வால வயதின் குமாரராம் இன்றைய வாலிபச் செல்வங்களுக்கு, பலவான் இயேசுவின் கையில் கூர்மையான அம்புகளாய் மாற வாழ்த்துக்கள்!
இரண்டாவது தானா? நீங்க First இல்லீங்களா? பரவாயில்லீங்க..
Name list - ல் இவரும் யாக்கோபு, எப்பிராயீம் போல இரண்டாவது இடம்தான். எப்பிராயீம், அண்ணன் மனாசே பிறந்து மாதங்களோ அல்லது வருடங்களோ கழித்து பிறந்து இருக்கலாம். ஆனால், யாக்கோபு ஒரே பிரசவத்தில், ஒரே நாளில், ஏன் ஒரே நேரத்தில் சில நிமிஷங்களுக்காகப் போராடி இரண்டாவது இடம் பெறுகிறார். ஆனால், கர்த்தரின் கண்களோ, அதாவது பரலோகத்தின் பார்வையோ, இவர்களையே முதலாவதாகப் பார்த்தது.
தம்பி, தங்கச்சி! நீங்கள் ஸ்கூல் மற்றும் காலேஜ் படிப்பில் அல்லது விளையாட்டில் 2nd ரேங்க் வாங்கினபோது, உங்கள் அம்மா அப்பா கண்டிப்பாகக் கேட்டிருப்பாங்க, 1st Rank எடுக்கவில்லை? என்று; 'அப்படித்தானே?
ஒலிம்பிக் வெற்றி மேடை (Victory Stand) போன்ற ஒரு வெற்றி மேடையில் மூன்று பேர் நிற்கிறார்கள். ஆனால், முதலாவது மற்றும் மூன்றாம் இடங்கள் திடீரென்று காலியாகி, இரண்டாம் இடம் பெறுபவர் மாத்திரம் நிற்கிறார் என்றால், எப்படி இருக்கும் இந்த சீன்...? பின்னால் நான்காவது இடம் பெறுபவரும் மிஸ்ஸிங் லிஸ்டில் சேர்ந்து விட்டாரென்றால் என்னவாகும்? என்ன புதிராக இருக்கிறதா.... ?
ஆம், மூத்தவனாகப் பிறந்த தாவீதின் குமாரன் அம்னோன் அம்போ தான், சொந்த உறவுகளைக் கூட பாசமாகப் பார்க்காமல், மோகம் கொண்டு பார்த்து, கோமாளியாகிக் கோட்டை விடுகிறான். மூன்றாம் இடத்தில் அப்சலோம் absent ஆகிறான்... ரொம்ப handsome எல்லாரையும் ஈசியாக மயக்கி ஏமாற்றி, மனங்களைக் கவர்ந்து, கட்டிப் பிடித்துத் தழுவி முத்தம் கொடுத்து விட்டு (attractive); ஆனால், தந்தையையே கொலை செய்து, தானே அரசனாகி ஆளவேண்டும் என்று வெறியாட்டம் ஆடி, அந்தரத்தில் தலை போய்விட்டது. அதோனியாவின் கதியோ அந்தோ! அதோ கதிதான்! கர்த்தரே முன்னறிந்து தெரிந்துகொண்ட தம்பி சாலொமோனை ஏற்றுக்கொள்ள முடியாத அதோனியா, அட்ரஸ் இல்லாமல் போய்விட்டான். இப்போது, இரண்டாம் இடத்தில் தானியேலோ நிலைத்து, நிமிர்ந்து நிற்கிறார்!! யாருங்க இவங்க எல்லாரும்...? இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டாரே, அந்த தாவீது ராஜாவின் முதல் பிறந்த ராஜகுமாரர்கள் தான் இவர்கள். (1 நாளா. 3:1-3)
வேதத்தில் தானியேல் என்ற பெயரில் வரும் முதல் நபர் இவரே. இவருக்கு கீலேயாப் என்று இன்னொரு பெயரும் உண்டு (2 சாமுவேல் 3:3). இன்று உலகம் முழுவதும் எண்ணடங்கா நபர்கள் தானியேல் என்று பெயர் வைத்ததில், இன்னும் வைப்பதில் பெருமை அடைந்துவருகின்றனர். வேதத்தில் இரண்டு மூன்று தானியேல்கள் இருக்கின்றனர். ஆனால், நட்சத்திரத் தானியேலாக இருப்பவர் பின்னால் வரும் தானியேல் தீர்க்கதரிசி. இருவருமே ராஜ குடும்பத்தில் பிறந்த இளவரசர்கள். தானியேல் தீர்க்கதரிசி அதே ராஜ குடும்பத்தில் தாவீதின் யூதப்பரம்பரையில் பின்னால் வந்தவர். இவர் பெயர் கூட முன்னால் உள்ள தானியேல் என்ற இந்த நபரை பார்த்து வைத்து இருக்கலாம். (வேதத்தில் நம் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு ... தாவீது... போன்றவர்களுடைய பெயர்கள், மீண்டும் இன்னொரு நபருக்கு வைக்கப்படவில்லை. ஏன் என்று தெரியவில்லை. ஆனால், இவர் பெயரோ மீண்டும் வருவது ஆச்சரியத்திற்குரியது!)
