DEC 2025


 வால வயதின் குமாரராம் இன்றைய வாலிபச் செல்வங்களுக்கு, பலவான் இயேசுவின் கையில் கூர்மையான அம்புகளாய் மாற வாழ்த்துக்கள்! 

இரண்டாவது தானா? நீங்க First  இல்லீங்களா? பரவாயில்லீங்க.. 

Name list - ல் இவரும் யாக்கோபு, எப்பிராயீம் போல இரண்டாவது இடம்தான். எப்பிராயீம், அண்ணன் மனாசே பிறந்து மாதங்களோ அல்லது வருடங்களோ கழித்து பிறந்து இருக்கலாம். ஆனால், யாக்கோபு ஒரே பிரசவத்தில், ஒரே நாளில், ஏன் ஒரே நேரத்தில் சில நிமிஷங்களுக்காகப் போராடி இரண்டாவது இடம் பெறுகிறார். ஆனால், கர்த்தரின் கண்களோ, அதாவது பரலோகத்தின் பார்வையோ, இவர்களையே முதலாவதாகப் பார்த்தது. 

தம்பி, தங்கச்சி! நீங்கள் ஸ்கூல் மற்றும் காலேஜ் படிப்பில் அல்லது விளையாட்டில் 2nd ரேங்க் வாங்கினபோது, உங்கள் அம்மா அப்பா கண்டிப்பாகக் கேட்டிருப்பாங்க, 1st Rank எடுக்கவில்லை? என்று; 'அப்படித்தானே?

ஒலிம்பிக் வெற்றி மேடை (Victory Stand) போன்ற ஒரு வெற்றி மேடையில் மூன்று பேர் நிற்கிறார்கள். ஆனால், முதலாவது மற்றும் மூன்றாம் இடங்கள் திடீரென்று காலியாகி, இரண்டாம் இடம் பெறுபவர் மாத்திரம் நிற்கிறார் என்றால், எப்படி இருக்கும் இந்த சீன்...? பின்னால் நான்காவது இடம் பெறுபவரும் மிஸ்ஸிங் லிஸ்டில் சேர்ந்து விட்டாரென்றால் என்னவாகும்? என்ன புதிராக இருக்கிறதா.... ?

ஆம், மூத்தவனாகப் பிறந்த தாவீதின் குமாரன் அம்னோன் அம்போ தான், சொந்த உறவுகளைக் கூட பாசமாகப் பார்க்காமல், மோகம் கொண்டு பார்த்து, கோமாளியாகிக் கோட்டை விடுகிறான். மூன்றாம் இடத்தில் அப்சலோம் absent ஆகிறான்... ரொம்ப handsome எல்லாரையும் ஈசியாக மயக்கி ஏமாற்றி, மனங்களைக் கவர்ந்து, கட்டிப் பிடித்துத் தழுவி முத்தம் கொடுத்து விட்டு (attractive); ஆனால், தந்தையையே கொலை செய்து, தானே அரசனாகி ஆளவேண்டும் என்று வெறியாட்டம் ஆடி, அந்தரத்தில் தலை போய்விட்டது. அதோனியாவின் கதியோ அந்தோ! அதோ கதிதான்! கர்த்தரே முன்னறிந்து தெரிந்துகொண்ட தம்பி சாலொமோனை ஏற்றுக்கொள்ள முடியாத அதோனியா, அட்ரஸ் இல்லாமல் போய்விட்டான். இப்போது, இரண்டாம் இடத்தில் தானியேலோ நிலைத்து, நிமிர்ந்து நிற்கிறார்!! யாருங்க இவங்க எல்லாரும்...? இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டாரே, அந்த தாவீது ராஜாவின் முதல் பிறந்த ராஜகுமாரர்கள் தான் இவர்கள். (1 நாளா. 3:1-3)     

     வேதத்தில் தானியேல் என்ற பெயரில் வரும் முதல் நபர் இவரே. இவருக்கு கீலேயாப் என்று இன்னொரு பெயரும் உண்டு (2 சாமுவேல் 3:3). இன்று உலகம் முழுவதும் எண்ணடங்கா நபர்கள் தானியேல் என்று பெயர் வைத்ததில், இன்னும் வைப்பதில் பெருமை அடைந்துவருகின்றனர். வேதத்தில் இரண்டு மூன்று தானியேல்கள் இருக்கின்றனர். ஆனால், நட்சத்திரத் தானியேலாக இருப்பவர் பின்னால் வரும் தானியேல் தீர்க்கதரிசி. இருவருமே ராஜ குடும்பத்தில் பிறந்த இளவரசர்கள். தானியேல் தீர்க்கதரிசி அதே ராஜ குடும்பத்தில் தாவீதின் யூதப்பரம்பரையில் பின்னால் வந்தவர். இவர் பெயர் கூட முன்னால் உள்ள தானியேல் என்ற இந்த நபரை பார்த்து வைத்து இருக்கலாம். (வேதத்தில் நம் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு ... தாவீது... போன்றவர்களுடைய பெயர்கள், மீண்டும் இன்னொரு நபருக்கு வைக்கப்படவில்லை. ஏன் என்று தெரியவில்லை. ஆனால், இவர் பெயரோ மீண்டும் வருவது ஆச்சரியத்திற்குரியது!)

12 கோத்திரங்களில் ஒருவர் 'தாண்". அதன் அர்த்தம் 'நியாயாதிபதி". ஆம் தாண் கோத்திரத்தில் தான் சிம்சோன் என்று நாம் நன்கு அறிந்த ஸ்டார் நியாயாதிபதி வருகிறார். (நியாயாதிபதிகளின் நாட்களில் கர்த்தரை விட்டுத் தங்களுக்கு சுரூபங்களை உண்டாக்கிக் கொண்ட தாண் கோத்திரத்தார், வெளிப்படுத்தலில் வரும் முத்திரை போடப்பட்டோர் பட்டியலில் இல்லாமல் போய்விட்டார்கள்). ஆனால் 'தானியேல்" என்ற பெயரின் அர்த்தம் 'கர்த்தரே என் நியாயாதிபதி"! இந்தப் பெயரிலேயே எத்தனை பெரிய வெளிப்பாடு! கர்த்தரே நீதி செய்பவர்!! கர்த்தரே நியாயாதிபதி!!! என்று வேதத்தில் மீண்டும் மீண்டும் நாம் பார்க்கிறோம்.

இவர் பின்னணியில் இருந்தது கண்டிப்பாக அவரது தாயார்: வேதத்திலே ஒரு சிறந்த பெண்மணியாக, ரூபவதியாக 'மகா புத்திசாலி" என்று வர்ணிக்கப்பட்ட அபிகாயில் தான். 1 சாமுவேல் 25:28,31 - இங்கே அபிகாயில் பேசின வார்த்தைகளில் இருந்து நாம் இதை நன்றாக அறிந்து கொள்ள முடியும். அவர் தாவீதுக்குச் சொல்லிய புத்திமதி என்ன? கர்த்தரின் யுத்தங்களை நடத்தும் தாவீது- விருதாவாக இரத்தம் சிந்தக்கூடாது, பழிவாங்கவும் கூடாது. (No Revenge - Avenge). அப்போதுதான் அவருக்கு துக்கமும், மனஇடறலும்  (No grief - nor offense) இராது. தாவீதின் மற்ற பிள்ளைகள் விழுந்துபோக இவைகள் தானே காரணம்! தாவீது கர்த்தரின் யுத்தங்களைத் தான் செய்தார். ஆனாலும், கர்த்தருக்கு ஆலயம் கட்ட ஆசைப்பட்ட தாவீதுக்கு கர்த்தர் சொன்னது என்ன? (1 நாளா. 28:3) நீ யுத்த மனுஷனாய் இருந்து ரத்தத்தைச் சிந்தினாய், எனவே நீ கட்ட வேண்டாம். தீர்க்கதரிசி நாத்தான்  சொல்லும் முன்னே (2 சாமுவேல் 7:11-13 ), அபிகாயில், 'தாவீதுக்கு கர்த்தர் நிலையான வீட்டை நிச்சயமாய் கட்டுவார்" (1 சாமுவேல் 25:28) என்று எத்தனை திட்டவட்டமாகக் கூறிவிட்டாள் பாருங்கள். தொலைதூரப் பார்வையும், தீர்க்கதரிசனமான வார்த்தைகளும் அபிகாயிலிடம் இருந்து வந்தன. தாவீதுக்கு மனைவியாகி அபிகாயில் பெற்ற பிள்ளை தானியேலுக்குள் அந்த விதைகள் ஆழமாக வேர் விட்டிருந்தது. எத்தனை தான் காஷ்மீரின் மேக வெடிப்பினால் (Clouds burst) உண்டாகும் பெருவெள்ளமே (floods) வந்து மோதினாலும் தானியேல் விழுந்து போகவில்லை. 

