிட்டார். இந்தச் சூழ்நிலையிலும் தேவனை மகிமைப்படுத்தும் 8000 பாடல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், வேதாகமத்தில் அத்தியாயங்களையும், முழு புத்தகங்களையும் கூட மனப்பாடம் செய்து மேற்கோள் காட்டும் திறன் அவருக்கு இருந்தது. ஒரு பெரிய ஊழியர் அவரைப் பார்த்து, “உனக்கு அநேக திறமைகளைப் பரிசாக அளித்த உன் பரம எஜமானர், பார்வையை மட்டும் தராதது பரிதாபத்திற்குரியது” என்று கூறினார். அதற்கு கிராஸ்பி இப்படியாகப் பதிலளித்தார்: “நான் கண் பார்வை இல்லாதவளாய் பிறந்தது பரிதாபத்திற்குரியது அல்ல; நான் என்னை பாக்கியசாலியாக கருதுகிறேன். ஏனென்றால,; நான் எல்லாவற்றையும் பார்ப்பதற்கு முன்பாக, பரலோகத்துக்கு செல்லும்போது, என் கண்கள் முதலாவது இயேசு கிறிஸ்துவைக் காணும்.... அதையே நான் விரும்புகிறேன்.” அதுவே அவளுடைய முன்னுரிமை! வாழ்வின் கடினமான சூழ்நிலையும் கூட, தேவனுக்கு கொடுத்த முன்னுரிமையை கிராஸ்பியிடமிருந்து பறிக்க முடியவில்லை.

இன்றைய இளைஞர்களின் மனம் பல திசைகளிலும் இழுக்கப்படுகிறது. இதனால், அவர்களின் மனதில் கவலை நிறைந்து இருக்கிறது. அது மகிழ்ச்சியைத் திருடுகிறது; தவறான முடிவுகளை எடுக்க வைக்கிறது; வாழ்க்கையைக் கெடுத்து விடுகிறது. தேவனுக்கு முதலிடம் கொடுத்து வாழும்போது, இப்படிப்பட்ட கவலைகளிலிருந்து விடுபடமுடியும். மத்தேயு 6 : 26 – 30 வசனங்களில்: ஆகாயத்து பறவைகளுக்கு உணவு கொடுக்கிற தேவன், காட்டு புஷ்பங்களுக்கு உடை கொடுக்கிற தேவன், மிகவும் விசேஷித்தவர்கள் ஆகிய நமக்கு அன்றாடத் தேவைகளை கொடுக்க போதுமானவராய் இருக்கிறார். நீங்கள் செய்ய வேண்டியது: தேவனுடைய ராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் முதலாவது தேடவேண்டும். தேவன் நம் வாழ்வில் முதலிடத்தில் இருக்கும்போது, மற்ற அனைத்தும் அதனதன் இடத்தில் சரியாக வந்தடைகின்றன. உங்கள் வாழ்க்கையில் தேவனை முதன்மையாக வைக்கும் போது, நீங்கள் எதையும் இழந்துபோவதில்லை. 

தேவனுக்கே முதலிடம் : ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவரும், மிஷனரியுமான எரிக் லிடெல், தேவனுக்கு முதலிடம் கொடுக்கவேண்டியதைத் தேர்ந்தெடுத்தார். அவர் ஒரு சிறந்த ஓட்டப் பந்தய வீரர். ஒருமுறை அவருக்கே உரிய சிறந்த போட்டியில் ஓட மறுத்துவிட்டார்;. ஏனெனில், அது ஞாயிற்றுக்கிழமை, கர்த்தருடைய நாளில் நடக்கவிருந்தது. போட்டியில் ஓட மறுத்ததால் மக்கள் அவரை கேலி செய்தனர். ஆனால், அவர் கர்த்தருடைய நாளை கனப்படுத்த விரும்பினார். அதனால், தேவன் அவரை உயர்த்தினார்.  அவர் தனக்குப் பழக்கம் இல்லாத மற்றொரு பந்தயத்தில் தங்கம் வென்று உலக சாதனை படைத்தார். அவரது வாழ்க்கை “என் வாழ்வின் முதன்மை தேவனுக்கே, என் புகழ் அதற்குப் பின்பே” என்பதை இன்றும் கிறிஸ்துவுக்கு சாட்சியாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