12 கோத்திரங்களில் ஒருவர் 'தாண்". அதன் அர்த்தம் 'நியாயாதிபதி". ஆம் தாண் கோத்திரத்தில் தான் சிம்சோன் என்று நாம் நன்கு அறிந்த ஸ்டார் நியாயாதிபதி வருகிறார். (நியாயாதிபதிகளின் நாட்களில் கர்த்தரை விட்டுத் தங்களுக்கு சுரூபங்களை உண்டாக்கிக் கொண்ட தாண் கோத்திரத்தார், வெளிப்படுத்தலில் வரும் முத்திரை போடப்பட்டோர் பட்டியலில் இல்லாமல் போய்விட்டார்கள்). ஆனால் 'தானியேல்" என்ற பெயரின் அர்த்தம் 'கர்த்தரே என் நியாயாதிபதி"! இந்தப் பெயரிலேயே எத்தனை பெரிய வெளிப்பாடு! கர்த்தரே நீதி செய்பவர்!! கர்த்தரே நியாயாதிபதி!!! என்று வேதத்தில் மீண்டும் மீண்டும் நாம் பார்க்கிறோம்.
இவர் பின்னணியில் இருந்தது கண்டிப்பாக அவரது தாயார்: வேதத்திலே ஒரு சிறந்த பெண்மணியாக, ரூபவதியாக 'மகா புத்திசாலி" என்று வர்ணிக்கப்பட்ட அபிகாயில் தான். 1 சாமுவேல் 25:28,31 - இங்கே அபிகாயில் பேசின வார்த்தைகளில் இருந்து நாம் இதை நன்றாக அறிந்து கொள்ள முடியும். அவர் தாவீதுக்குச் சொல்லிய புத்திமதி என்ன? கர்த்தரின் யுத்தங்களை நடத்தும் தாவீது- விருதாவாக இரத்தம் சிந்தக்கூடாது, பழிவாங்கவும் கூடாது. (No Revenge - Avenge). அப்போதுதான் அவருக்கு துக்கமும், மனஇடறலும் (No grief - nor offense) இராது. தாவீதின் மற்ற பிள்ளைகள் விழுந்துபோக இவைகள் தானே காரணம்! தாவீது கர்த்தரின் யுத்தங்களைத் தான் செய்தார். ஆனாலும், கர்த்தருக்கு ஆலயம் கட்ட ஆசைப்பட்ட தாவீதுக்கு கர்த்தர் சொன்னது என்ன? (1 நாளா. 28:3) நீ யுத்த மனுஷனாய் இருந்து ரத்தத்தைச் சிந்தினாய், எனவே நீ கட்ட வேண்டாம். தீர்க்கதரிசி நாத்தான் சொல்லும் முன்னே (2 சாமுவேல் 7:11-13 ), அபிகாயில், 'தாவீதுக்கு கர்த்தர் நிலையான வீட்டை நிச்சயமாய் கட்டுவார்" (1 சாமுவேல் 25:28) என்று எத்தனை திட்டவட்டமாகக் கூறிவிட்டாள் பாருங்கள். தொலைதூரப் பார்வையும், தீர்க்கதரிசனமான வார்த்தைகளும் அபிகாயிலிடம் இருந்து வந்தன. தாவீதுக்கு மனைவியாகி அபிகாயில் பெற்ற பிள்ளை தானியேலுக்குள் அந்த விதைகள் ஆழமாக வேர் விட்டிருந்தது. எத்தனை தான் காஷ்மீரின் மேக வெடிப்பினால் (Clouds burst) உண்டாகும் பெருவெள்ளமே (floods) வந்து மோதினாலும் தானியேல் விழுந்து போகவில்லை.