இன்றைய உலகில் நட்சத்திரங்கள் போல ஜொலித்து வெளி உலகத்தாலும் அறியப்பட்ட அநேக வாலிபர்கள் ஆராதனை வீரர்களாகவும், புதுப் புதுப் பாடல்களை இயற்றுபவர்களாகவும் மற்றும் ஆங்காங்கே பிரசங்கிகளாகவும் எழும்புகிறார்கள். ஆனால், அவர்களில் அநேகர், மழைக்காலங்களில் திடீரென்று முளைக்கும் காளான்கள் போல முளைத்துப் பின் காணாமல் போய்விடுகிறார்கள். Name & Fame பின்னால் போய், பின் சீனிலே இல்லாமல் போய்விடுகிறார்கள். Lime-lite வெளிச்சத்தில் மிதந்து பின் கர்த்தரால் பயன்படுத்த முடியாத, அவர் சித்தம் செய்யாத, அவருக்குப் பிரியமில்லாத, பிரயோஜனமற்ற இடத்திற்குச் சென்று விடுகிறார்கள். ஆனால், நீயோ தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டு ஓடு...! (1 தீமோ 6:11,12 & 2 தீமோ2:22) 

வாலிபத் தம்பித் தங்கையே! இச்சையின் கோரப் பிடிகளில் மற்றும் பலவித addictions -ல் இன்னும் சிக்கித் தவிக்கிறாயோ? பழிவாங்கப் பிடிவாதமாய் துடிக்கிறாயோ? விரிந்த கைகளோடு உனக்காகக் காத்திருக்கும் அன்பான அப்பாவிடம் வந்து விழுந்து விடு. விழுந்த உன்னைத் தூக்கி நிறுத்தி நிலைத்து நிமிர்ந்து நிற்க வைப்பார். இதை சற்றும் சந்தேகப்படாமல் நம்பிவிடு; உன்னை விட்டு விலகாத, கைவிடாத தெய்வம் கூட இருக்கிறார்.

இந்த தானியேலின் பெயர், அவர் என்ன செய்தார் என்று மீண்டும் விளக்கங்கள் வேதத்தில் இல்லை தான். 2 சாமுவேல் 8:18 -ன் படி, பின் நாட்களில் இவர் தாவீது ராஜாவின் ராஜ்யத்திலே, இஸ்ரவேல் நாட்டிலே பிரதானியாக அதாவது ஒரு முதலமைச்சராக (chief minister/priest) இருந்ததாக வேதத்தில் சொல்லப்பட்ருக்கிறது. அதோடு கூட அவர் ஆசாரியராக இருந்ததாக ஆங்கில வேதாகமத்தில் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம், நாம்  ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும் (Royal Priesthood), பரிசுத்த ஜாதியாயும், அவருக்கு சொந்த ஜனமாயும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அல்லவா! அநேகரை அந்தகாரத்தினின்று இரட்சிக்கத்தானே உன்னை நிறுத்தி வைத்திருக்கிறார்.       

  எல்லாருக்கும் நியாயமும் நீதியும் செய்துவந்த தந்தையைப் பின்பற்றி, மகன் தானியேலும் கடைசிவரை வாழ்ந்திருப்பார் என்று தெரிகிறது. சாந்தம், அமைதிக்கு சொந்தக்காரர்; அதிகம் வெளியில் அறியப்படாதவர் தான், திரைக்குப் பின்னால் இருந்தாலும் இறுதிவரை நிலைத்து நின்றாரே!

நீங்கள் 90 Kids அல்லது 2K Kids அல்லது GenZ  எப்படிப்பட்டவராய் இருந்தாலும், இன்றைக்கு உங்களுக்கு இருக்கும் அதிகப்படியான சவால்கள் மற்றும் சோதனைகளில் விழுந்து விடாமல் நிற்பது என்பது எத்தனை பெரிய ஆறுதலான  விஷயம். வழுவாதபடி உங்களைக் காக்கவும் தம்முடைய மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமை உள்ளவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எல்லா மகிமையும் துதியும் உண்டாகட்டும்.(யூதா 24,25). இறுதி வரை அவர் சத்தம் கேட்டு, சித்தம் செய்ய கிருபை கிடைப்பதாக. ஆமேன்.






November 2025

 





    அருமையான வாலிப தம்பி, தங்கச்சி,  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எனது அன்பின் வாழ்த்துகள். ஒரு கேள்வியோடு உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன். உன் வாழ்க்கையில்  எதை முதன்மையாக வைத்து நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய்? சுயமரியாதையோடு வாழ்வதற்கான படிப்பா? உன் மனதை நிறைவு செய்யும் நண்பர்களா? நினைத்ததைச் சாதிக்கவைக்கும் பணமா?   எதையும் சிறப்பாகச் செய்ய வைக்கும் திறமைகளா? எல்லாராலும் அங்கீகரிக்கப்படவேண்டும் என்ற  எண்ணமா? உன்னத நோக்கத்தோடு உன்னைப் படைத்த தேவாதி தேவனைக் குறித்ததா? இந்தக் கேள்விக்கான உன் பதில் தான் உன் இதயம் அமைதியால் நிரம்பி இருக்கிறதா? அல்லது கவலையால் பாரமாக இருக்கிறதா? என்பதை வெளிப்படுத்தும்.

மேலே குறிப்பிட்ட காரியங்களைப் பார்க்கும்போது, எல்லாமே எனக்கு தேவையானது தானே என்று நீ கேட்கலாம். ஆம், தேவையானது தான்; ஆனால் உன் வாழ்வில் முதன்மையான இடத்தை யாருக்கு, எதற்கு கொடுத்திருக்கிறாய்? 

    வேதமே வழிகாட்டி: வேத வசனத்தில் நாம் பார்க்கும் போது, மத்தேயு 6 : 33 இல்: “முதலாவது தேவனுடைய ராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் தேடுங்கள். அப்பொழுது இவைகள் எல்லாம் உங்களுக்கு கூட கொடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. எல்லா காலத்திற்கும் பொருந்தும் மேன்மையான கட்டளையை இந்த வசனத்தில் பார்க்கிறோம். இதுதான் உன் வாழ்வின் அடிப்படையாக இருக்க வேண்டும். வாழ்க்கையில் உண்மையான வெற்றி, தேவனுக்குரிய காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதில் தான் உள்ளது.

'இருட்டில் பாடும் பறவை" என்று அழைக்கப்பட்ட ஃபேன்னி கிராஸ்பி  ஆறு வார குழந்தையாக இருக்கும்போதே கண் பார்வையை இழந்துவிட்டார். இந்தச் சூழ்நிலையிலும் தேவனை மகிமைப்படுத்தும் 8000 பாடல்களை எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், வேதாகமத்தில் அத்தியாயங்களையும், முழு புத்தகங்களையும் கூட மனப்பாடம் செய்து மேற்கோள் காட்டும் திறன் அவருக்கு இருந்தது. ஒரு பெரிய ஊழியர் அவரைப் பார்த்து, “உனக்கு அநேக திறமைகளைப் பரிசாக அளித்த உன் பரம எஜமானர், பார்வையை மட்டும் தராதது பரிதாபத்திற்குரியது” என்று கூறினார். அதற்கு கிராஸ்பி இப்படியாகப் பதிலளித்தார்: “நான் கண் பார்வை இல்லாதவளாய் பிறந்தது பரிதாபத்திற்குரியது அல்ல; நான் என்னை பாக்கியசாலியாக கருதுகிறேன். ஏனென்றால,; நான் எல்லாவற்றையும் பார்ப்பதற்கு முன்பாக, பரலோகத்துக்கு செல்லும்போது, என் கண்கள் முதலாவது இயேசு கிறிஸ்துவைக் காணும்.... அதையே நான் விரும்புகிறேன்.” அதுவே அவளுடைய முன்னுரிமை! வாழ்வின் கடினமான சூழ்நிலையும் கூட, தேவனுக்கு கொடுத்த முன்னுரிமையை கிராஸ்பியிடமிருந்து பறிக்க முடியவில்லை.