நடைமுறை வழிமுறைகள்: உங்கள் நடைமுறை வாழ்க்கையில் தினமும் தேவனுக்கு முதன்மையான இடத்தையும் நேரத்தையும் கொடுங்கள் (மத்தேயு 22: 37,38). ஜெப நேரம் மற்றும் வேத வாசிப்புக்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி முழு மனதோடு செய்யுங்கள் (தானியேல் 6:10 ரூ சங்கீதம் 1:2,3).  ஒரு குறிப்பிட்ட வேளையில், சமூக ஊடகங்களை அமைதிப்படுத்தி விட்டு தேவனோடு அமர்ந்திருங்கள் (பிலிப்பியர் 4:8). சிறிய, பெரிய தீர்மானங்களிலும் தேவனிடம் ஆலோசனை கேட்டு பழகுங்கள் (1 சாமுவேல் 23:2,4,11,12). உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், திருப்தி உள்ளதாகவும் மாறும்.

தீர்மானம் எடுங்கள்: இந்த உலகத்தில் வாழ்வதற்கு தேவையான அன்றாட விஷயங்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது, புறஜாதியாரைப் போல வாழ்வதற்குச் சமம்! நம் வாழ்வில் தேவ சித்தத்தையும், தேவ நீதியையும் முதன்மையாக வைத்தால் அவர் மற்ற அனைத்தையும் கவனித்துக் கொள்வார். மத்தேயு 6:33 ஐ தேவனுடைய பிள்ளைகள் கடைப்பிடித்தால் இந்த உலகத்தில் நற்சாட்சி பெற்று வாழமுடியும். ஆனால், நம்மில் பலர் அதை கடைப்பிடிக்கத் தவறுவது எவ்வளவு  துக்கமான காரியம்! அருமையான தம்பி, தங்கச்சி! இந்த வாலிப வயதில்  அசைக்க முடியாத தீர்மானத்தோடு, தேவனுக்கு முதலிடம் கொடுக்க முடிவு செய்வாயா?  நீ எடுத்த தீர்மானத்தில்  உறுதியாக இருக்க தேவன் தாமே உதவி செய்வாராக. ஆமென்!

                                                                                                 சகோதரி. கிருபா எமர்சன்


October 2025

 


    கிறிஸ்துவில் பிரியமான வாலிப சகோதர சகோதரிகளே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். வாலிபப் பருவம் என்பது மனித வாழ்வின்  மிகவும் முக்கியமான ஒரு பகுதி. உலகில் எதையாகிலும் சாதித்து வாழ்வில் உயர்நிலையை அடையவேண்டும் என்ற எண்ணமும் மற்றும் சமுதாயத்தைச் சீர்த்திருத்தவேண்டும் என்ற துடிப்பும் இப்பருவத்தில் ஏற்படுவது இயல்பே. வாலிபத்தில் அநேகர் வேகமாகவும் விவேகமாகவும் ஓடி, தன் இலக்கை அடைய இரவு பகலென உழைத்து உயர்நிலைக்கு வருவது உண்டு. ஆனால், அநேகர் விவேகமில்லாமல் ஓடி படுகுழியில் விழுந்து தங்கள் வாழ்வைச் சீரழித்துக்கொள்கிறார்கள். தேவனால் கொடுக்கப்படும் உயரிய மேன்மையாகிய வாலிபத்தை நாம் சரியாய்க் காத்து, சரியான பாதையில் பொறுமையாய் ஓடினால் நம் எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாகும். ஆகவே, வாலிப வயதில் நாம் செய்ய வேண்டிய சில காரியங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள யாசிக்கின்றேன்.