இன்றைய உலகில் நட்சத்திரங்கள் போல ஜொலித்து வெளி உலகத்தாலும் அறியப்பட்ட அநேக வாலிபர்கள் ஆராதனை வீரர்களாகவும், புதுப் புதுப் பாடல்களை இயற்றுபவர்களாகவும் மற்றும் ஆங்காங்கே பிரசங்கிகளாகவும் எழும்புகிறார்கள். ஆனால், அவர்களில் அநேகர், மழைக்காலங்களில் திடீரென்று முளைக்கும் காளான்கள் போல முளைத்துப் பின் காணாமல் போய்விடுகிறார்கள். Name & Fame பின்னால் போய், பின் சீனிலே இல்லாமல் போய்விடுகிறார்கள். Lime-lite வெளிச்சத்தில் மிதந்து பின் கர்த்தரால் பயன்படுத்த முடியாத, அவர் சித்தம் செய்யாத, அவருக்குப் பிரியமில்லாத, பிரயோஜனமற்ற இடத்திற்குச் சென்று விடுகிறார்கள். ஆனால், நீயோ தேவனுடைய மனுஷனே இவைகளை விட்டு ஓடு...! (1 தீமோ 6:11,12 & 2 தீமோ2:22)
வாலிபத் தம்பித் தங்கையே! இச்சையின் கோரப் பிடிகளில் மற்றும் பலவித addictions -ல் இன்னும் சிக்கித் தவிக்கிறாயோ? பழிவாங்கப் பிடிவாதமாய் துடிக்கிறாயோ? விரிந்த கைகளோடு உனக்காகக் காத்திருக்கும் அன்பான அப்பாவிடம் வந்து விழுந்து விடு. விழுந்த உன்னைத் தூக்கி நிறுத்தி நிலைத்து நிமிர்ந்து நிற்க வைப்பார். இதை சற்றும் சந்தேகப்படாமல் நம்பிவிடு; உன்னை விட்டு விலகாத, கைவிடாத தெய்வம் கூட இருக்கிறார்.
இந்த தானியேலின் பெயர், அவர் என்ன செய்தார் என்று மீண்டும் விளக்கங்கள் வேதத்தில் இல்லை தான். 2 சாமுவேல் 8:18 -ன் படி, பின் நாட்களில் இவர் தாவீது ராஜாவின் ராஜ்யத்திலே, இஸ்ரவேல் நாட்டிலே பிரதானியாக அதாவது ஒரு முதலமைச்சராக (chief minister/priest) இருந்ததாக வேதத்தில் சொல்லப்பட்ருக்கிறது. அதோடு கூட அவர் ஆசாரியராக இருந்ததாக ஆங்கில வேதாகமத்தில் குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆம், நாம் ராஜரீகமான ஆசாரியக் கூட்டமாயும் (Royal Priesthood), பரிசுத்த ஜாதியாயும், அவருக்கு சொந்த ஜனமாயும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அல்லவா! அநேகரை அந்தகாரத்தினின்று இரட்சிக்கத்தானே உன்னை நிறுத்தி வைத்திருக்கிறார்.
எல்லாருக்கும் நியாயமும் நீதியும் செய்துவந்த தந்தையைப் பின்பற்றி, மகன் தானியேலும் கடைசிவரை வாழ்ந்திருப்பார் என்று தெரிகிறது. சாந்தம், அமைதிக்கு சொந்தக்காரர்; அதிகம் வெளியில் அறியப்படாதவர் தான், திரைக்குப் பின்னால் இருந்தாலும் இறுதிவரை நிலைத்து நின்றாரே!
நீங்கள் 90 Kids அல்லது 2K Kids அல்லது GenZ எப்படிப்பட்டவராய் இருந்தாலும், இன்றைக்கு உங்களுக்கு இருக்கும் அதிகப்படியான சவால்கள் மற்றும் சோதனைகளில் விழுந்து விடாமல் நிற்பது என்பது எத்தனை பெரிய ஆறுதலான விஷயம். வழுவாதபடி உங்களைக் காக்கவும் தம்முடைய மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமை உள்ளவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு எல்லா மகிமையும் துதியும் உண்டாகட்டும்.(யூதா 24,25). இறுதி வரை அவர் சத்தம் கேட்டு, சித்தம் செய்ய கிருபை கிடைப்பதாக. ஆமேன்.