இன்றைய இளைஞர்களின் மனம் பல திசைகளிலும் இழுக்கப்படுகிறது. இதனால், அவர்களின் மனதில் கவலை நிறைந்து இருக்கிறது. அது மகிழ்ச்சியைத் திருடுகிறது; தவறான முடிவுகளை எடுக்க வைக்கிறது; வாழ்க்கையைக் கெடுத்து விடுகிறது. தேவனுக்கு முதலிடம் கொடுத்து வாழும்போது, இப்படிப்பட்ட கவலைகளிலிருந்து விடுபடமுடியும். மத்தேயு 6 : 26 – 30 வசனங்களில்: ஆகாயத்து பறவைகளுக்கு உணவு கொடுக்கிற தேவன், காட்டு புஷ்பங்களுக்கு உடை கொடுக்கிற தேவன், மிகவும் விசேஷித்தவர்கள் ஆகிய நமக்கு அன்றாடத் தேவைகளை கொடுக்க போதுமானவராய் இருக்கிறார். நீங்கள் செய்ய வேண்டியது: தேவனுடைய ராஜ்ஜியத்தையும், அவருடைய நீதியையும் முதலாவது தேடவேண்டும். தேவன் நம் வாழ்வில் முதலிடத்தில் இருக்கும்போது, மற்ற அனைத்தும் அதனதன் இடத்தில் சரியாக வந்தடைகின்றன. உங்கள் வாழ்க்கையில் தேவனை முதன்மையாக வைக்கும் போது, நீங்கள் எதையும் இழந்துபோவதில்லை. 

தேவனுக்கே முதலிடம் : ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவரும், மிஷனரியுமான எரிக் லிடெல், தேவனுக்கு முதலிடம் கொடுக்கவேண்டியதைத் தேர்ந்தெடுத்தார். அவர் ஒரு சிறந்த ஓட்டப் பந்தய வீரர். ஒருமுறை அவருக்கே உரிய சிறந்த போட்டியில் ஓட மறுத்துவிட்டார்;. ஏனெனில், அது ஞாயிற்றுக்கிழமை, கர்த்தருடைய நாளில் நடக்கவிருந்தது. போட்டியில் ஓட மறுத்ததால் மக்கள் அவரை கேலி செய்தனர். ஆனால், அவர் கர்த்தருடைய நாளை கனப்படுத்த விரும்பினார். அதனால், தேவன் அவரை உயர்த்தினார்.  அவர் தனக்குப் பழக்கம் இல்லாத மற்றொரு பந்தயத்தில் தங்கம் வென்று உலக சாதனை படைத்தார். அவரது வாழ்க்கை “என் வாழ்வின் முதன்மை தேவனுக்கே, என் புகழ் அதற்குப் பின்பே” என்பதை இன்றும் கிறிஸ்துவுக்கு சாட்சியாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

நடைமுறை வழிமுறைகள்: உங்கள் நடைமுறை வாழ்க்கையில் தினமும் தேவனுக்கு முதன்மையான இடத்தையும் நேரத்தையும் கொடுங்கள் (மத்தேயு 22: 37,38). ஜெப நேரம் மற்றும் வேத வாசிப்புக்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி முழு மனதோடு செய்யுங்கள் (தானியேல் 6:10 ரூ சங்கீதம் 1:2,3).  ஒரு குறிப்பிட்ட வேளையில், சமூக ஊடகங்களை அமைதிப்படுத்தி விட்டு தேவனோடு அமர்ந்திருங்கள் (பிலிப்பியர் 4:8). சிறிய, பெரிய தீர்மானங்களிலும் தேவனிடம் ஆலோசனை கேட்டு பழகுங்கள் (1 சாமுவேல் 23:2,4,11,12). உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், திருப்தி உள்ளதாகவும் மாறும்.

தீர்மானம் எடுங்கள்: இந்த உலகத்தில் வாழ்வதற்கு தேவையான அன்றாட விஷயங்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது, புறஜாதியாரைப் போல வாழ்வதற்குச் சமம்! நம் வாழ்வில் தேவ சித்தத்தையும், தேவ நீதியையும் முதன்மையாக வைத்தால் அவர் மற்ற அனைத்தையும் கவனித்துக் கொள்வார். மத்தேயு 6:33 ஐ தேவனுடைய பிள்ளைகள் கடைப்பிடித்தால் இந்த உலகத்தில் நற்சாட்சி பெற்று வாழமுடியும். ஆனால், நம்மில் பலர் அதை கடைப்பிடிக்கத் தவறுவது எவ்வளவு  துக்கமான காரியம்! அருமையான தம்பி, தங்கச்சி! இந்த வாலிப வயதில்  அசைக்க முடியாத தீர்மானத்தோடு, தேவனுக்கு முதலிடம் கொடுக்க முடிவு செய்வாயா?  நீ எடுத்த தீர்மானத்தில்  உறுதியாக இருக்க தேவன் தாமே உதவி செய்வாராக. ஆமென்!

                                                                                                 சகோதரி. கிருபா எமர்சன்


October 2025

 


    கிறிஸ்துவில் பிரியமான வாலிப சகோதர சகோதரிகளே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். வாலிபப் பருவம் என்பது மனித வாழ்வின்  மிகவும் முக்கியமான ஒரு பகுதி. உலகில் எதையாகிலும் சாதித்து வாழ்வில் உயர்நிலையை அடையவேண்டும் என்ற எண்ணமும் மற்றும் சமுதாயத்தைச் சீர்த்திருத்தவேண்டும் என்ற துடிப்பும் இப்பருவத்தில் ஏற்படுவது இயல்பே. வாலிபத்தில் அநேகர் வேகமாகவும் விவேகமாகவும் ஓடி, தன் இலக்கை அடைய இரவு பகலென உழைத்து உயர்நிலைக்கு வருவது உண்டு. ஆனால், அநேகர் விவேகமில்லாமல் ஓடி படுகுழியில் விழுந்து தங்கள் வாழ்வைச் சீரழித்துக்கொள்கிறார்கள். தேவனால் கொடுக்கப்படும் உயரிய மேன்மையாகிய வாலிபத்தை நாம் சரியாய்க் காத்து, சரியான பாதையில் பொறுமையாய் ஓடினால் நம் எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாகும். ஆகவே, வாலிப வயதில் நாம் செய்ய வேண்டிய சில காரியங்களை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள யாசிக்கின்றேன்.

1) தேவனுக்கு பயந்து நடவுங்கள்

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (நீதி. 1:7). பிரியமான வாலிபரே! வாலிப வயதில் தேவனுக்குப் பயந்து நல் வழியில் நடக்க நாம் பழகிக்கொள்ளவேண்டும். நாம் கல்வி கற்கின்ற இடங்களிலும், பணிபுரிகின்ற இடங்களிலும் பலவிதமான நண்பர்கள் காணப்பட்டாலும், சரியான நண்பர்களை தெரிந்தெடுத்துப் பழக நாம் கற்றுக்கொள்ளவேண்டும். நண்பர்களின் ஆலோசனைகளை, 'அது தேவனுக்குப் பிரியமானதா" என ஆராய்ந்து அறிவது நல்லது. சிலர், நண்பர்களது ஆலோசனைகளை அப்படியே ஏற்று, பெற்றோருக்கும் கூட அதைத் தெரியப்படுத்தாமல், இரகசியமாகவே செயல்படுத்தி, இறுதியில் கண்ணியில் சிக்கிக்கொள்ளுகின்றனர்; மரணத்தின் விளிம்பிற்கே செல்லும் வாலிபர்களும் உண்டு. நண்பர்கள் தவறான வழியைக் காட்டும்போது நாம் அதற்கு சம்மதிக்கக்கூடாது (நீதி 1:10). நீங்கள் எந்த ஒரு காரியத்தைச் செய்ய நினைத்தாலும், முதலாவது உங்கள் பெற்றோர்களுக்கும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் தெரியப்படுத்தி, தேவ சமுகத்தில் மனம் சமாதானமாக இருந்தால் மட்டுமே அதைச் செய்யத் தொடங்குங்கள். தேவ பயத்தோடே ஒவ்வொரு காரியத்தையும் கர்த்தருக்கு ஒப்புவித்து நம்பிக்கையோடே செயல்படுத்துங்கள். அப்போது அது நமக்கு வெற்றியாக அமையும். அவர் உங்களுக்கு எல்லா சூழ்நிலைகளிலும் உதவி செய்கிறவர். உங்களை தூக்கி எடுப்பவர் மற்றும் அனைத்தையும் புதிதாக மாற்றுபவர். 