1) தேவனுக்கு பயந்து நடவுங்கள்

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (நீதி. 1:7). பிரியமான வாலிபரே! வாலிப வயதில் தேவனுக்குப் பயந்து நல் வழியில் நடக்க நாம் பழகிக்கொள்ளவேண்டும். நாம் கல்வி கற்கின்ற இடங்களிலும், பணிபுரிகின்ற இடங்களிலும் பலவிதமான நண்பர்கள் காணப்பட்டாலும், சரியான நண்பர்களை தெரிந்தெடுத்துப் பழக நாம் கற்றுக்கொள்ளவேண்டும். நண்பர்களின் ஆலோசனைகளை, 'அது தேவனுக்குப் பிரியமானதா" என ஆராய்ந்து அறிவது நல்லது. சிலர், நண்பர்களது ஆலோசனைகளை அப்படியே ஏற்று, பெற்றோருக்கும் கூட அதைத் தெரியப்படுத்தாமல், இரகசியமாகவே செயல்படுத்தி, இறுதியில் கண்ணியில் சிக்கிக்கொள்ளுகின்றனர்; மரணத்தின் விளிம்பிற்கே செல்லும் வாலிபர்களும் உண்டு. நண்பர்கள் தவறான வழியைக் காட்டும்போது நாம் அதற்கு சம்மதிக்கக்கூடாது (நீதி 1:10). நீங்கள் எந்த ஒரு காரியத்தைச் செய்ய நினைத்தாலும், முதலாவது உங்கள் பெற்றோர்களுக்கும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் தெரியப்படுத்தி, தேவ சமுகத்தில் மனம் சமாதானமாக இருந்தால் மட்டுமே அதைச் செய்யத் தொடங்குங்கள். தேவ பயத்தோடே ஒவ்வொரு காரியத்தையும் கர்த்தருக்கு ஒப்புவித்து நம்பிக்கையோடே செயல்படுத்துங்கள். அப்போது அது நமக்கு வெற்றியாக அமையும். அவர் உங்களுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உதவி செய்கிறவர். உங்களை தூக்கி எடுப்பவர் மற்றும் அனைத்தையும் புதிதாக மாற்றுபவர். 

2) வேத தியானத்தை வழக்கமாக்குங்கள் 

உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாய் இருக்கிறேன். நாள் முழுதும் அது என் தியானம் (சங். 119:97). சங்கீதக்காரன், உலகத்தில் இருக்கின்ற எல்லாவற்றையும் காட்டிலும் வேதத்தை அதிகமாக நேசித்தான். ஆகவேதான், அதனை தனது தியானமாக்கிக்கொண்டான். வேதவசனமே நம் கால்களுக்குத் தீபமாகவும், நம் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது (சங். 119:105). வேத வசனம் நம் இருதயத்தில் எழுதப்படும்போது, அது நம்மை உலகத்தின் பாவங்கள், ஆசை இச்சைகள், தீய எண்ணங்கள் போன்றவைகளிலிருந்து காக்கும். வேதத்தை தியானிப்பவன் சுத்த இருதயமுள்ளவனாகவும், உணர்வுள்ளவர்களாகவும் இருப்பான். அது நம்மை எச்சரிக்கிறது, சீர்ப்படுத்துகிறது. ஞானவான்களாக்குகிறது, தெளிவிக்கிறது, பிரயோஜனமுள்ளவர்களாகவும் உருவாக்குகிறது. செல்போனில் அதிகமாக நேரத்தை உபயோகிப்பதையும், தேவையற்ற நண்பர்களோடு சுற்றுவதையும், வீணான காரியங்களைப் பேசுவதையும் பார்ப்பதையும் தவிர்த்து, வேதத்தை தியானித்தால், சத்தியம் நம்மை சுத்தமாக வைப்பது மட்டுமல்லாமல், சீரான பாதையிலும் எடுத்துச் செல்லும் (சங் 1:1-3). வாலிபனான யோசுவா பெருந்தலைவனாக மாறியதற்குக் காரணம், அவனது வேத தியானமும் அதன் மேல் கட்டமைக்கப்பட்ட அவனது வாழ்வும் தானே! சோம்பேறிகளாயிராமல் வேதத்தை தியானித்து வாழ்வை சுத்தமாக வைத்துக் கொள்ளுவோம். 