2) வேத தியானத்தை வழக்கமாக்குங்கள் 

உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாய் இருக்கிறேன். நாள் முழுதும் அது என் தியானம் (சங். 119:97). சங்கீதக்காரன், உலகத்தில் இருக்கின்ற எல்லாவற்றையும் காட்டிலும் வேதத்தை அதிகமாக நேசித்தான். ஆகவேதான், அதனை தனது தியானமாக்கிக்கொண்டான். வேதவசனமே நம் கால்களுக்குத் தீபமாகவும், நம் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது (சங். 119:105). வேத வசனம் நம் இருதயத்தில் எழுதப்படும்போது, அது நம்மை உலகத்தின் பாவங்கள், ஆசை இச்சைகள், தீய எண்ணங்கள் போன்றவைகளிலிருந்து காக்கும். வேதத்தை தியானிப்பவன் சுத்த இருதயமுள்ளவனாகவும், உணர்வுள்ளவர்களாகவும் இருப்பான். அது நம்மை எச்சரிக்கிறது, சீர்ப்படுத்துகிறது. ஞானவான்களாக்குகிறது, தெளிவிக்கிறது, பிரயோஜனமுள்ளவர்களாகவும் உருவாக்குகிறது. செல்போனில் அதிகமாக நேரத்தை உபயோகிப்பதையும், தேவையற்ற நண்பர்களோடு சுற்றுவதையும், வீணான காரியங்களைப் பேசுவதையும் பார்ப்பதையும் தவிர்த்து, வேதத்தை தியானித்தால், சத்தியம் நம்மை சுத்தமாக வைப்பது மட்டுமல்லாமல், சீரான பாதையிலும் எடுத்துச் செல்லும் (சங் 1:1-3). வாலிபனான யோசுவா பெருந்தலைவனாக மாறியதற்குக் காரணம், அவனது வேத தியானமும் அதன் மேல் கட்டமைக்கப்பட்ட அவனது வாழ்வும் தானே! சோம்பேறிகளாயிராமல் வேதத்தை தியானித்து வாழ்வை சுத்தமாக வைத்துக் கொள்ளுவோம். 

3) எதிர்பாலரிடம் கவனமாயிருங்கள்

பன்னிரண்டு வயதிற்குப் பிறகு, ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் எதிர்பாலர் மேல் ஒரு ஈர்ப்பு வருவது இயல்பு தான். வாலிப வயதில் எப்போதும் எதிர்பாலரை பார்த்துக்கொண்டே இருக்கவும், அவர்களோடே பேசிக்கொண்டே இருக்கவும் மனம் நினைக்கும். இன்று, படிக்கவேண்டிய காலத்தில் அநேக வாலிபர்கள் காதல் வலையில் சிக்கித் தவிக்கின்றனர். சுறுசுறுப்பாக எல்லாவற்றையும் செய்யவேண்டிய வயதில், நடைப்பிணமாகச் சுற்றித் திரிகிறார்கள். அப்படியே, சிம்சோன் ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் அவன் கண்களுக்குப் பிரியமானவளாகத் தெரிந்தாள் (நியாயா. 14:7). உடனே அவளை திருமணம் செய்ய வேண்டும் என்றான். பெற்றோரின் ஆலோசனை அவன் செவிகளில் ஏறவே இல்லை. ஆளைப்பார்த்து அழகில் மயங்கி திருமணம் செய்தான். ஆனால், அவனது வாழ்வோ நரக வாழ்வாக மாறிவிட்டது. மனைவியை இழந்து, சரீர இச்சையைப் போக்கிக்கொள்ள விபச்சாரிகளின் மடியில் வாழ்வைக் கழிக்கவேண்டியிருந்தது. அவ்வாறே, அம்மோன் வாலிப வயதில் கண்களின் இச்சைக்கு இடங்கொடுத்து, தன் சகோதரியினிடத்திலேயே மதியீனமாய் நடந்துகொண்டான்; தன் வாழ்வில் மகிழ்ச்சியைக் காணாமல் வெறுப்பையே கண்டான். ஆகவேதான், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு (2 தீமோத் 2:22) என்று வேதம் சொல்லுகிறது. யோசேப்பைப் போல பாலியல் இச்சைகளுக்கு விலகி ஓடுங்கள். தேவன் உங்களை உயர்வான இடத்தில் வைப்பார். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்.

                                                                                                       சகோ. சரவணன்

SEP 2025

 


 கிறிஸ்துவுக்குள் அன்பான வாலிபத் தங்கங்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். உங்கள் வாலிபத்தின் நாட்களை அவருக்குப் பிரயோஜனமாக மாற்றி, இவ்வுலகத்தின் வழிகளிலே உங்கள் வாலிபத்தின் வாழ்க்கை சிக்கிக்கொள்ளாமல் உங்களைப் பத்திரமாகப் பாதுகாக்கத் துடிக்கும் பரலோகப் பிதாவுக்கே எல்லா துதியும், கனமும், மகிமையும் உண்டாகட்டும். பிரியமான வாலிபரே! பாவம் நிறைந்த இந்த உலகத்தில் வாழும் நாம் இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம் தரியாமல், நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து, பரிசுத்தரோடு பரிசுத்தமாக நடக்க நமது வாழ்க்கையைப் பக்குவப்படுத்தவேண்டுமல்லவா? 'நாட்கள் பொல்லாதவைகளானதால்காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்" (எபேசியர் 5:16) என்பது வேதம் நமக்குத் தரும் அறிவுரையல்லவா! எனவே, வாலிபத்தின் நாட்களில், நாம் தேவனுக்குச் சொந்தமானவர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாதே! 

ஒரு குடிகாரன் நன்றாகக் குடித்து விட்டு, குடி போதையின் உச்சத்தில் அவனே தன்னிடம், ' நான் யார்?" 'நான் இங்கே ஏன் இருக்கிறேன்" என்றெல்லாம் கேள்விகளைக் கேட்பதுண்டுளூ ஏனென்றால், குடி போதையின் உச்சத்தால் தன்னைத் தானே அவன் மறந்துவிடுவதால் உண்டாகும் விளைவு அது. அவ்வாறே, சிலர் பணத்தின் மிகுதியால் உலக ஆடம்பரத்துக்குள் அகப்பட்டு, அவர்களது  வாழ்க்கையும் ஆட்டம் கண்டு நிற்கிறது. கிறிஸ்தவனும்கூட சில வேளைகளில் தன்னை யாரென்றே மறந்து, உலகில் நிலை குலைந்து வாழ்கிறான்ளூ ஞாயிறு ஆராதனையில்தான் அவனுக்குள் தானும் ஒரு கிறிஸ்தவன் என்கிற எண்ணம் வருகிறது. சிலருக்கு இந்த உணர்வும் இருப்பதில்லை; காரணம், இவர்களுக்கு ஞாயிறு அன்று ஆலயத்துக்கு வந்து தேவனை ஆராதிக்கக்கூட நேரம் இருப்பதில்லை; ஏனென்றால், உலக நண்பர்களுடன் ஆட்டமும் பாட்டும், ிைஉெைஉ என்ற பெயரில் ஊரைச் சுற்றி நேரம் கழிப்பதும் ஞாயிறு அன்று தான். இதுவே இன்றைய இளைய கிறிஸ்தவ சமுதாயத்தின் நிலை; என்ன ஒரு பரிதாபம் ?

  காலங்கள் மாறி மாறி, கலாச்சாரம் கலைந்து, கலங்கி கிடக்கும் இந்த நாட்களில், வாலிபர்களின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக நிற்கிறதே! 'வாலிபர்கள் இந்த தேசத்தின் வருங்காலம்" என இவ்வுலகத்தில் ஒரு வழக்கச் சொல் இருந்தாலும், இச்சொல், கிறிஸ்தவ உலகத்திற்கும் நன்றாகவே பொருந்தும். நம்முடைய தேசத்தில் கிறிஸ்துவை அறியாத அநேக நண்பர்கள் உடன் பயிலுவது உண்டு, உடன் பணி செய்வது உண்டு. இவர்களுக்கு முன்பாக நம்முடைய வாழ்க்கைத் தரத்தை ஒரு கிறிஸ்தவனாக மாற்றி நிறுத்தாத பட்சத்தில், நாம் மற்றொருவரை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்த இயலாதே! நம்முடைய வாழ்க்கையின் நிலை என்ன? உலகத்தோடு இணைந்து ஆசா பாசங்களுக்கும், தேவையில்லாத காரியங்களுக்கும் அடிமைப்பட்டு இருக்கிறதோ? ஆராய்ந்து பார்ப்போம். "வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி" (பிரசங்கி 11:9) என்று வேதம் கூறுகிறதே. 


இன்றைய நாட்களில், அநேகர் இணையத்தில் வயது வித்தியாசம் இல்லாமல் படவரி (Instagram)) புலனம் (WhatsApp), தந்தி (Telegram), முகநூல் (Facebook), செய்தி பரிமாற்றச் செயலி (Messenger) போன்ற இப்படிப்பட்ட செயலிகளில் வீணாக நேரத்தைச் செலவிடுகிறார்கள், இதில் முக்கியமாக வாலிபர்கள் தங்கள் வேலைகளையும் மற்றும் தங்கள் பொறுப்புகளையும் விட்டு ஆன்லைனில் பல மணி நேரங்கள் கிறிஸ்தவர்களுக்கும் தகாதஇணையதளங்களைப் பயன்படுத்தி, தங்கள் இருதயங்களை பாவத்தால்  கறைபடுத்துகின்றனர் மற்றும் பலர் ஆன்லைன் விளையாட்டுகளில் மாட்டிக்கொண்டுள்ளனர் என்பதையும் நாம் நன்கு அறிந்திருக்கிறோம். இன்றைய சூழ்நிலையில் இணையம் இன்றியமையாதது தான். ஆனால், அதுவே உன்னுடைய இணையாக மாறிவிட்டால், உன் வாழ்க்கையை அது இல்பொருளாகவும்  மாற்றிவிடும் என்பதை மறந்துவிடாதே! அதுமாத்திரமல்ல, அது நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கிறிஸ்துவோடு உள்ள உறவையும் துண்டித்து, அவரது அன்பில் இருந்தும் நம்மைப் பிரித்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்றபோதிலும், இன்றைய இளைய சமுதாயத்தை இணையம் இளைப்படையாமல் இணைந்திருக்க வைத்துள்ளதை இல்லையெனக் கூறிட இயலாதே...  

நண்பனே, நீ எங்கே இருக்கிறாய்...?

வாலிப சகோதரனே, சகோதரியே, உன்னை நேசித்து, உனக்காக தம்முடைய ஜீவனையே கொடுத்து தம்முடைய பிள்ளையாக மாற்றின அந்த நல்ல இயேசுவை விட்டு தூரம் போய் நிற்கிறாயோ? ஜெபிக்கவோ, வேதவசனம் தியானிக்கவோ நேரம் இல்லாதவர்களாக  ஓய்வில்லாமல் அர்த்தமற்றவைகளில் அகப்பட்டு, தேவனை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டாயோ? ஆதாமையும் ஏவாளையும் படைத்த அன்பு தேவன் தோட்டத்தில் வந்து, ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்று அவனைத் தேடினாரே! (ஆதியாகமம் 3:9) அதே தேவன், இன்றும் உன்னைப் பார்த்து இதே கேள்வியைத்தான் கேட்கிறார்ளூ  தம்பியே, தங்கையே சற்று சிந்தித்துப்பார் 'நீ எங்கே இருக்கிறாய்?" உணர்த்தவில்லையோ இன்றும் உன்னை உருவாக்கத் துடிக்கும் உன்னதரின் வசனம்? உன் உள்ளத்தை உருக்கவில்லையோ கல்வாரியில் உருக்குலைந்த உன்னதர் இயேசுவின் மரணம்?

                                                                



July 2025


கிறிஸ்துவுக்குள் பிரியமான வாலிபத் தம்பி தங்கையரே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். இன்றைய நாட்களில், 'மாடர்ன்' (Modern) என்ற பெயரில் உலகில் பலவிதமான காரியங்களும் பழக்கவழக்கங்களும் வலம்வந்துகொண்டிருக்கின்றன என்பது நாமறிந்ததே. சக மனிதர்களைக் காட்டிலும் சற்றாகிலும் தங்களை வித்தியாசப்படுத்திக் காண்பித்துவிடவேண்டும் என்ற எண்ணத்துடன், சிகை அலங்காரம் செய்வதிலும், ஆடை மற்றும் ஆபரணங்களை அணிவதிலும் அதிக கவனம் செலுத்தும் வாலிபர்கள் இன்றைய நாட்களில் அநேகர்.  அத்துடன், தாங்கள் விரும்புகின்ற அல்லது தங்கள் மனதிற்குப் பிடித்தமான பிரபலங்களைப் போல தங்களை மாற்றிக்கொள்வதிலும், அவர்களது சாயலுக்கு ஈடானதாகத் தங்கள் சரீரத்தை ஒப்பனையாக மாற்றிக்கொள்வதிலும், அவர்களைப் போன்ற வாழ்க்கை முறைகளை அமைத்துக்கொள்வதிலும் திருப்தியடைந்துவரும் வாலிபர்களும்கூட இந்நாட்களில் அநேகர் உண்டு. அலங்காரம் என்ற பெயரில் அலங்கோலமாகக் காட்சியளித்தாலும், அதனைப் பொருட்படுத்தாமலும், அதனைத் தொடரும் ஆபத்துகளையும் மற்றும் தொக்கி நிற்கும் பின்விளைவுகளையும் உணராமலுமேயே தொடர்கிறது அத்தகைய வாலிபரின் வாழ்க்கை. என்றபோதிலும், அவை அனைத்தும் நிலையானவைகள் அல்லவே; சீக்கிரத்தில் நீங்கிப்  போய்விடுபவைகள், இவ்வுலக வாழ்க்கையோடு விடுபட்டுவிடுபவைகள். 'இவ்வுலகத்தின் வேஷம் 
கடந்துபோகிறதே"
(1கொரி. 7:31) என்று வேதத்தில் வாசிக்கின்றோமே! எனவே, பிரியமான வாலிபரே! மரணம் வரையிலான இந்த உலக வாழ்க்கையை மனதில் கொண்டவர்களாக அல்ல, மரணமில்லாத நித்திய இராஜ்யத்தை மனதில் கொண்டவர்களாக இவ்வுலக வாழ்க்கையைக் கடந்துசெல்ல அழைக்கப்பட்டவர்கள் நாம். 

ஆதியிலே, தேவன் மனிதரைச் சிருஷ்டித்தபோது, தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார் (ஆதி. 1:27) என்றே வாசிக்கின்றோம். ஆனால், அதனை விரும்பாத இவ்வுலகத்தின் அதிபதியாகிய சத்துருவோ, அந்தச் சாயலைக் கறைபடுத்தவும், தன்னுடைய சாயங்களை அதன் மீது பூசி அதனை தனக்குக் கீழ்ப்படுத்திவிடவும் முயற்சிக்கிறான்; இதற்கு ஒதுபோதும் நாம் அடிமையாகிவிடக்கூடாதே! 