3) எதிர்பாலரிடம் கவனமாயிருங்கள்

பன்னிரண்டு வயதிற்குப் பிறகு, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எதிர்பாலர் மேல் ஒரு ஈர்ப்பு வருவது இயல்பு தான். வாலிப வயதில் எப்போதும் எதிர்பாலரை பார்த்துக்கொண்டே இருக்கவும், அவர்களோடே பேசிக்கொண்டே இருக்கவும் மனம் நினைக்கும். இன்று, படிக்கவேண்டிய காலத்தில் அநேக வாலிபர்கள் காதல் வலையில் சிக்கித் தவிக்கின்றனர். சுறுசுறுப்பாக எல்லாவற்றையும் செய்யவேண்டிய வயதில், நடைப்பிணமாகச் சுற்றித் திரிகிறார்கள். அப்படியே, சிம்சோன் ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் அவன் கண்களுக்குப் பிரியமானவளாகத் தெரிந்தாள் (நியாயா. 14:7). உடனே அவளை திருமணம் செய்ய வேண்டும் என்றான். பெற்றோரின் ஆலோசனை அவன் செவிகளில் ஏறவே இல்லை. ஆளைப்பார்த்து அழகில் மயங்கி திருமணம் செய்தான். ஆனால், அவனது வாழ்வோ நரக வாழ்வாக மாறிவிட்டது. மனைவியை இழந்து, சரீர இச்சையைப் போக்கிக்கொள்ள விபச்சாரிகளின் மடியில் வாழ்வைக் கழிக்கவேண்டியிருந்தது. அவ்வாறே, அம்மோன் வாலிப வயதில் கண்களின் இச்சைக்கு இடங்கொடுத்து, தன் சகோதரியினிடத்திலேயே மதியீனமாய் நடந்துகொண்டான்; தன் வாழ்வில் மகிழ்ச்சியைக் காணாமல் வெறுப்பையே கண்டான். ஆகவேதான், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு (2 தீமோத் 2:22) என்று வேதம் சொல்லுகிறது. யோசேப்பைப் போல பாலியல் இச்சைகளுக்கு விலகி ஓடுங்கள். தேவன் உங்களை உயர்வான இடத்தில் வைப்பார். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.

                                                                                                       சகோ. சரவணன்

SEP 2025

 


 கிறிஸ்துவுக்குள் அன்பான வாலிபத் தங்கங்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். உங்கள் வாலிபத்தின் நாட்களை அவருக்குப் பிரயோஜனமாக மாற்றி, இவ்வுலகத்தின் வழிகளிலே உங்கள் வாலிபத்தின் வாழ்க்கை சிக்கிக்கொள்ளாமல் உங்களைப் பத்திரமாகப் பாதுகாக்கத் துடிக்கும் பரலோகப் பிதாவுக்கே எல்லா துதியும், கனமும், மகிமையும் உண்டாகட்டும். பிரியமான வாலிபரே! பாவம் நிறைந்த இந்த உலகத்தில் வாழும் நாம் இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம் தரியாமல், நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, பரிசுத்தரோடு பரிசுத்தமாக நடக்க நமது வாழ்க்கையைப் பக்குவப்படுத்தவேண்டுமல்லவா? 'நாட்கள் பொல்லாதவைகளானதால்காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்" (எபேசியர் 5:16) என்பது வேதம் நமக்குத் தரும் அறிவுரையல்லவா! எனவே, வாலிபத்தின் நாட்களில், நாம் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாதே! 