பிரியமான வாலிபரே! தம்மைப் போல மாற்றவே தேவன் உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார் என்பதே வேதத்தின் சத்தியம். 'தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்" (யோவான் 1:18) என்று வாசிக்கின்றோமே; தன்னுடைய வார்த்தைகளிலும், செயல்களிலும், நற்காரியங்களிலும் பிதாவையே வெளிப்படுத்தின அந்தக் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் போல மாறுவதற்கும் வாழுவதற்கும் நம்மை அர்ப்பணிப்போமென்றால், தேவனுடைய சாயலை நம்முடைய வாழ்க்கையில் நிச்சயம் நாம் வெளிப்படுத்த முடியும். இந்த உலகத்தினால் கறைபட்ட நம்மை கழுவுவதற்கும், பாவங்களை நீக்கி நம்மைப் பரிசுத்தமாக்குவதற்கும், இரட்சிப்பின் வஸ்திரத்தை நமக்கு உடுத்துவிக்கிறதற்கும்தானே தேவன் தன்னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இந்த உலகத்திற்கு அனுப்பித்தந்தார். வழியாகிய அவரது வழிகளிலேயே வாழ இந்த வாலிபத்தின் நாட்களை அர்ப்பணிப்பது,  அவரது சாயலை உங்களது வாழ்க்கையில் பிரதிபலிக்கச்செய்துவிடுமே!  

அதுமாத்திரமல்ல, அவரை ஏற்றுக்கொண்டவர்களாகவும், அவரையே மாதிரியாகவும் கொண்ட வாழ்க்கை, 'நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்" என்ற நிலைக்கும், 'அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்" என்ற நிலைக்கும், 'மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி" (மத் 5:14-16) என்ற நிலைக்கும், உங்களுடைய வாலிபத்தின் தரத்தை உன்னதம் விரும்புகின்ற தரத்திற்கு உயர்த்திவிடும் என்பதும் உண்மையே! 'என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்" (யோவான் 15:4) என்றார் இயேசு கிறிஸ்து. அப்படியென்றால், நாம் அவரில் நிலைத்திருப்போமென்றால், அவரையே மாதிரியாகக் கொண்டிருப்போமென்றால்  நம்முடைய வாலிபத்தின் நாட்கள் அதிகக் கனிகளைக் கொடுக்கிறவைகளாக மாறிவிடுமே! அதனால் பரலோகம் களிகூருமே! அப்படிப்பட்ட வாழ்க்கைக்குள் உங்கள் ஒவ்வொருவரின் வாலிபத்தையும் தேவன் வழிநடத்துவாராக! அறுவடை நாளில் பதராய் அல்ல, கோதுமையாய் களஞ்சியத்தில் சேர்க்கப்படட்டும் உங்கள் வாழ்க்கை. 

                                                                                                                                           -எலிசபெத்

 

June 2025


            

 கிறிஸ்துவில் பிரியமான வாலிப சகோதர சகோதரிகளே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துகள். தேர்வு முடிவுகள் உங்கள் கரங்களை வந்தடைந்திருக்கும் என்று நினைக்கிறேன். பெற்றோரின் விருப்பங்கள், உறவினரின் எதிர்பார்ப்புகள், மூத்தோரின் அறிவுரைகள் மற்றும் நண்பர்களின் ஆலோசனைகள் என்ற சூழ்நிலைகளின் மத்தியில், எதிர்காலத்தைக் குறித்தும் மற்றும் என்ன பயிலலாம் என்பதைக் குறித்தும் நீங்களும் ஆழ்ந்து  சிந்தித்துக்கொண்டிருக்கும் வேளையில் இம்மடல் உங்கள் கரங்களை வந்தடையும் என நினைக்கிறேன். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்றுவிட்டோம் என்ற வெற்றிக் களிப்பில் ஒருசிலரும், விரும்பின அளவிற்கு மதிப்பெண்கள் கிடைக்கவில்லையே என்ற வருத்தத்துடன் வேறு சிலரும் மற்றும் தோல்வியைச் சந்தித்ததினால், எதிர்காலம் என்னவாகுமோ? என்ற பயத்துடனும் சிலரும் இந்நாட்களில் ஒருவேளை காணப்படக்கூடும்.   

'குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்' (நீதி. 21:31) என்று வேத வசனத்தின்படி, எத்தனையாய் நீங்கள் ஆயத்தப்பட்டீர்களோ, அத்தனையான பதில் நிச்சயம் உங்களுக்கு அளந்துகொடுக்கப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. என்றபோதிலும், எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான பலனை அடைந்திருப்பீர்களென்றால், தொடர்பயணத்தில் தொய்வு காட்டிவிடாமல் முன்னேறிச்செல்வதில் நீங்கள் உறுதியாயிருக்க உங்களை உற்சாகப்படுத்துகிறேன். 'வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு", 'முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்", 'அடிக்க அடிக்க அம்மியும் நகரும்", 'எறும்பு ஊரக் கல்லும் தேயும்" என்ற பழமொழிகள் அனைத்தும் நம்மிடம் காணப்படவேண்டிய தொடர் முயற்சிகளைத்தானே முன்வைக்கின்றன. 

'படிப்பதற்கே தகுதியற்றவன்" என்று ஆசிரியர்களால் தள்ளப்பட்ட தாமஸ் ஆல்வா எடிசனின் 1000 முறைக்கும் மேலான தொடர் முயற்சிகளின் விளைவினால் கண்டுபிடிக்கப்பட்டதுதானே மின்விளக்கு, அதுபோலவே, K.F.C கர்னல் சாண்டர்ஸ், இவரது Chicken உணவு ஏராளமான உணவகங்களில் நிராகரிக்கப்பட்டது; என்றபோதிலும், தன்னம்பிக்கை இழக்காமல் அவர் முயற்சித்ததின் பலனால், உலகப்பிரசித்திப் பெற்ற உணவகமாக KFC உருவாகிவிட்டதே! மேலும், உலகப் புகழ்பெற்ற 'மிக்கி மவுஸ்" கார்டூன் படைப்பாளி மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் நிறுவனர் வால்டர் எலியாஸ் டிஸ்னி, 'படைப்பாற்றல் இல்லை" என்ற காரணத்திற்காக பத்திரிக்கை வேலையை இழந்தவர். என்றபோதிலும், தொடர் முயற்சினால், Walt Disney Company என்ற உலகப் புகழ்பெற்ற பொழுதுபோக்கு நிறுவனம் உருவாகக் காரணமானதுடன், 22 அகாடமி விருதுகளையும் மற்றும் 2 ஆஸ்கர் விருதுகளையும்; பெற்றார். எனவே வாலிபரே! தோல்விகள் உங்கள் தொடர்பயணத்தை நிறுத்திவிடக்கூடாது.

எலிசா இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி, 'உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்று சொல்லி, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து: ஜன்னலைத் திறவும், எய்யும்" என்று சொன்னபோது, அது கர்த்தருடைய ரட்சிப்பின் அம்பும், சீரியரினின்று விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமானது. ஆனால், 'அம்புகளைப் பிடியும்" என்று அவைகளை இஸ்ரவேலின் ராஜாவின் கைகளில் கொடுத்து, 'தரையிலே அடியும்" என்று எலிசா சொன்னபோது, தன்னுடைய கரங்களால் மாத்திரம் அம்புகளைப் பிடித்திருந்த இஸ்ரவேலின் இராஜா மூன்றுதரம் அடித்து நின்றுவிட்டான். அப்பொழுது தேவனுடைய மனுஷனாகிய எலிசா அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசைமாத்திரம் முறிய அடிப்பீர் என்றான் (2இராஜா. 13:16-19). பிரியமான வாலிபரே, யாராவது ஒருவர் நமக்கு உதவிசெய்யும்போது, ஊக்கப்படுத்தும்போது அல்லது உடனிருக்கும்போது ஒருவேளை 'நம்மால் முன்னேறிச் செல்வதும் ஓடுவதும் எளிதாயிருக்கக்கூடும்"; ஆனால், 'இஸ்ரவேலின் ராஜாவின் கைகளில் அம்புகள் கொடுக்கப்பட்டதுபோல" நம்முடைய கரங்களில் மாத்திரம் காரியங்கள் விடப்படுமென்றால், நம்முடைய தொடர் முயற்சி எத்தகையதாயிருக்கும்? இஸ்ரவேல் ராஜாவைப் போல மூன்றுதரம் மாத்திரமே அம்புகளை அடித்துவிட்டு, 'போதும்" என்று நிறுத்திக்கொள்ளுவோமா? அல்லது, தீர முறியடிக்கும்வரை அதாவது வெற்றிபெறும்வரை நாம் செயல்பட்டுக்கொண்டேயிருப்போமா? வாலிபரே! உங்களது தொடர் முயற்சிகள் நிச்சயம் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும் என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம். 

பேதுரு இயேசு கிறிஸ்துவின் நெருங்கிய சீடனாக இருந்தபோதும், மூன்று முறை அவரை மறுதலித்தவன் (லுக்கா 22:61-62). என்றபோதிலும், வருத்தத்துடன் மனங்கசந்து அழுதபோது (மத். 26:75), 'என் ஆடுகளை மேய்ப்பாயாக' என்ற பெரும்பணி பேதுருவினிடத்தில் ஒப்படைக்கப்பட்டதே (யோவான் 21:15-17). மறுதலித்த பேதுரு ஆண்டவருக்காக மரிப்பதற்கும் ஆயத்தமாக மாறிவிட்டானே! இத்தகையத் திருப்புமுனை வாலிபரே உங்கள் வாழ்க்கையிலும் உண்டாகக்கூடும்; எனவே, செய்துவிட்ட தவறுகளையும் மற்றும் நடந்து முடிந்த நிகழ்வுகளையும் மனம்வருந்தி விட்டுவிட்டு, முன்னேற்றப் பாதையில் அடியெடுத்துவையுங்கள். 

தாவீது அரசனாக அபிஷேகம்பண்ணப்பட்டவன்; என்றபோதிலும், கண்களின் இச்சையில் இழுப்புண்டு உரியாவின் மனைவியாயிருந்த பத்சேபாளிடத்தில் பாவத்தில் விழுந்ததோடு, அவளை தன்னுடையவளாக்க, அவளது கணவனான உரியாவைக் கொல்லவும் ஏற்பாடுகளைச் செய்தான் (2 சாமு. 11 அதி.). ஆயினும், நாத்தான் தீர்க்கதரிசியின் மூலமாக தேவன் அவனோடு பேசினபோது, பாவத்தை ஒத்துக்கொண்டு, திருந்தி வாழ தன்னை அர்ப்பணித்ததினால் (சங்கீதம் 51), அவருடைய சந்ததியில் இயேசு கிறிஸ்து பிறக்கும் பாக்கியத்தைப் பெற்றுவிட்டானே! 

யோனா அழைப்பிலிருந்து விலகி ஓடிய ஒரு தீர்க்கதரிசி; என்றபோதிலும், தேவன் யோனாவை அவனது வழியில் விட்டுவிட்டு அமைதியாக இருந்துவிடவில்லை; மாறாக, புயலைக்கொண்டு தடுத்தார். வழிமாறிச் சென்றபோது கப்பலில் சென்றவன், தேவனால் வழிமறிக்கப்பட்டு மீனின் மூலமாக நினிவே பட்டணத்திற்குத் திருப்பப்பட்டபோது, தன் தவற்றை உணர்ந்த யோனா, மீனின் வயிற்றில் ஜெபித்தான் (யோனா 2:1). நினிவே பட்டணத்தார் மனந்திரும்பிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு யோனாவுக்கு இல்லைதான்; என்றாலும், தேவன் அவன் மூலமாக நினிவே மக்களுக்குக் கொடுத்த எச்சரிப்பு அவர்களை மனந்திரும்பச் செய்துவிட்டதே! 

வாலிபரே! நீங்களும் தவறுகளில் தேங்கி நிற்காமல், தேவனண்டை நெருங்கிச் சேருவீர்களென்றால், தேவன் காட்டும் திசையில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளுவீர்களென்றால் உங்களையும் தேவன் இவர்களைப் போல பயன்படுத்தக்கூடும், நீங்களும் தேவன் கரத்தில் உபயோகமான பாத்திரங்களாக மாறுவது நிச்சயம்.  

                                                                                                                 

     P. J. கிருபாகரன்

MAY 2025

 கிறிஸ்துவில் பிரியமான தம்பி, தங்கச்சி உங்களைச் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த மே மாதத்தில் எங்கேயாவது சுற்றுலா செல்லவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறீர்களா? ஜம்மு காஷ்மீர், சிம்லா போன்ற இடங்களில் பனி பெய்கின்ற காலங்களில் குடும்பத்தோடு அல்லது நண்பர்களோடு சுற்றுலாவுக்கு வருகிறவர்கள் பனி பொம்மைகளைச் செய்தும் மற்றும் பனி உருண்டைகளை வைத்து ஒருவர் மேல் ஒருவர் வீசியும் விளையாடுவார்கள். நான் ஒரு காணொளியில் பனிப் பந்துகளைக் குறித்து கவனித்தேன். அதில் ஒருவர் ஒரு சிறிய பனிப் பந்தை உருவாக்கி அதை உருட்டிவிடுகிறார்; அது உருண்டுபோகும்போது, அதிக பனித்துகள்களைச் சேர்த்து சேர்த்து மிகப்பெரிய பனிப் பந்தாக மாறிக்கொண்டே போனதைப் பார்த்தேன்; மிகவும் அழகாக இருந்தது. உளவியலில் 'பனிப் பந்து விளைவு' என்பதைக் குறித்து மிகவும் அழகாக விளக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொருவரின் வாழ்விலும் எடுக்கும் சிறிய முடிவுகள் மற்றும் அறியாமலேயே கடைப்பிடித்துவரும் பழக்கவழக்கங்கள் அல்லது நிகழ்வுகள் எவ்வாறு படிப்படியாக குறிப்பிடத்தக்க விளைவுகளை நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ உண்டாக்க வழி வகுக்கும் என்பதையே இது குறிக்கிறது. 

இளைஞர்களாகிய நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நல்ல கனவுகளை உடையவர்களாக இருக்கலாம்; வெகுவிரைவில் அது சாத்தியமாகவேண்டும் என்றும் நீங்கள் விரும்பலாம்; சாதிக்க முடியாமல் வீழ்ச்சியடைந்து விடுவேனோ என்ற பயமும் உங்களுக்குக் காணப்படலாம்; குறிப்பாக தேவன் உங்களுக்கென்று வைத்திருக்கும் திட்டத்தை அறிந்து அதை நிறைவேற்றவும், தேவனுடைய பரிபூரணமான ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளவும் மிகவும் வாஞ்சையோடு  எதிர்பார்த்துக்கொண்டிருக்கலாம். என்றபோதிலும், உங்கள் வாழ்வின் உயர்வும் வீழ்ச்சியும் ஒரே நாளில் கிடைப்பதோ அல்லது நடந்து முடிவதோ இல்லை. துவக்கத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளே உங்களது எதிர்காலப் பாதையினை வடிவமைக்கக் கூடியவைகளாக உள்ளன. வேதாகமத்திலிருந்து இரண்டு உதாரணங்களைக் கூற விரும்புகிறேன். 

 1. ஆசீர்வாதத்தை அலட்சியம் பண்ணின ஏசா : ஆதியாகமம் 25 : 28 - 34

நன்றாக வேட்டையாடுகிறவன், நன்றாகச் சமைக்கிறவன், தகப்பன் நேசித்த மகன், சேஷ்ட புத்திர  பாகத்தின்  சுதந்திரவாளி.......  இப்பொழுதோ வேட்டையாடி மிகவும் களைத்துப்போய் இருக்கிறான். இந்த வேளையிலே களைப்பின் எண்ணங்கள்தான் மேலோங்கி இருக்கின்றன. கண்ணுக்கு எதிரே சிவப்பான கூழ்..... சரீரத்திலோ களைப்பு..... தன்னையே மறந்தவனாய் அந்தக் கூழிலே சாப்பிடக் கொஞ்சம் தா என்று கேட்கிறான் ஏசா... இப்பொழுது இருக்கிற நிலைமைக்கு எனக்கு  சிவப்பான கூழ் தான் வேண்டும்... இந்த  சேஷ்ட புத்திர பாகம் எனக்கு  என்னத்துக்கு.....? என்றுதான் ஆரம்பிக்கிறது ஏசாவின் அலட்சிய வார்த்தைகள்.... பின்னர் தொடர்ந்தது ஏசாவின் அலட்சியம்... தன் சகோதரனாகிய யாக்கோபுக்கு ஆணையிட்டு, சேஷ்ட புத்திர பாகத்தை விற்றுப்போட்டான் (எபிரேயர் 12 : 16,17). ஏசாவின் வாழ்வில் காணப்பட்ட அலட்சியத்தினால், அவனுடைய தகப்பன் ஈசாக்கின் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது. 