ஒரு குடிகாரன் நன்றாகக் குடித்து விட்டு, குடி போதையின் உச்சத்தில் அவனே தன்னிடம், ' நான் யார்?" 'நான் இங்கே ஏன் இருக்கிறேன்" என்றெல்லாம் கேள்விகளைக் கேட்பதுண்டுளூ ஏனென்றால், குடி போதையின் உச்சத்தால் தன்னைத் தானே அவன் மறந்துவிடுவதால் உண்டாகும் விளைவு அது. அவ்வாறே, சிலர் பணத்தின் மிகுதியால் உலக ஆடம்பரத்துக்குள் அகப்பட்டு, அவர்களது  வாழ்க்கையும் ஆட்டம் கண்டு நிற்கிறது. கிறிஸ்தவனும்கூட சில வேளைகளில் தன்னை யாரென்றே மறந்து, உலகில் நிலை குலைந்து வாழ்கிறான்ளூ ஞாயிறு ஆராதனையில்தான் அவனுக்குள் தானும் ஒரு கிறிஸ்தவன் என்கிற எண்ணம் வருகிறது. சிலருக்கு இந்த உணர்வும் இருப்பதில்லை; காரணம், இவர்களுக்கு ஞாயிறு அன்று ஆலயத்துக்கு வந்து தேவனை ஆராதிக்கக்கூட நேரம் இருப்பதில்லை; ஏனென்றால், உலக நண்பர்களுடன் ஆட்டமும் பாட்டும், ிைஉெைஉ என்ற பெயரில் ஊரைச் சுற்றி நேரம் கழிப்பதும் ஞாயிறு அன்று தான். இதுவே இன்றைய இளைய கிறிஸ்தவ சமுதாயத்தின் நிலை; என்ன ஒரு பரிதாபம் ?

  காலங்கள் மாறி மாறி, கலாச்சாரம் கலைந்து, கலங்கி கிடக்கும் இந்த நாட்களில், வாலிபர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக நிற்கிறதே! 'வாலிபர்கள் இந்த தேசத்தின் வருங்காலம்" என இவ்வுலகத்தில் ஒரு வழக்கச் சொல் இருந்தாலும், இச்சொல், கிறிஸ்தவ உலகத்திற்கும் நன்றாகவே பொருந்தும். நம்முடைய தேசத்தில் கிறிஸ்துவை அறியாத அநேக நண்பர்கள் உடன் பயிலுவது உண்டு, உடன் பணி செய்வது உண்டு. இவர்களுக்கு முன்பாக நம்முடைய வாழ்க்கைத் தரத்தை ஒரு கிறிஸ்தவனாக மாற்றி நிறுத்தாத பட்சத்தில், நாம் மற்றொருவரை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்த இயலாதே! நம்முடைய வாழ்க்கையின் நிலை என்ன? உலகத்தோடு இணைந்து ஆசா பாசங்களுக்கும், தேவையில்லாத காரியங்களுக்கும் அடிமைப்பட்டு இருக்கிறதோ? ஆராய்ந்து பார்ப்போம். "வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி" (பிரசங்கி 11:9) என்று வேதம் கூறுகிறதே. 


இன்றைய நாட்களில், அநேகர் இணையத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் படவரி (Instagram)) புலனம் (WhatsApp), தந்தி (Telegram), முகநூல் (Facebook), செய்தி பரிமாற்றச் செயலி (Messenger) போன்ற இப்படிப்பட்ட செயலிகளில் வீணாக நேரத்தைச் செலவிடுகிறார்கள், இதில் முக்கியமாக வாலிபர்கள் தங்கள் வேலைகளையும் மற்றும் தங்கள் பொறுப்புகளையும் விட்டு ஆன்லைனில் பல மணி நேரங்கள் கிறிஸ்தவர்களுக்கும் தகாதஇணையதளங்களைப் பயன்படுத்தி, தங்கள் இருதயங்களை பாவத்தால்  கறைபடுத்துகின்றனர் மற்றும் பலர் ஆன்லைன் விளையாட்டுகளில் மாட்டிக்கொண்டுள்ளனர் என்பதையும் நாம் நன்கு அறிந்திருக்கிறோம். இன்றைய சூழ்நிலையில் இணையம் இன்றியமையாதது தான். ஆனால், அதுவே உன்னுடைய இணையாக மாறிவிட்டால், உன் வாழ்க்கையை அது இல்பொருளாகவும்  மாற்றிவிடும் என்பதை மறந்துவிடாதே! அதுமாத்திரமல்ல, அது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கிறிஸ்துவோடு உள்ள உறவையும் துண்டித்து, அவரது அன்பில் இருந்தும் நம்மைப் பிரித்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்றபோதிலும், இன்றைய இளைய சமுதாயத்தை இணையம் இளைப்படையாமல் இணைந்திருக்க வைத்துள்ளதை இல்லையெனக் கூறிட இயலாதே...  

நண்பனே, நீ எங்கே இருக்கிறாய்...?

வாலிப சகோதரனே, சகோதரியே, உன்னை நேசித்து, உனக்காக தம்முடைய ஜீவனையே கொடுத்து தம்முடைய பிள்ளையாக மாற்றின அந்த நல்ல இயேசுவை விட்டு தூரம் போய் நிற்கிறாயோ? ஜெபிக்கவோ, வேதவசனம் தியானிக்கவோ நேரம் இல்லாதவர்களாக  ஓய்வில்லாமல் அர்த்தமற்றவைகளில் அகப்பட்டு, தேவனை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டாயோ? ஆதாமையும் ஏவாளையும் படைத்த அன்பு தேவன் தோட்டத்தில் வந்து, ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்று அவனைத் தேடினாரே! (ஆதியாகமம் 3:9) அதே தேவன், இன்றும் உன்னைப் பார்த்து இதே கேள்வியைத்தான் கேட்கிறார்ளூ  தம்பியே, தங்கையே சற்று சிந்தித்துப்பார் 'நீ எங்கே இருக்கிறாய்?" உணர்த்தவில்லையோ இன்றும் உன்னை உருவாக்கத் துடிக்கும் உன்னதரின் வசனம்? உன் உள்ளத்தை உருக்கவில்லையோ கல்வாரியில் உருக்குலைந்த உன்னதர் இயேசுவின் மரணம்?

                                                                



July 2025


கிறிஸ்துவுக்குள் பிரியமான வாலிபத் தம்பி தங்கையரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். இன்றைய நாட்களில், 'மாடர்ன்' (Modern) என்ற பெயரில் உலகில் பலவிதமான காரியங்களும் பழக்கவழக்கங்களும் வலம்வந்துகொண்டிருக்கின்றன என்பது நாமறிந்ததே. சக மனிதர்களைக் காட்டிலும் சற்றாகிலும் தங்களை வித்தியாசப்படுத்திக் காண்பித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன், சிகை அலங்காரம் செய்வதிலும், ஆடை மற்றும் ஆபரணங்களை அணிவதிலும் அதிக கவனம் செலுத்தும் வாலிபர்கள் இன்றைய நாட்களில் அநேகர்.  அத்துடன், தாங்கள் விரும்புகின்ற அல்லது தங்கள் மனதிற்குப் பிடித்தமான பிரபலங்களைப் போல தங்களை மாற்றிக்கொள்வதிலும், அவர்களது சாயலுக்கு ஈடானதாகத் தங்கள் சரீரத்தை ஒப்பனையாக மாற்றிக்கொள்வதிலும், அவர்களைப் போன்ற வாழ்க்கை முறைகளை அமைத்துக்கொள்வதிலும் திருப்தியடைந்துவரும் வாலிபர்களும்கூட இந்நாட்களில் அநேகர் உண்டு. அலங்காரம் என்ற பெயரில் அலங்கோலமாகக் காட்சியளித்தாலும், அதனைப் பொருட்படுத்தாமலும், அதனைத் தொடரும் ஆபத்துகளையும் மற்றும் தொக்கி நிற்கும் பின்விளைவுகளையும் உணராமலுமேயே தொடர்கிறது அத்தகைய வாலிபரின் வாழ்க்கை. என்றபோதிலும், அவை அனைத்தும் நிலையானவைகள் அல்லவே; சீக்கிரத்தில் நீங்கிப்  போய்விடுபவைகள், இவ்வுலக வாழ்க்கையோடு விடுபட்டுவிடுபவைகள். 'இவ்வுலகத்தின் வேஷம் 
கடந்துபோகிறதே"
(1கொரி. 7:31) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே! எனவே, பிரியமான வாலிபரே! மரணம் வரையிலான இந்த உலக வாழ்க்கையை மனதில் கொண்டவர்களாக அல்ல, மரணமில்லாத நித்திய இராஜ்யத்தை மனதில் கொண்டவர்களாக இவ்வுலக வாழ்க்கையைக் கடந்துசெல்ல அழைக்கப்பட்டவர்கள் நாம். 

ஆதியிலே, தேவன் மனிதரைச் சிருஷ்டித்தபோது, தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் (ஆதி. 1:27) என்றே வாசிக்கின்றோம். ஆனால், அதனை விரும்பாத இவ்வுலகத்தின் அதிபதியாகிய சத்துருவோ, அந்தச் சாயலைக் கறைபடுத்தவும், தன்னுடைய சாயங்களை அதன் மீது பூசி அதனை தனக்குக் கீழ்ப்படுத்திவிடவும் முயற்சிக்கிறான்; இதற்கு ஒதுபோதும் நாம் அடிமையாகிவிடக்கூடாதே! 

பிரியமான வாலிபரே! தம்மைப் போல மாற்றவே தேவன் உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதே வேதத்தின் சத்தியம். 'தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்" (யோவான் 1:18) என்று வாசிக்கின்றோமே; தன்னுடைய வார்த்தைகளிலும், செயல்களிலும், நற்காரியங்களிலும் பிதாவையே வெளிப்படுத்தின அந்தக் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் போல மாறுவதற்கும் வாழுவதற்கும் நம்மை அர்ப்பணிப்போமென்றால், தேவனுடைய சாயலை நம்முடைய வாழ்க்கையில் நிச்சயம் நாம் வெளிப்படுத்த முடியும். இந்த உலகத்தினால் கறைபட்ட நம்மை கழுவுவதற்கும், பாவங்களை நீக்கி நம்மைப் பரிசுத்தமாக்குவதற்கும், இரட்சிப்பின் வஸ்திரத்தை நமக்கு உடுத்துவிக்கிறதற்கும்தானே தேவன் தன்னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பித்தந்தார். வழியாகிய அவரது வழிகளிலேயே வாழ இந்த வாலிபத்தின் நாட்களை அர்ப்பணிப்பது,  அவரது சாயலை உங்களது வாழ்க்கையில் பிரதிபலிக்கச்செய்துவிடுமே!  

அதுமாத்திரமல்ல, அவரை ஏற்றுக்கொண்டவர்களாகவும், அவரையே மாதிரியாகவும் கொண்ட வாழ்க்கை, 'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" என்ற நிலைக்கும், 'அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்" என்ற நிலைக்கும், 'மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி" (மத் 5:14-16) என்ற நிலைக்கும், உங்களுடைய வாலிபத்தின் தரத்தை உன்னதம் விரும்புகின்ற தரத்திற்கு உயர்த்திவிடும் என்பதும் உண்மையே! 'என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்" (யோவான் 15:4) என்றார் இயேசு கிறிஸ்து. அப்படியென்றால், நாம் அவரில் நிலைத்திருப்போமென்றால், அவரையே மாதிரியாகக் கொண்டிருப்போமென்றால்  நம்முடைய வாலிபத்தின் நாட்கள் அதிகக் கனிகளைக் கொடுக்கிறவைகளாக மாறிவிடுமே! அதனால் பரலோகம் களிகூருமே! அப்படிப்பட்ட வாழ்க்கைக்குள் உங்கள் ஒவ்வொருவரின் வாலிபத்தையும் தேவன் வழிநடத்துவாராக! அறுவடை நாளில் பதராய் அல்ல, கோதுமையாய் களஞ்சியத்தில் சேர்க்கப்படட்டும் உங்கள் வாழ்க்கை. 

                                                                                                                                           -எலிசபெத்