  பிரியமான வாலிபத் தம்பி தங்கச்சியே! நாம் காண்கின்ற இந்த உலகம் இப்படிப்பட்ட தற்காலிக எண்ணங்களால் சிதைந்து கிடக்கிறது. ஒரு கண நேர ஆசை, உணர்வின் அடிப்படையில் தூண்டப்பட்டு, தொடர்ந்து செய்யப்படும் செயல்கள் வாழ்நாள் முழுவதும் கண்ணீர் வடிக்கும் தவறான முடிவுக்கு நேராய் நம்மைக் கொண்டுபோய்விடுகிறது. கட்டுப்படுத்த முடியாமல்  திடீரென்று வரும் கோபம் அதிகமாகி, என்ன செய்வதென்று தெரியாமல், அன்பான உறவுகளையும் உடைத்துவிடுகிறது. தற்காலிக ஆசைகள் அல்லது உணர்வுகள் நம் வாழ்வின் நிரந்தர முடிவை எடுக்க நாம் அனுமதிக்க கூடாது. மன அழுத்தத்துக்கு மறுபடி மறுபடி இடம் கொடுத்து மனச்சோர்வு உண்டாகிறது. தவறான ஒரு நண்பனின் சகவாசம், பின்பு தவறான கூட்டத்தோடு பழக வைத்து கல்வியிலும் ஆவிக்குரிய வாழ்விலும் வீழ்ச்சிக்கு நேராய் நடத்துகிறது. பிழைகள் குற்றங்கள் ஆகி, பின்பு துணிகரமானப் பாவங்களைச் (சங்கீதம் 19 : 12,13) செய்யவைத்து, முடிவில் பெரும் பாதகமாக மாறிவிடுகிறது. அருமையான தம்பி, தங்கச்சி, தற்காலிக உணர்வுகள் உன்னை தவறான முடிவுக்கு கொண்டுபோய்விடும்; எனவே ஒருபோதும் அலட்சியமாக இராதே!

   2. ஆசீர்வாதத்தை நாடின யாக்கோபு : ஆதியாகமம் 25 : 31 - 34

ஏசா சேஷ்ட புத்திர பாகத்தை அலட்சியப்படுத்தினான். ஆனால், அவன் சகோதரனாகிய யாக்கோபு அதை ஆவலோடு விரும்பினான்.  அதைக் குறித்த மகத்துவத்தை அவன்  அறிந்திருந்தான். தேவன், நாம் எதை விரும்புகிறோம், எப்படி விரும்புகிறோம் என்பதைக் கவனித்துப் பார்க்கிறார். யாக்கோபு ஆசீர்வாதமாக இருக்க விரும்பினான்; அதைப் பெற்றுக் கொள்ளும்படியாக வந்த ஒவ்வொரு வாய்ப்புகளையும் கவனமாகப் பயன்படுத்திக்கொண்டான்;அதற்காகப் போராடினான் (ஓசியா 12 : 3,4), கெஞ்சினான், தன் பெற்றோருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தான், தேவ சத்தத்துக்கும் அப்படியே கீழ்ப்படிந்தான். தேவன் தன்னை ஆசீர்வதிக்கும் வரைக்கும் போராடி மேற்கொண்டான். 'இஸ்ரவேல்' என்னும் பெயர் பெற்றான்.

பிரியமான வாலிபத் தம்பி தங்கச்சியே! நம்முடைய வாழ்க்கையிலும் தொடர்ச்சியான ஜெப வாழ்க்கை, தொடர்ந்து பரிசுத்தமாய் வாழ எடுக்கும் முயற்சி, வேத வசனத்தைத் தினமும் தியானிக்கும் வாஞ்சை, தேவனுக்கு அடுத்த காரியங்களில் வாஞ்சையோடு ஈடுபடுதல், மற்றவர்களைக் குறித்த கரிசனையோடு நாம் செய்யும் சிறிய சிறிய சேவைகள்..... இவைகள் நம்முடைய வாழ்க்கையை முடிவில் கிறிஸ்துவைப் போல மாற்றுகிறது. தேவன் நமக்கென்று வைத்த திட்டத்தை நம் மூலமாக நிறைவேற்றுவதோடு, தேவனுடைய முழு ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொள்ளும் இடத்தில், உயர்ந்த ஸ்தானத்தில் நம்மைக் கொண்டுபோய் விடுகிறது.

டேவிட் லிவிங்ஸ்டனின் வாழ்க்கையை உங்களுக்கு ஒரு உதாரணமாக எடுத்துக் கூற விரும்புகிறேன். சாதாரண ஏழ்மை நிலையில் துவங்கினது அவரது வாழ்க்கை, முடிவிலோ ராஜ மரியாதையோடு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. குடும்பத்தின் ஏழ்மையின் காரணமாக ஒரு பருத்தி ஆலையில் அவர் வேலை செய்ய நேரிட்டது. கிடைக்கின்ற கொஞ்ச இடைவெளி நேரத்திலும் அவர் தான் நேசித்த வேத புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தார். இதை கவனித்த அவரது முதலாளி, இடைவெளி நேரத்தில் ஏன் இந்த வேத புத்தகத்தைப் படிக்கிறாய்? என்று கேட்டபோது, 'நான் சங்கீதம் 119-ஐ மனப்பாடமாகச் சொன்னதினால் எனக்கு இந்த வேத புத்தகம் பரிசாக கிடைத்திருக்கிறது" என்றார் டேவிட் லிவிங்ஸ்டன். இதைக் கேட்டவுடன் அவரது முதலாளி அவருக்கு வேத புத்தகத்தை படிக்க அனுமதி கொடுத்தார். எந்தச் சூழ்நிலையிலும் வேத வசனத்தைப் படிக்கும் பழக்கத்தை  அவர் விட்டுவிடவில்லை. பின்னர் படித்து டாக்டராகப் பட்டம் பெற்றார்.

தன் ஏழ்மையில் டாக்டர் பட்டம் பெற்றதை வைத்து, நன்றாகப் பணம் சம்பாதித்து அவர் செல்வச் செழிப்பாக வாழ்ந்திருக்கலாம். ஆனால், தான் தொடர்ந்து தியானித்து வந்த வேத வார்த்தைகள், அவரை தேவையில் உள்ள ஜனங்களுக்கு சேவை செய்ய ஊக்குவித்தது. அவருடைய நெருங்கிய நண்பர், டேவிட் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காவுக்கு மிஷனரியாகச் செல்வதை அறிந்து மிகவும் வேதனைப்பட்டு அவரை கடிந்துகொண்டார். ஆனால், டேவிட் லிவிங்ஸ்டனோ தேவன் விரும்புகிற சரியான முடிவை எடுக்கவே விரும்பினார். தேவனோடு தொடர்ந்து அவர் வைத்துக்கொண்ட உறவு மற்றும் வேத வார்த்தைகளை தொடர்ந்து வாசித்து தியானித்த பழக்கம் அவருடைய வாழ்க்கையை தேவ சித்தத்தின் மையத்தில் திடமாக நிற்கவைத்தது. 

  அருமையான தம்பி, தங்கச்சி உங்களை சிருஷ்டித்த தேவன், உங்கள் ஒவ்வொருவரையும் குறித்து மிகப் பெரிய திட்டத்தை வைத்திருக்கிறார். நீங்கள் ஒவ்வொருவரும் தேவனுடைய பார்வையில் மிகவும் விலையேறப் பெற்றவர்கள். எனவே, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவைக் குறித்தும் மிகவும் கவனமாக இருங்கள். அவசரப்பட்டு உணர்வின் அடிப்படையில் மட்டும் முடிவுகளை எடுக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கடைப்பிடிக்கும் சிறிய, சிறிய ஆவிக்குரிய நல்ல பழக்கங்கள் உங்களை மிகவும் பெரிய, உன்னத நிலைக்கு நிச்சயம் கொண்டு போய்விடும். இந்த வாலிப வயதில் சரியான முடிவுகளை எடுக்க, அதைக் கடைப்பிடிக்க, பழக்கமாக்கிக் கொள்ள தேவன் உங்களுக்கு உதவி செய்வாராக. தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக !